October 01, 2006

சிட்னியில் குறுந்தொகை நாட்டிய நாடகம்

அன்பின் ஐந்திணையை ஆராதித்த சங்ககால இலக்கியமான குறுந்தொகை அகத்திணைப் பாடல்கள் அண்மையில் சிட்னியிலும் கன்பெராவிலும் நாட்டிய நாடகமாக ஆனந்தவல்லி அவர்களின் நெறியாள்கையில் அரங்கேறியது. நாடகம் பற்றிய தனது பார்வையை திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் அழகு தமிழில் இங்கு தருகிறார்.



யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாங் கலந்தனவே


உன்னுடைய அன்னையும் என்னுடைய அன்னையும்
ஒருவருக்கு ஒருவர் எப்படிச் சொந்தம்?
உன்னுடைய தந்தையும் என்னுடைய தந்தையும்
எப்படி உறவினர் ஆகினர்?
நீயும் நானும் ஒருவரை ஒருவர்
எப்படி அறிந்தோம்?
செம்மண் தரையிலே விழும் மழைநீர்
அம்மண்ணுடன் இரண்டறக் கலப்பது போல
எமது நெஞ்சங்களும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே.

இந்த அழகிய பொருள் செறிந்த பாடலை சங்க இலக்கியமான குறுந்தொகையில் பார்க்கிறோம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி சிறந்த கவி வளத்துடன் விளங்கியதை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கு பிரிவுகளுக்குள் ஏனைய மொழி இலக்கண ஆசிரியர் நின்றுவிட, தமிழ் இலக்கண நூலார் மட்டும் யாப்பில் பொருளுக்கும் இலக்கணம் வகுத்தார்கள்.

உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதல். எனவே அதை அகம் என்றும், அகம் அல்லாததைப் புறம் என்றும் இலக்கணம் வகுத்து, அகத்திணை, புறத்திணை என மக்கள் வாழ்க்கையையே பொருளாக அமைத்து, இலக்கியம் படைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்.

அந்தச் சான்றோரின் புலமை நுணுக்கத்தைக் காட்டும் குறுந்தொகை அகத்திணைப் பாடல்கள், லிங்காலயம் ஆனந்தவல்லியால் நாட்டிய நாடகமாக உயிர் பெற்ற போது மனதில் பல எண்ணங்கள் தோன்றின. புராணக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதாபாத்திரங்களையும், கடவுளரையுமே, பரதநாட்டியத்திலே பார்த்துப் பார்த்துப் பழகியவர்களுக்கு, சங்கப் பாடல்களுக்கும் இசை அமைத்து, ஆடல் வடிவம் கொடுக்கமுடியும் என்பது நல்லதொரு சிந்தனையாகத் தெரிந்தது.

தமிழ் மக்களின் வாழ்வில் அகப் பொருள் என்னும் காதல் அல்லது மணவாழ்க்கை, அன்பினைந்திணை எனப்பட்டது. இது புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என தூய காதல் ஒழுக்கங்களாகச் சிறப்பிக்கப்பட்டு, செய்யுளுக்குப் பொருளாக அமைந்தது. பண்டைய தமிழகத்தில் மக்கள் வாழ்ந்த நிலங்களான மலைப்பிரதேசம், காட்டுப் பிரதேசம், நீர் வளமும் நில வளமும் உள்ள வயல்கள், கடற்கரைகள், தண்ணீரற்ற வரண்ட நிலம் என ஐந்து வகையான இயற்கைப் பிரிவுகளுக்கு முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் தாவரப் பெயர்கள் வழங்கப்பட்டன. இவை நாளடைவில் அந்த அந்த இடங்களில் வாழ்ந்த மக்களின் காதலொழுக்கத்தைக் குறிக்க விசேடமாகப் பயன்படுத்தப்பட்டன. ஒரு நிலத்தில் எந்த ஒழுக்கம் சிறப்பாக இருந்ததோ அதனை அந்த நிலத்துக்கு உரியதாகக் கொண்டு சங்கச் சான்றோர் பாடல்களைப் பாடினார்கள். இதனால் குறிஞ்சிக்குப் புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும், நெய்தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் காதல் ஒழுக்கங்களாக வந்தன.

மக்களுடைய ஒழுக்கமும், மனோபாவமுமே செய்யுளுக்குப் பொருளாக அமைந்த காரணத்தால், ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுத்து இயற்கையின் அழகையும் இணைத்துப் பாடினார்கள். இந்தப் பாடல்கள் புலவர்களின் கூற்றாக அமையாது, தலைவன், தலைவி, தோழி, தோழன், செவிலித்தாய் போன்றோர் பேசுவது போல நாடகத் தன்மையோடு அமைந்திருக்கும். இதனால் அகத்திணைச் செய்யுள்கள், உலகியல் வழக்கத்தையும் நாடக இயல்பையும் கொண்டு அழகுடன் அமைந்திருந்தன.

இந்தவகையில், குறுந்தொகை இலக்கியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அன்பினைந்திணையைக் காட்டும் ஐந்து பாடல்களுக்கு இந்த நடனம் அமைந்திருந்தது. ஆறு பெண்களும், ஒரு ஆணும் மாறி மாறி, தலைவன், தலைவி, தோழி, செவிலித்தாய் என நடனமாடினார்கள். நடன அமைப்பு, பாடல், வர்ணனை என்பன கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமைந்திருந்தன.

நெய்தல் நிலத்துப் பெண்கள் தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடிய காட்சி இயற்கையோடு இணைந்து இரசிக்கும்படியாக இருந்தது. தண்ணீரில் தவறி விழுந்த பெண்ணை, தலைவன் காப்பாற்றியதும், அவர்களுக்குள் காதல் அரும்புவதும், தலைவனும் தலைவியும் மீண்டும் மீண்டும் சந்திப்பதும், தலைவன் பிரிவால் தலைவி வருந்துவதும், இதனை விரும்பாத தாயார் மகளைக் கண்டிப்பதும் நடனத்தில் அழகாக அமைந்திருந்தன.

தலைவனைப் பிரிந்து வருந்திக் கொண்டிருந்த தலைவிக்கு, தலைவனிட மிருந்து தோழன் நல்ல செய்தியைக் கொண்டுவந்து மகிழ்ச்சியளிக்கிறான். தோழனைப் பார்த்து “நீ உண்மையில் அவனைப் பார்த்தாயா” என்று தலைவி கேட்டதும், “இந்தச் செய்தியைக் கொண்டுவந்த உனக்கு கிடைத்தற்கரிய வெள்ளை யானையையே பரிசாகத் தரவேண்டும"; என்று அபிநயித்ததும் சிறப்பான காட்சி. பரத்தையர் ஒழுக்கத்தைக் கூறும் பொழுது “தலைவன் மீது நான் சுலபமாக மயங்கி விட்டேன். அவன் இப்பொழுது தனது குடும்பத்துடன் சேர்ந்து விட்டானே” என்று பரத்தையாக வருபவர் தன் மீது கோபங் கொள்ளுவதாக உணர்தியது மிகவும் இயல்பாக அமைந்திருந்தது.

Image Hosted by ImageShack.us
சேரன் சிறீபாலன், தான் ஒரு சிறந்த கலைஞர் என்பதைக் காட்டிவிட்டார். தலைவனாகத் தோன்றி, பலவித பாவங்களைக் காட்டியபோது பளிச்சென்று தனித்துவமான முத்திரையுடன் பிரகாசித்தார். நடனமாடிய ஸ்வேதா ராமமூர்த்தி, ஸ்வாதி பத்மநாபன், ஜெனிஃபர் வைட், அபிராமி ஸ்ரீகாந்தா, சாய்பிரியா பாலா, கவிதா சுதந்திரராஜ் என எல்லாப் பெண்களுமே, தனித்தனியாகவும், இணைந்தும் அழகாக ஆடினார்கள். ஆஹார்ய அபிநயமும் அவர்களுடைய நடனத்திற்கு மெருகூட்டியது. ஆனந்தவல்லியின் கற்பனைத் திறமை, அழகிய நடனக் கோர்வைகளும் பார்த்து இரசிக்கும்படி இருந்தன.

பண்டைத் தமிழரின் திருமணமும் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், குறுந்தொகை எழுந்த காலத்தில் தமிழ்ப் பண்பாட்டில் அக்கினி வளர்த்தல், அக்கினியை வழிபட்டு வலம் வருதல் முதலிய ஆரிய வழக்கங்கள் கலந்து பரவாத காலம் என்பதையும் கருத்திற் கொண்டு, இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

ஐவகை நிலத்திலும் காணப்பட்ட இயற்கை வளங்களைப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக இணைத்தது நல்லதொரு நாடக உத்தியாக இருந்தபோதும் நெய்தலில் தொட்டுக் காட்டியது போல ஐவகை நிலங்களையும் ஆடலின் ஊடாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அசையும் காட்சிகளாலும், அவற்றுக்கான ஒளி அமைப்பாலும், ஆடலில் தோன்றும் பாவங்களையும் பார்க்க முடியாமல் பலதடைவை பார்வையாளரின் கவனம் சிதறிவிட்டது என்றே கூறவேண்டும். ஐவகை நிலத்திற்கே உரிய தாவரம், பறவை, விலங்கினங்களும் பொருத்தமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

ஐந்து பாடல்களும், துண்டு துண்டாகத் தனித்து நிற்காமல், அவற்றுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தால் மேலும் இரசிக்கும்படியாக இருந்திருக்கும். தலைவன் தலைவி சந்திப்பது, பிரிவது, தாயார் கண்டிப்பது, பிரிந்ததால் இரங்குவது, பின்னர் சேருவது, திருமணம், பரத்தையர் உறவு என்று தொடர்பு படுத்தி இருக்கலாம்.

மறைந்த கவிஞர் A. K. ராமானுஜன் அவர்கள் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றை Interior Landscapes என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஓவ்வொரு காட்சியின் முன்னரும், இடையில் பாத்திரங்கள் வாயிலாகவும், ஆங்கிலத்திலே அவருடைய பாடல் வரிகளைக் கூறியதும், பேசியதும் சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது.

குறுந்தொகைப் பாடல்களுக்கு சீதாராம சர்மா இசை அமைத்திருந்தார். அருணா பார்த்திபன் (பாடல்), கோவிந்தராஜுலு (புல்லாங்குழல்), வரலக்ஷ்மி ஸ்ரீதரன் (வீணை), ரகுராம் சிவசுப்பிரமணியம் (மிருதங்கம்), பாலசங்கர் (தபேலா) ஆகியோர் இசை வழங்கினர். நடனம் முடியும் போது “செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்னும் வரிகள் அமைந்த அழகிய பாடலை இசைத்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

ஓர் இனத்தின் தொன்மைச் சிறப்பை விளக்குவதற்கு அவ்வினத்தின் தொன்மையான இலக்கியத்தைவிட வேறென்ன இருக்கமுடியும், என்ற எண்ணம் மனதை நிறைத்தது.
இவ்வேளையில், ஐவகை நிலங்களுக்கும் உரிய தொன்மையான ஆடல், பண் ஆகியவற்றுக்கான தேடலை தமிழ் அரங்கு இன்று வேண்டி நிற்கின்றது என்பதை உணரமுடிகிறது.

-பராசக்தி சுந்தரலிங்கம்

8 comments:

said...

ஆனந்தவல்லி நாட்டிய அர்ங்கில் பல புதுமைகளைப் புகுத்துபவர், மேற்கத்தயவர்களின் இரசனைக்கும் தீனி போடக்கூடியவர். திருமதி சுந்தரலிங்கத்தின் பதிவைத்தந்தமைக்கு நன்றிகள் அண்ணா.

said...

பிரபா,
வருகைக்கு நன்றிகள். சிட்னி முருகன் கோயில் ரவிக்குருக்கள் உங்கள் கருத்துக்களம் நிகழ்ச்சியில் இந்த நாட்டிய நாடகத்தைப்பற்றி நல்ல கருத்துக்களைக் கூறியிருந்தது ஞாபகம் வருகிறது. முக்கியமாக ஜெனிஃபர் என்ற அவுஸ்திரேலியப் பெண்ணின் நடனத்தைப்பற்றிப் புகழ்ந்திருந்தார். எமது பெண்களுக்கு சளைக்காமல் அவர் ஆடியிருந்தார். உள்ளூர் இசைக்கலைஞர்களின் இசை விருந்துடன் மொத்தத்தில் ஒரு நல்ல இலக்கிய விருந்தாக அமைந்திருந்தது இந்த நாட்டியம்.

said...

நம்நாடுகளில் சினிமாச்சகதியை மிதித்துக் கொண்டிருக்கையில்;புலம் பெயர் நாடுகளில் நம் தமிழர்;பழந்தமிழ் இலக்கியங்களுக்கு;நாட்டியவடிவம் கொடுத்து உயிரூட்டும் செய்தி"இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என உள்ளது. நிகழ்வை நடத்திய அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
தகவலுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

Anonymous said...

கனகர்,
அருமையான பதிவை இங்கிட்டதுக்கு நன்றி.
இன்னும் இக்கலைகள், இலக்கியங்களுக்கு மதிப்பு இருப்பது மகிழ்ச்சி தருகிறது.

-வசந்தன்

said...

யோகன்,

வருகைக்கு நன்றிகள்.

//நம்நாடுகளில் சினிமாச்சகதியை மிதித்துக் கொண்டிருக்கையில்; புலம் பெயர் நாடுகளில் நம் தமிழர்; பழந்தமிழ் இலக்கியங்களுக்கு; நாட்டியவடிவம் கொடுத்து உயிரூட்டும் செய்தி//

செவிக்கினியது.

இந்த விமரிசனத்தை எழுதியவரைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் முன்னர் இலங்கை வானொலியில் பிரபல ஒலிபரப்பாளராக இருந்தவரும் பின்னாளில் பிபிசியில் தமது கணீரென்ற குரலுடன் தமிழோசை படைத்தவருமான அமரர் ஆர். சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்) அவர்களின் பாரியார். தற்போது சிட்னியில் வசித்து வருகிறார். நிறைய எழுதுகிறார். குறிப்பாக விமரிசனம் எழுதுவதில் வல்லவர். அவரது நூல் விமரிசனம் ஒன்றை எனது முன்னைய பதிவொன்றில் இணைத்திருந்தேன்.

said...

வசந்தன்,
//இன்னும் இக்கலைகள், இலக்கியங்களுக்கு மதிப்பு இருப்பது மகிழ்ச்சி தருகிறது//
சிட்னியில் அடுத்தடுத்த இரண்டு நாட்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது ஒரு சாதனைதான்.

said...

பிரபல நாட்டியமேதை பத்மா சுப்பிரமணியம் அவர்களின் "பகவத்கீதை" நாட்டிய நாடகம் அண்மையில் கனடாவில் அரங்கேறியிருக்கிறது. அதைப்பற்றிய ஒரு அருமையான விமரிசனத்தைத் தந்துள்ளார் கனடாவிலிருந்து வி. என். கிரிதரன் அவருடைய வலைப்பதிவில். இங்கு வருபவர்கள் அங்கும் சென்று கிரிதரனின் விமரிசனத்தையும் வாசித்து மகிழுமாறு பரிந்துரைக்கிறேன்.

said...

ஆனந்தவல்லியின் மாணவர்கள் நிருத்தம் சதமாகவும் அசைவுகள் நேர்த்தியாகவும் இருந்தது, இந்த நிகழ்ச்சி நடந்து வருடங்கள் பல முடிந்து போயிருந்தாலும் இன்னும் கண்ணுக்குள் அந்த ரம்மியமான காட்சிகள் நிற்கின்றனவே. இது ஒன்று போதாதா ஆசிரியரினதும் மாணவர்களினதும் பெருமையை பறை சாற்ற