January 28, 2006

இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்-ஒரு பார்வை

கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் (அனைத்துலக தேடல்) ஒரு பார்வை
-திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் (சிட்னி) -

'கனவான்களே! இந்த ஓலைச்சுவடிகள் சிதைந்து அழிகின்றனவே என்ற கவலை உங்களுக்கு இல்லையா? தமிழ் உங்கள் தாய் என நீங்கள் உணரவில்லையா? இறக்கும் தறுவாயில் உள்ள உங்கள் தாய்க்கு உதவ நீங்கள் ஏன் எதுவும் செய்கிறீர்களில்லை? தேசிய உணர்வு, மத உணர்வு, மொழி உணர்வு என்பவை இல்லாமல் வாழ்தல் பெருமைக்குரிய விசயம் என எண்ணுகின்றீர்களா? தயவு செய்து இதனை ஆழமாகச் சிந்தியுங்கள்".

தமிழ் மக்களை நோக்கி, இப்படி விண்ணப்பம் செய்கிறார் தமிழ் அறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள். இது நடந்தது 19 ஆம் நூற்றாண்டிலே. அவருடைய வேண்டுதலைச் செவிமடுத்த பலர், பண்டைத் தமிழ் செல்வங்களை, ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டு அச்சிடுவதற்கு அந்தப் பெருமகனாருக்கு உதவி இருக்கிறார்கள்.

ஒன்றரை நூற்றாண்டு காலத்துக்குப் பின், அந்த அறிஞரின் அறைகூவலுக்கு, கலாநிதி குணசிங்கம் அவர்கள் புத்தூக்கம் அளித்துள்ளார். இன்று, அந்த தமிழ் மகனின் வழியிலே, இவரும் ஒரு 'தமிழ் ஆவணத் தேடலை" ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு, சென்னை, கோவா, லிஸ்பன், நெதர்லாந்து, லண்டன், பாரிஸ், ஜேர்மனி, சுவிற்சலாந்து, அமெரிக்கா எங்கும் இரண்டு வருடகாலம் கலாநிதி குணசிங்கம் அயராது பயணிக்கிறார். அங்கே இருக்கும் நூலகங்கள் ஆவணக் காப்பகங்களிலே தனது தேடலைத் தொடர்கிறார். வாசகர்களாகிய நாமும் அவரோடு சேர்ந்து பயணிக்கிறோம். ஒவ்வொரு நூலகத்திலும் இருக்கும் வரைபடங்கள், கடிதப் பரிவர்த்தனைகள், புதினப் பத்திரிகைகள், மற்றும் பதிவுகள் பலவற்றிலும் இலங்கைத் தமிழ்மக்கள் பற்றிய செய்திகளைக் காண்பித்துக் கொண்டே செல்கிறார். நாமும் அவரோடு சேர்ந்து பார்க்கிறோம்.

ஒரே பிரமிப்பாக இருக்கிறது. எம்மைப் பற்றியும், எமது தாயகத்தைப் பற்றியுமுள்ள உண்மையான பதிவுகள் - மூல ஆதாரங்கள் - எம்மை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன.

யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததன் மூலம் எமது பாரம்பரியத்தையே சாம்பலாக்கி விட்டதாகக் குதூகலித்தவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றன.

நாம் ஆறுதல் அடைகிறோம். புத்துயிர் பெறுகிறோம். கலாநிதி குணசிங்கம் அவர்களின், இந்தத் தேடல் புத்தகமாக உருவாகிறது. அதுவே "இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" - அனைத்துலகத் தேடல்". உலகெங்கும் பரந்திருக்கும் தமிழினத்துக்கு, இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகிறது.

எல்லா மனிதருக்கும் ஒரு வரலாறு உண்டு. நாம் இன்னார் என்ற அடையாளத்தை இந்த வரலாற்று உணர்வுதான் எமக்குத் தருகிறது. நீ எங்கே போகிறாய் என்று அறிவதற்கு, நீ எங்கிருந்து வருகிறாய் என்பது உனக்குத் தெரிய வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களிடம் ஒரு முதுமொழி வழங்குவதாகத் தெரிகிறது.

இவ்விடத்தில் கலாநிதி குணசிங்கம் கூறுவது கவனத்திற்குரியது. "இன்றைய நிலையில் காணப்படும் பெரிய குறைபாடு என்னவெனில், எந்தவொரு தொல்லியலாளரோ, வரலாற்றாசிரியரோ, அல்லது சமூக விஞ்ஞான ஆசிரியரோ, அவர் தமிழராக இருந்தாலும் சரி, சிங்களவராக இருந்தாலும் சரி, இலங்கைத் தமிழரின் முழுமையான வரலாற்றை எழுதவில்லை" என்பதுதான். சிங்கள ஆய்வாளருக்கு ஏராளமான ஆதாரங்களும், எல்லா மட்டங்களிலும் அரசாங்க உதவிகளும் உண்டு. ஆனால் தமிழ் அறிஞர்களோ பாரியதடைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

காலாநிதி குணசிங்கம் அவர்கள் ஒரு வரலாற்றாசிரியர் மாத்திரமல்லர்; அவர் ஒரு சிறந்த நூலகரும் ஆவார். எனவே அவர் ஒரு நல்ல ஆய்வாளராகத் தனது தேடலைத் தொடர்கிறார்.கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெளத்த மதம் இலங்கைக்கு வந்தது முதல், அரசன், அரச சபை, பெளத்த மதம் என்பன ஒரு வகைக் கூட்டு அமைப்பாக இயங்கி, தமது வரலாற்றுப் பாரம்பரியங்களை பேணி வந்துள்ளனரென்று அறிகிறோம். ஆனால் தமிழ் மக்களின் வரலாறு அவ்வாறு ஆவணப்படுத்தப்படாதது பெரிய குறையென்ற உண்மையை ஆசிரியர் இத்தேடலின் போது தெளிவுபடுத்துகிறார். எமது நாட்டுத் தமிழறிஞரான தனிநாயகம் அடிகளார் அவர்களே தனது வழிகாட்டி என்று கலாநிதி குணசிங்கம் கூறுகிறார். அடிகளார் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்த பின்னரே தனது தேடல் ஆரம்பித்ததாகக் கூறுகிறார். "ஐரோப்பிய நூலகங்களைத் தேடிச் செல்லத் தயாராக இருக்கும் ஊக்கம் மிகுந்த தமிழ் அறிஞர்களுக்கு, அங்கே மேலும் முக்கியமான, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கண்டுபிடிப்புகள் காத்திருக்கின்றன" என்று அடிகளார் தமது கட்டுரையில் வழிகாட்டுகிறார்.

கி.பி. 1505 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை.ஐரோப்பியரான போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், பிரித்தானியரும், ஒருவர் பின் ஒருவராக எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட 450 வருடகாலத்தில் ஏற்பட்ட அரசியல், பண்பாட்டு மாற்றங்கள், தமிழ் மக்களின் வரலாற்றையே மாற்றி விடுகின்றன. ஐரோப்பியர்களின் வர்த்தகச் சுரண்டல்களும், மத மாற்றமும், அரசியல் முறையுமே இன்றைய எமது அவல நிலைக்குக் காரணம் என்பது வரலாற்று உண்மை. இந்த ஐரோப்பியரால் தமிழ்மக்கள் பற்றிய குறிப்புகள் யாவும் பதிவு செய்யப்பட்டு, அவர்களது நூலகங்கள், மற்றும் ஆவணக்காப்பகங்களிலே பேணப்பட்டு வருவதை கலாநிதி குணசிங்கம் அவர்களின் தேடல் முயற்சியின்போது, பார்க்கையில், அவர்கள் தமது சுயலாபத்திற்காகச் செய்த பதிவுகள், இன்று எமக்குச் சாதகமாக இருப்பதை உணரமுடிகிறது. வரைபடங்களும், காணிகள், மக்கள் பற்றிய குறிப்புகளும், சட்டங்களும், போர்களும், வர்த்தகம் பற்றிய செய்திகளும், மத மாற்றம் பற்றிய விபரங்களும் அன்றைய தமிழினத்தின் வரலாற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவற்றிலே முக்கியமானது, ஐரோப்பியர்கள் தாம் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பின் எல்லைகளை, வரைபடங்களாகப் பாதுகாத்துள்ளமை.லிஸ்பன், நெதர்லாந்து போன்ற இடங்களிலுள்ள ஆவணக் காப்பகங்களிலே இந்த வரைபடங்கள் மிகவும் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருவதாக கலாநிதி குணசிங்கம் அவர்கள் விபரமாகக் கூறுகிறார். போர்த்துக்கேய, டச்சு ஆட்சிக்காலங்களிலே, தனித்தனி இராச்சியங்களாக விளங்கிய சிங்கள, தமிழ் அரசுகளை, பிரித்தானியர், தமது நிர்வாக வசதி கருதி ஒன்றாக்கியதால் ஏற்பட்ட சிக்கல் இன்றுவரை தொடர்வதை இந்நூலில் தெளிவாக அறிகிறோம்.

H. Cleghorn என்னும் பிரித்தானிய சிவில் சேவை அதிகாரியின் பதிவொன்றை இந்நூலிலே பார்க்கிறோம்~மிகவும் புராதன காலத்திலிருந்தே, இருவேறு பட்ட மக்கள், நாட்டை, வெவ்வேறாகத் தமக்குள் பிரித்து உடைமையாக்கிக் கொண்டுள்ளனர். முதலாவதாக, சிங்களவர் நாட்டின் மத்திய பகுதியிலும், தெற்கிலும், மேற்கில் வளவை கங்கையிலிருந்து சிலாபம் வரையில் வாழ்கின்றனர். இரண்டாவதாக மலபார் மக்கள் (தமிழர்) வடக்கு, கிழக்கு மாவட்டங்களை உடைமையாகக் கொண்டுள்ளனர். இந்த இரு தேசியங்களின் மொழி, மதம், பழக்க வழக்கங்கள் என்பன முற்றிலும் வேறுபட்டவையாகும்."

இதே கருத்தை, வடக்கிலே, கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த வணக்கத்திற்குரிய William Howland கூறுவதையும் ஆசிரியர் காட்டுகிறார். "இலங்கையின் தெற்கிலும், மத்தியபாகங்களிலும் சிங்களவர் வசிக்கின்றனர், இவர்கள் வேறு மொழியைப் பேசி, வேறு மதத்தை அனுசரிப்பவர்கள்.தமிழர்களின் சமயம் பிராமணியம். இவர்கள் வட மாகாணத்திலும், மேற்கில் சிலாபம் வரையும், கிழக்கில் மட்டக்களப்பு வரையும் வசிக்கின்றனர்."

இந்தக் காப்பகங்களிலுள்ள வரைபடங்களின் முக்கியத்துவம் பற்றிக் கலாநிதி குணசிங்கம் அவர்கள் கூறுகையில்- "தமிழர் தாய் நிலத்தின் புவியியல் தொடர்பான உண்மை நிலையினை அறியவேண்டின், புவியியல், வரலாற்று ஆய்வாளர்கள், இந்த ஆரம்ப வரைபடத் தொகுப்புகளில் விசேட கவனம் செலுத்துவது அவசியம்."என்கிறார். "அரசியல் கொந்தளிப்பு நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் உள்ளது. அநுரதபுரமும், கிழக்கிலங்கையும், மிகவும் கவனத்துடன் ஆராய்ச்சி செய்யப்பட்டால், தற்போதுள்ள குழப்பநிலை தெளிவாகும்" என்று மேலும் விளக்குகிறார்.

நெதர்லாந்து நாட்டு ஆவணங்களிலே முக்கியமானவை "தோம்புகள்" எனப்படும் காணிப்பதிவுகள். இது ஆட்களின் எண்ணிக்கையையும் காணிகளையும் குறித்த பதிவு அட்டவணையாகும். இதனில் எல்லா மக்களினதும், அவர்களது காணிகளும், அவை அமைந்துள்ள மாகாணம் மாவட்டம், வெவ்வேறாகப் பதியப்பட்டு, ஒரே பார்வையில் கம்பனியின் உடைமைகளின் அளவையும், பரப்பையும் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது- என்னும் பல விபரங்களைப் பார்க்கிறோம்.

150 வருடகால டச்சுக்காரரின் ஆட்சியின்போது, எவ்வாறெல்லாம் வளங்களைச் சுரண்டினார் என்பதும், செல்வம் குவிப்பதற்கு எத்தனை வழிகளில் முயன்றனர் என்பதும் இவற்றின் மூலம் தெரிகிறது.தமிழ் மக்களுடைய காணிகளின் தெளிவான விபரங்கள், மாவட்ட எல்லைகள், விவசாயத்தின் வகைகள், வியாபாரங்களின் விபரங்கள், தொழில்கள், வருமானம், வாழ்க்கை முறை என்பன இவ் ஆவணங்கள் மூலம் தெரியவருகின்றன.உள்ளுர் முறைமைகளை ஆராய்ந்து, இவற்றோடு ஒத்துப்போகும்வகையில், டச்சுககாரர் தமது நிர்வாக முறைகளை அமைத்துக் கொண்ட செய்தியை தேச வழமை பற்றிய பதிவுகளில் ஆசிரியர் காட்டுகிறார். தேச வழமை என்பது யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும், வன்னிப்பிரதேசங்களிலும் பாரம்பரியச் சட்டமாக இருந்தது என்று அறிகிறோம் - ஓர் எழுதாச் சட்டம். "முதுசம், திருமணம், இன்னும் ஏனைய வழிகளில் வந்த குடும்பச் சொத்து, அக்குடும்பத்துக்கு சொந்தமில்லாத வேறு எவராலும் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது" என்பதே தேச வழமையின் பிரதான நோக்கமாக இருந்தது.

இந்த இறுக்கமான அமைப்பு, தமிழர்களின் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பாதுகாத்து வந்ததோடு, தமிழர்களின் பெருத்த குடும்ப முறைமைக்கும் அடிப்படையாக இருந்தது என்றும் ஆசிரியர் விளக்குகிறார்.மேலும் இவ் ஆவணக் காப்பகங்களிலே, ஆட்சியாளருக்கும், அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகள் மூலம் அக்காலத்திய சமூக நிலை பற்றி அறியமுடிகிறது. கலாநிதி குணசிங்கம் அவர்கள், லண்டன் தேசியக் காப்பகத்திலுள்ள, இரு கடிதப் பதிவுகளை முழுமையாகப் பிரசுரித்ததன் மூலம் அக்காலத்தில் நிலவிய சாதிப்பிரச்சனை பற்றிய தெளிவான பார்வையைத் தருகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது குறைகளை விளக்கி எழுதிய விண்ணப்பம் ஒன்றையும், அதற்கு மறுப்பாக உயர்சாதியினர் எழுதிய கடிதத்தையும் பார்க்கும்போது, அக்காலத்தில் நிலவிய இறுக்கமான சாதி அமைப்புப் பற்றி அறிகிறோம்.

இவற்றைவிட யாழ்ப்பாணத்தில் பெண் கல்வி தொடர்பாகவும் வைத்தியக் கல்வி பற்றியும் பல செய்திகளை அமெரிக்க நூலகங்களிலிருந்து தருகிறார். அச்சு இயந்திரம், காகிதம் என்பவற்றின் வருகையால் பிரசுரிக்கப்பட்ட, நூற்றுக்குமதிகமான பத்திரிகைகள் தேதி வாரியாகப் பல நூலகங்களிலே பேணப்பட்டு வருவதையும் அறியத் தருகிறார். கிறிஸ்தவ மதப் பத்திரிகைகளான உதயதாரகை, கத்தோலிக்கப் பாதுபாவலன், Ceylon Catholic Messenger, Jaffna Catholic Guardian என்பனவும், அவற்றிற்கு மறுப்பாக வந்த சைவ போதினி, சைவ அபிமானி, இந்து நேசன் மற்றும் செய்தித்தாளான வீரகேசரி Times of Ceylon போன்ற பத்திரிகைகள் பற்றியும் அறிகிறோம்.

பலாத்கார மத மாற்றத்தினாலும், ஆட்சியாளர் தமது செல்வத்தைப் பெருக்குவதற்காக மக்களைச் சுரண்டி அவர்களை வறியவர்களாக்கியதாலும் யாழ்ப்பாண மக்கள் பலதடவை வன்னி நோக்கிப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிகிறோம்.

"The Spiritual and Temporal Conguest" என்னும் நூலில் போர்த்துக்கேயரான Queros எனபவர் "தமிழ் மக்கள் கரை காணாத்துன்பத்தில் உழல்கின்றனர்" என்ற கருத்துப்படக் கூறுகிறார்.

வன்னிச் சிற்றரசர் பலம் வாய்ந்திருந்ததையும் வன்னிப் பெருநிலம் போர்த்துக்கேய ஆதிக்கத்தின் கீழ் கட்டுப்பட்டிருக்கவில்லை என்பதையும் வன்னிப் புலப்பெயர்வு காட்டுகிறது. இந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்து 500 ஆண்டுகள் கழிந்து விட்டநிலையிலும், இன்னும் கூட தமிழ்மக்கள் கிட்டத்தட்ட அதே நிலையைத்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள், என்று கலாநிதி குணசிங்கத்தின் கூற்றில் அவரது சரித்திரப் பார்வையில், மனிதாபிமானத்தையும் உணர முடிகிறது.

இந்நூல் வெறும் நூல்கள், ஆவணங்கள், அவை அமைந்திருக்கும் இடங்கள் என்ற பட்டியல்கள் அல்லாமல், சிறப்பாக ஒப்பு நோக்கில் ஆராய்ந்து எழுதப்பட்டிருப்பது இந்நூலின் பலம் என்றே சொல்லவேண்டும்.ஒரே நூலில் ஆங்கிலத்திலும், தமிழிலும் செய்திகளைப் பதிந்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. எவருக்கும் விளங்கக்கூடிய வகையில், எளிமையான ஆங்கிலத்தில், சுவைபட எழுதியிருப்பதால் எமது இளைய சந்ததியினருக்கு, நல்லதொரு வழிகாட்டியாக இந்நூல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. நிலக்கிளி அ. பாலமனோகரன் அவர்கள் அழகு தமிழில் இந்நூலை மொழி பெயர்த்திருப்பது, இதற்கு மேலும் மெருகேற்றியுள்ளது.

தனது தேடலுக்கு அன்புக்கரம் நீட்டியவர்களுக்கு நன்றி கூறுகையில், தமிழறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் வழியிலேயே ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். இவை எமது தேசியச் செல்வங்கள். இலங்கைத் தமிழர் சம்மந்தமான ஆய்வுக்கு மாத்திரமின்றி, தமிழ் அடையாளத்தை நிறுவுவதற்கும் இவை அவசியமானவை. எனவே காலந்தாழ்த்தாது இதனைக் கருத்துக்கெடுத்து ஆவன செய்ய வேண்டும் என சகல தமிழ்ச் சமூகத்தையும் வேண்டுகின்றார்.

தமிழ் மக்களின் வரலாறு பற்றி அண்மையில் வெளிவந்துள்ள நூல்களின் வரிசையில் இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள் முக்கியமானதொரு இடைவெளியை நிரப்புவதில் வெற்றிகண்டுள்ளது.

"இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி முழுமையானதொரு நூலை உருவாக்குவதில் எனது பங்களிப்பாக இது போன்ற புத்தகத்தை ஆய்வுகளின் அடிப்படையில் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த முப்பது ஆண்டுகளாகவே என்னுள் இருந்தது. ஆனாலும் இந்த இலட்சியத்தை எப்போது ஈட்டப் போகின்றேனோ என்ற கேள்விகளும் உடன் இருக்கவே செய்தன. எத்தகைய சிரமங்கள் மத்தியிலும் எனது கனவை நனவாக்க வேண்டுமென்ற திடமான முடிவுக்கு வந்தேன்" என்று கலாநிதி குணசிங்கம் கூறுவதைப் பார்த்தபோது, அவரது உறுதியும், திடசித்தமும் வியக்கவைத்தது.

இவ்வேளை திரு ஆனா பரராஜசிங்கம் அவர்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் வந்த வாசகம் ஒன்று நினைவில் வருகிறது. (தமிழுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுமேயானால் தமிழர் தமது இலக்கியம், பண்பாடு என்பவற்றோடு அவர்களுக்கே உரித்தான மனவலிமை, திடசித்தப்போக்கு என்பவற்றால், எம்மை அடக்கி ஆள முற்படுவார்கள் என்று சிங்கள மொழிச்சட்டத்தைக் கொண்டு வரும்போது பண்டாரநாயக்கா கூறினார் - Daily News, நவ.8 - 1955).

இந்தத் திடசித்தம்தான் கலாநிதி குணசிங்கத்தின் இந்தத்தேடல் வெற்றியின் இரகசியம்.

இந்நூலை பெற்றுக்கொள்ள: gunasingam@optusnet.com.au

இவ்வாக்கத்தை எழுதியவர்: திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் (சிட்னி)

நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம், (யுனிக்கோடுக்கு எழுத்துரு மாற்ற உதவியது: சுரதா டொட் கொம்)

Technorati Tags:

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - நினைவலைகள்

அமரர் சு. வித்தியானந்தன் அவர்கள் மறைந்த நினைவு நாள் சனவரி 21. அதையொட்டியது இந்த நினைவுக்கட்டுரை. கட்டுரையை எழுதியவர் தற்போது சிட்னியில் வசித்து வரும் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் அவர்கள்.

மலை ஒன்றினை முழுமையாகக் காணவேண்டுமாயின், தொலைதூரத்திலே போய் நின்று பார்க்க வேண்டும்; வரலாற்று நிகழ்ச்சியை மதிப்பிடக் காலம் செல்லவேண்டும் என்பர் சான்றோர். நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை செவ்வனே கோலாகலமாக நடந்து, பத்தாம் தேதி விருந்துபசார விழா இன்வெறியின் விஷமத்தனத்தினால் அவதியுற்று முடிவடைந்தது முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் சூத்திரதாரி பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் 1989ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் தேதி கொழும்பிலே மறைந்தார். இப்போது அம்மாநாடு பற்றியும் அந்தப் 'பார்த்தசாரதி' பற்றியும் நின்று நிதானித்துச் சிந்திப்பது உண்மை வரலாற்றிற்கு உகந்தது என்பதை இக்கால இடைவெளியில் உதிக்கப்பட்ட துணுக்குகளை அறிந்தவர் - கேட்டவர் ஏற்றுக்கொள்வர்.

1960 ஜூலை மாதம் நடைபெற்ற ஐந்தாவது பொதுத்தேர்தலிலே சிறிமா பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மீண்டும் இனவெறி அலைகள் அசுரவேகத்தோடு மோதத் தொடங்கின. வடகிழக்கில் ஒத்துழையாமை இயக்கத்தினைத் தமிழரசுக் கட்சியினர் முன்னின்று நடத்தினார்கள். அதனால் கோபமுற்ற அரசு தமிழரசுத் தலைவர்களையும் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் பனாகொடையிலே தடுப்புக் காவலில் வைக்க, தமிழ்ப் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் வாழ்ந்த தமிழருக்கு எதிராகச் சிங்கள இராணுவமும் காவற்படையினரும் கர்ண கொடூரமான செயல்களிலே ஈடுபட்டனர். சிங்கள தேசியவாதத்திற்கு இடதுசாரிகள் உறுதுணையாகினர். 1964 கடைசியிலே ஒரு வாக்கினாலே இடதுசாரி கூட்டாட்சி பாராளுமன்றத்திலே முறியடிக்கப்பட்டது.

1965 மார்ச்சு மாததிலே நடைபெற்ற ஆறாவது பொதுத்தேர்தலிலே டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்று தேசிய அரசினை அமைத்தது. டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை, தமிழ் உபயோகமொழி மசோதா என்பன நம்பிக்கை அளித்தன. ஆயினும் எதிரணியிலே இருந்த முதலாளிகளுடனும் தொழிலாளர் வர்க்கக்கட்சிகளுடனும் பௌத்தத்துறவிகளுடனும் தேசிய அரசு போட்டியிட முடியவில்லை; தேசிய ஒற்றுமை எதனையும் அவர்கள் விரும்பவில்லை.

இக்காலகட்டத்திற்தான் 1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் சனவரி ஏழாம் தேதி உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர். அக்குழுக் கூட்டத்திலே கலந்து கொண்டவர்களிலே பேராசிரியர் தனிநாயக அடிகளார், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பண்டிதர் க. பொ. இரத்தினம் என்போர் ஈழநாட்டினர்.

தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே 'தமிழ் கல்ச்சர்' எனும் சஞ்சிகை மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்பிரல் 16-23 தேதிகளில் நடாத்தப்பட்டது.

கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர் டாக்டர் H. W. தம்பையா. அவர் அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிய வி. செல்வநாயகம் கட்டுரை சமர்ப்பித்தபோதும் மாநாட்டிற்குச் செல்லவில்லை. கோலாலம்பூர் மாநாட்டிற்குச் சுமார் ஐம்பது இலங்கைப் பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள். இவர்களிலே சரிபாதிக்கு மேல் பார்வையாளர்கள், மாநாட்டிற்கு எவ்விதமான ஆய்வுகளையும் சமர்ப்பிக்காதவர்கள். இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

1967இல் சி. என். அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ் நாட்டிலே அரசாங்கம் அமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் தேதிகளிற் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. சென்னையிலே ஆய்வரங்குகளா ஜனரஞ்சகமான அரங்குகளா சிறந்தோங்கி நின்றன என்று அறுதியிட்டுக் கூறுவது அரிது. ஆயினும் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை நிறுவியமைக்கான காரணங்களும் இலட்சியங்களும் சென்னையிலே அடிபட்டுப்போயின என்று கருதிய ஆய்வாளர் தொகை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாட்டிற்கு இலங்கைக் கிளை பேராசிரியர் சு. வித்தியானந்தன், கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ். எம். கமாலுதீன் எனும் மூவரையும் பிரதிநிதிகளாக அனுப்பி வைத்தது.

1972இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. சோசலிசம் கதைத்த இலங்கை முற்போகு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஐக்கிய முன்னணி அரசு 1970இலே தோன்றியபோது மீண்டும் தழைத்தது. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராக உயர்ந்தார். அவருடைய ஆலோசனை வட்டத்திலே இ.மு.எ.ச. முக்கிய இடத்திலே வகித்தது. இந்தக் கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினர் அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று.

1972இலே இலங்கைக் கிளையின் பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள 'சாந்தம்' மனையிலே கூடுவதற்கு முன்பே இரு கட்சிகள் உருவாகிவிட்டன. ஆளுங்கட்சி கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்க இருந்த முகாமைக் குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே நன்குபுலனாயின. இதனால் ஆளுங்கட்சி எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள் மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப் பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றதும் அன்று முதல் தொடர்ந்துபல மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே சிலாகித்துப் பேசப்பட்டன.

இலங்கை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு முகாமைச்சபை உருவாகியது. எதேசாதிகாரத்தினை எதிர்க்க ஒற்றுமை இருந்தபோதும், புதிய முகாமைச்சபை கருத்து வேறுபாடுகளினால் ஒன்றிணைந்து நிற்கமுடியவில்லை. அரசுடன் ஒத்தூதிய இடதுசாரிகளை அநுமதிக்க இடம் வைக்கக்கூடாது என்று துணிந்தவர்களுக்கு அரசாங்கத்தின் ஏனைய அடிவருடிகளை அப்போது கவனிக்கும் யோசனை இருக்கவில்லை. அதனால் ஏற்பட்ட விளைவுகள்..!

H.W.தம்பையா 1966இலே கோலாலப்பூர் மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கிச் சென்றவர், அங்கு அவர் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத்தலவர்களில் ஒருவராக நியமனம் பெற்றவர். தம்பையா கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினருக்கும் வேண்டியவர். ஆயினும் அவரை இலங்கைக் கிளையின் முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்த போது யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் அரசாங்கத்திற்குச் சார்பாக மாநாட்டினைக் கொழும்பிலே வைக்கவேண்டும் என்று 1973 அக்டோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக்குழுக் கூட்டங்களிலே வற்புறுத்திப் பலருடைய கோபத்திற்கும் ஆளாயினார். அவரைத் தலைமைப் பதவியினைத் துறக்கும்படி முகத்திற்கு முன்னே கேட்கும்படி ஆயிற்று. அவரும் 1973 இலே தமது பதவியினைத் துறந்தார். அவர் நன்கொடையாகத் தாம் வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக் கூசவைத்தார். அவருக்கு சிறிமா அரசு வெளிநாட்டுத் தானிகர் பதவி அளித்துக் கௌரவித்தது.

பேராசிரியர் சு. வித்தியானந்தன் 5.10.73இலே முகாமைக்குழுவின் தலைமை பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மாநாடு நடத்துவதற்கு அவகாசம் மூன்று மாதம் கூட இல்லை. பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண் ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவரை, வி.எஸ்.ரி.யும் யாமும் அழைத்துக் கொண்டு சென்றோம். தலைவர் தனியனாகவே அமைச்சசரைச் சந்தித்தார். அமைச்சர் மூன்று அம்சங்களை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொண்டால் மாநாடு வைப்பதற்குச் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறினார். அவ்வம்சங்கள்:

1. மாநாடு கொழும்பிலே நடத்த வேண்டும்; மாநாட்டினை பண்டாரநாயக்க மண்டபத்திலே எவ்விதமான சலாருமின்றி நடாத்த அமைச்சர் உறுதி தந்தார்.

2. பிரதமர் சிறிமா மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்;

3. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும் முன்வைக்கப்பட்டன.

தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்து விட்டார். அதனால் பேச்சுகே இடமில்லாமற் போய்விட்டது. அமைச்சர் பொறுமையிழந்து 'அபேபலமு' (நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்) என்று சூள்விட்டார். அரசு ஆதரவு தராமல் இருப்பதோடு குந்தகமும் செய்யப்போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதனால் அசுர வேகத்தில் எல்லா ஒழுங்குகளும் நடந்தன. கடைசி நேரம் மட்டும் நடக்குமா இல்லையா என்ற தயக்கம். வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மாநாட்டிற்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு ஆதரவு தரவில்லை; வந்தவர்கள் திருப்பி விடப்பட்டனர். அனால் தலைவர் மனதிலே தயக்கம் எதுவும் இருக்கவில்லை. மாநாட்டிற்கு அரசாதரவு இனத்துவேஷத்தின் அடிப்படையில் மறுக்கப்பட்டதென்ற கருத்து உலகிலே பரவியபோது, அதனை விரும்பாத அரசு மாநாடு ஆரம்பிப்பதற்கு முத்தினங்களுக்கு முன்பே 'விசா' வழங்கியது.

யாழ்ப்பாணம் தமிழினத்தின் மானத்தைக் காப்பாற்றியது. தலைவர் தலைமையுரையிலே, மாநாடு யாழ்ப்பாணத்திலே நடக்க வேண்டியதற்கான காரணங்களையும், அதன் தகுதியையும் எடுத்துக் காட்டினார். அதனை யாழ்மக்கள் உறுதிப்படுத்தினார்கள். தென்னங்குருத்தோலை, மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பது போதாதென்று தென்னை, பனை மரங்களால் வீதிகளில் எல்லாம் அலங்கரித்த ஆர்வம் மிக்க மக்கள் அவர்கள்.

தமிழ் மக்களின் பெருமிதத்தினைக் கண்ட இனவெறி கொண்ட கூட்டம் ஆத்திரம் அடைந்தது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10ஆம் தேதி, பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்திலே 'பஞ்சாப்படுகொலை' நடத்திக் காட்டினர். பேராசிரியர் ஏ. ஜே. வில்சன் சனவரி 10ஆம் தேதி நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுமிடத்து,

"தமிழ்த்தேசிய தீவிரவாதத்தினை மீளமுடியாத எல்லைக்கு இட்டுச் சென்றது 1974 சனவரி பத்தாம்தேதிச் சோகம். அப்பொழுது இளைஞர் உரையாடுவதும் உடன்படிக்கையும் சிங்கள பௌத்தமயமான அரசுகளுடன் வீண் என்றும் பயன் எதுவும் அளிக்கப்போவதில்லை என்றும் உணர்ந்தார்கள்." என்பர் (S.J.V. Chelvanayagam and the Crisis of Sri Lankan Nationalism, 1947-1977).

பேராசிரியர் வித்தியானந்தனுடைய முடிவு திடீரென 1989 சனவரி 21இலே வந்தது. யாழ்ப்பாணவளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலே மாபெரும் மாநாட்டினைக் கோலாகலமான விழாவாக நடாத்தித் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிப்பினைப் பெற்றிருந்த வித்தியானந்தன் தமக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த அலங்கோலத்தினை எதிர்பார்க்கவே இல்லை. அக்கடைசி நாட்கள் இன்றும் கண்முன்னே தோன்றுகின்றன. அந்த ஆதங்கத்தினை அவருடைய இரங்கற் கூட்டங்களிலே கொழும்பிலே பேசியும் பத்திரிகைகளில் இரங்கல் கட்டுரைகள் அப்போது எழுதியும் ஆற்ற முயன்றோம்.

நன்றி: கலப்பை, சித்திரை 2005 (சிட்னி)

Technorati Tags:

சோதனைப் பதிவு

எனது ப்லொக்கர் பிர்ச்சினை கொடுக்கத் தொடங்கிவிட்டது. அதற்காக இந்த சோதனைப் பதிவு.

January 06, 2006

பகல் தூக்கம்

சிட்னி Koala Park இல் ஒரு பகற்தூக்கம்.