September 14, 2020

வவுனிக்குளம் என்னும் பழைய பாலி வாவியைப் புதுப்பித்தல்

பழம் பாலி நகரத்தைப் பக்குவப்படுத்தல்

எஸ். ஆறுமுகம் BSc (Lond) / MICE, MIWE 

(நீர்ப்பாசனப் பகுதி அதிபர்)

ஸ்ரீலங்கா மார்ச் 1957 

ங்களம் மலரும் மாங்குளம் என்னும் இடத்திற்குத் தென்மேல் திசையில் சற்றேறக்குறையப் பத்து மைல் தூரத்தில் காடடர்ந்த இடத்தில் ஓர் சீரழிந்த குளம் உண்டு. அதன் பெயர் இப்பொழுது "வவுனிக் குளம்" என்பதாகும். இந்தக் குளம் எப்பொழுது, யாரால் கட்டப்பட்டது என்பன இன்று எவருக்கும் தெரியாத மறை பொருளாக இருக்கின்றன.

இதைப்பற்றி யாம் முதன் முதல் கேள்விப்படுவது மகாவம்சம் (Mahavamsa XXVIII. 39) எனும் நூலிலாகும். அதில் கூறப்படுவதிலிருந்து இக்குளம் கி.மு. 3ம் நூற்றாண்டளவில் வாழ்ந்த எல்லாள மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என பொறித்துறை ஆராய்ச்சியாளர்களாகிய ஹென்ரி பாக்கரும் (Henry Parker) அவரையொட்டி புரோகியரும் (R. L. Brohier) அனுமானித்திருக்கின்றனர்.

பின் வசபன் செய்கை பற்றிப் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலும் இக் குளத்தின் பெயர் விளங்குகின்றது. அதன் பின் ஆங்கிலேய இஞ்சினியர்களின் அறிக்கைகளில் 1887 ம் ஆண்டு தொடக்கம் இக் குளம் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

ஊர்ச் சிறப்பு

இக்குளம் இருக்கும் இடத்தின் அயல் எல்லாம் பார்ப்பார்கள் வெளி யென்றும், மன்னர் குளம் என்றும், தட்டான் குளம் என்றும், பாணன்கமம் என்றும், வாணன் கமம் என்றும் இன்னும் இவ்வகைத்தான பெயர்களைக் கொண்ட கிராமங்களாய் இருந்திருக்கின்றன. இங்குள்ள காட்டில் ஒரு பகுதி கோவில் காடு என்ற பெயருடையதாய் இருக்கின்றது. கோவில்கள் இருந்ததற்குப் பல சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன.

இவ்வாறு கோவிலும் குளமும் பார்ப்பார், மன்னர், தட்டார், பாணர், வாணர், ஆதியாம் பற்பல குலத்தாரும் வாழ்ந்த இடங்களும் இருந்து வந்தமையால் இங்கு ஒரு நகரம் இருந்திருக்க வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிதிற் புலனாகும். ஆராய்ந்து பார்க்குமிடத்து இது முன்பு சொன்ன வசபன் கல்வெட்டில் சொல்லப்படுகின்றது. இந்த நகரத்திற்கு அக்காலத்தில் பாலி நகரம் என்ற பெயர் வழங்கியிருக்கின்றது.

இப்பொழுதும் இவ்விடத்தில் ஓடும் ஆறு பாலி ஆறு என வழங்கப்படுகின்றது. கோயிலை நடுநாயகமாகக் கொண்டு நகரமைக்கும் முறை பன்னெடுங்காலமாகத் தமிழால் கையாளப்பட்டு வருகின்றது.


இப்பாலியாற்றின் அருகிலுள்ளதும், சரித்திரத்திற்கும் எட்டாததாய் இருக்கின்றதும், இலங்கையில் முதன் முதல் கட்டப்பட்டதெனப் படுவதுமாய "பாலிக் குளம்" இன்று வன்னிய அவனி புரக்கும் நீர்த்தேக்கமாகையினால் வவுனிக் குளம் என வழங்குகின்றது போலும்.

'கோவிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்' என்ற சமய குரவர் கூற்றுக்கு இலட்சியமாய் இருந்தார்கள் நம் பாலி நகரார். இன்று அக் கோவில் ஸ்தலம் யாவும் கோவில்காடு எனக் கிடக்கின்றது, அக்கோவிற்காட்டில் இன்று பல விக்கிரகங்கள் உடைந்து கிடப்பதைக் காணலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த, வவுனிக் குளம் என்னும் பாலி வாளித் தடாகத்தை, இப்போது நீர்ப்பாசன இலாகா எஞ்சினியர்கள் புதுக்குவதற்கு முயலுகின்றனர்.



அபிவிருத்திச் சரித்திரக் குறிப்புகள்

பழைய நீர்த்தேக்கத்தில் தற்போதுள்ள மண் அணைக்கட்டுகளில் ஆங்காங்கே காணப்படும் உடை கடவான்களைக் கட்டி 88 சதுர மைல் பரப்பு வடித்தரையினின்று வழியும் நீர், தடாகத்தில் சேமிக்கப்படும். இந்த அணைக்கட்டு வரம்பு இரண்டரை (2 1/2) மைல் நீளத்திற்கு மேலுடையதாய் இரு அந்தங்களும் உயர்ந்த மேடுகளில் தொடுக்க | இணைக்கும், 700 அடி அகல சீமென்றுக் கொன்கிரீட் வரம்பு மிதவையால் பாலி யாற்றின் மிகுதி நீர் பாயும். கடல் மட்டத்திலிருந்து 142 அடி உயாத்திற்கு நீர் தேங்கி நிற்கும். 4 அடி அகலமுள்ள இரு நீர் வடிமதகுகளால் நீர்ப்பாசனத் தேவைக்கு வேண்டிய நீர் பெறப்படும். இம்மதகுகள் ஆற்றின் இடது கரைப் பிரதேசத்திற்கும் வலது கரைப் பிரதேசத்திற்கும் நீரளிக்கும், 30,000 ஏக்கர் அடி நீர் வாவியில் சேமிக்கப் பெறும்.


இப் புதுக்குதற் திட்டம் வலது கரையோரக் குளக்கட்டிலிருந்து துணுக்காய் வரையும் உள்ள பிரதேசத்தில் விளைவுக்கு நீரளித்து, விவசாயிகள், குடியேற்றப் பிரதேசமாகும், இடது கரையோரம் குளக்கட்டிலிருந்து துணுக்காய் பூவரசங்குளம் றோட்டு வரை பரந்த பிரதேசத்தில் விளைவுக்கு நீரளித்து நடுத்தர வகுப்பினர் புலப்பிரதேசமாகும்.

"வாப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும்" என்றார் ஔவையார்.

எஸ். ஆறுமுகம் BSc (Lond) / MICE, MIWE 

(நீர்ப்பாசனப் பகுதி அதிபர்)

ஸ்ரீலங்கா மார்ச் 1957

நன்றி: Noolaham.org


சண்முகம் ஆறுமுகம் (Sanmugam Arumugam, 31 ஆகத்து 1905 – 6 மார்ச் 2000) ஈழத்து நீர்ப்பாசனத் துறைப் பொறியியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

March 31, 2020

ஆறுமுக நாவலரின் தன்னலமற்ற சேவை


வாந்தி பேதி நோயினால் மக்கள் திடீர் திரெனெ மடிந்துகொண்டிருந்தபோதுநோய்கண்ட பகுதிகளில் மக்கள் நடமாடவே பயந்து கொண்டிருந்தவேளை அந்தக் கொடிய வாந்தி பேதி நோயினால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தார் வேட்டிகட்டி வெண்ணீறணிந்த ஒரு கறுத்த மனிதர்!

ஒரு தேசிய வீரரின் தன்னலமற்ற சேவை

-   வெ. சு. நடராசா -

ஈழநாடு மே 17, 1981

1876ம் ஆண்டளவில் நடந்த நிகழ்ச்சி இது!
யாழ். குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் வாந்திபேதி நோய் பெருமளவில் பரவித் தொல்லை கொடுத்த நேரம். எந்தெந்த நேரத்திலோ க்கள் மாண்டு மடிந்து கொண்டிருந்தனர். கொள்ளை நோயின் பீதியினால் மக்கள் கலக்கத்துடன் காலம் கழிக்கவேண்டியிருந்தது.

அப்போதைய அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. நோயைக் கட்டுப்படுத்தத் தனிப்பட்ட சிகிச்சை நிலையங்களை நிறுவி, நோய்கண்ட மக்களை அப்புறப்படுத்திச் சுகாதாரச் சூழலில் வைத்து ஆவன செய்துவந்தது. வாந்தி பேதி நோய் பரவியிருக்கும் பகுதிகளில் நடமாடவே மக்கள் பயந்தனர். இந்த நோய் தொற்றுவியாதி என்று அரசினர் பிரகடனப்படுத்தியுமிருந்தனர். இந்த நோயைக் கட்டுப்படுத்தப் பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்டும், அரசாங்க அதிகாரிகளே இந்த முயற்சியில் ஈடுபடத் தயங்கினர். தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாது மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவையென முன்வரக்கூடிய உள்ளம் படைத்த தியாகசீலர்களைக் கண்டுபிடிப்பது முயற்கொம்பாகவே இருந்தது.

வேட்டி கட்டி வெண்ணீறணிந்து...

யாழ். நகரத்திலே இந்த நோய் கோரத் தாண்டவமாடிற்று. தகுந்த முன்னெச்செசரிக்கையுடன் நிவாரண முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களில் பெரும் பகுதியினர் திடீர்திடீரென நோய் கண்டு மாண்டுகொண்டு வந்தனர். இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நோயாளியும் அரசினர் தனிப்பட்ட இடத்தில் வைத்துச் சிகிச்சையளித்த கரையூர் (இப்போது குருநகர் பகுதியில் இருந்த) சிகிச்சைச் சாலையில் இருந்தார். அந்த நேரத்தில் வேட்டியுடுத்து, வெண்ணீறணிந்த மனிதர் ஒருவர் அரசாங்க அதிகாரிகள் முன்னின்றார். சுகாதாரப் பொறுப்பை ஏற்றிருந்த அரசாங்க அதிகாரிகள், அந்த மனிதர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கிறாரோ என ஐயமுற்றனர். அந்த நேரத்தில் அரசினரிடம் உதவிபெற, சுகாதார ஆலோசனைபெற மக்கள் வருவது வழக்கமாக இருந்தது.

உதவி செய்ய அனுமதி கேட்டார்

ந் மனிதர் "என்னால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யக்கூடுமானால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்' என்றார்.

''உதவியென்றால் எந்த வித்தில், யாருக்கு?" - அதிகாரி கேட்டார்.

நான் யாருக்கும் பயன் கருதாது பணிசெய்யும் பண்புடையவன். தாங்கள் அனுமதியளித்தால் நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுவோருக்கு மன மகிழ்ச்சியோடு தொண்டு செய்வேன்" என்றார் அந்த வெண்ணீறணிந்த வேட்டி கட்டிய கறுத்த மனிதர்.

அதிகாரிக்கு ஒரு சந்தேகம்; வாந்திபேதி நோயின் கொடுமையை உணராமல் இந்த மனிதர் உதவிக்கு வருகிறார் போலும்! ஒருவேளை கொள்ளை நோயில் கோரப் பிடியில் சிக்கி இந்தத் தொண்டர் இறக்க நேரிட்டால் அந்தப் பழியை யார் ஏற்றுக் கொள்வது?

"வாந்திபேதி நோய் உமது உயிரையே உறுஞ்சிவிடக்கூடிய அபாயம் நிறைந்தது என்பது - உமக்கு விளங்குமா?" என்றார் அதிகாரி.

வந்த றுத்த மனிதர் புன்னகையோடு உங்கள் சங்கடம் எனக்கு விளங்குகிறது என்னைப்போல் ஒத்த மனித உயிர்கள் நோய் காரணமாக வருந்தி உயிர் விடும் போது - நானும் ஒரு மனிதாபிமானம் படைத்தவன் என்ற முறையில் என்னால் இயன்ற கடமையைச் செய்யலாமென விரும்புகிறேன். என்னுடைய தொண்டின்போது நானே கொள்ளை நோய்க்கு இரையாகி உயிர்விட நேர்ந்தாலும் மக்கள் சேவைதான் பெரிதென மதிக்கிறேன்.

அனுமதி கிடைத்தது

சிகிச்சை நிலையத்துக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரி, அந்த மனிதரை ஏற இறங்கப் பார்த்தார். நெற்றியில் திருநீற்றுக் குறியும், கழுத்தில் உருத்திராக்கமும் தரித்துக் காட்சிக்குப் பெரிய மகான் போலத் தோற்றமளித்த தன்னலமற்ற சமூகத் துறவியை மேலும் வினாவிடைக்குள்ளாக்கிக் கொண்டிருக்க விருப்பம் இல்லாது சிகிசைச் சாலையினுட்சென்று தொண்டாற்ற அனுமதியளித்தார் அந்த உயர் அதிகாரி.
 
நோயாளர் மத்தியிலே தொண்டு செய்யச் சென்றவர், முன்னர் நான் குறிப்பிட்ட நோயாளியையும் கண்டுகொண்டார். அந்நோயாளிக்கும் தொண்டுகள் பல செய்தார். குறிப்பிட்ட நோயாளி தனது மாணவன் என்று அறிந்ததும் அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளித்துத் தேறச்செய்யத் தன்னாலியன்றவற்றை எல்லாம் செய்தும் பலனளிக்காமற் போனதையறிந்ததும் பெரிதும் மனம் வருந்தினார். அம்மாவனின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்தார். வேறு என்ன அவர் செய்ய முடியும்.

அந்தப் பணியை மேற் கொள்ளவேண்டிவந்தவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல, அவர் மது நல்லூர்  நாவலர் அவர்களேதான். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணும் நாவலர்பெருமான் போல் பெருமகான்களை க்கள் தெய்வமெனப் போற்றுவதில் என்ன தவறு?

நாவலர் போலப் பல தொண்டர்கள் சைவசமயிகளிடத்தில் தோன்ற வேண்டும்.

 அமரர்  அராலியூர் வெ. சு. நடராசா
ஈழநாடு மே 17 1981
நன்றி: http://www.noolaham.org 


வரலாற்றுக் குறிப்புகள்:

1866 - 1867 காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தைப் பெரும் வாந்தி-பேதி நோய்த் தொற்று தாக்கியது. கொலரா விசாரணைக்குழு 1867 மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் வந்தது. இதன் அறிக்கை 1867 ஏப்ரல் 20 இல் வெளியிடப்பட்டது. 1866 அக்டோபருக்கும் 1867 ஏப்ரலுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் 16,298 பேர் கொலராவால் பாதிக்கப்பட்டனர். 10,210 பேர் இறந்திருக்கின்றனர்.

பின்னர் 1876 அக்டோபர் 21 இல் மீண்டும் வாந்திபேதி நோய் யாழ்ப்பாணத்தைத் (குறிப்பாகக் கரையூரில்) தாக்கியது. 1877 ஆரம்பத்தில் பாசையூர், ஊர்காவற்றுறை, அல்லைப்பிட்டி, நவாலி உட்படப் பல இடங்களுக்குப் பரவியது.

1877 சூலை 16 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 1875 இல் 224 பேர் இறந்துள்ளனர். 1876 இல் 826 பேருமாக, 1877 சூன் மாதம் வரை 5,481 பேர் இறந்துள்ளனர்.

கொலராவுக்குப் பின்னர் வட மாகாணத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. 20,000 பேர் வரை இறந்ததாகப் பதிவாகியுள்ளது.

நன்றி: John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, 1923, (2ம் பதிப்பு: 2003)