December 18, 2017

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் (திசம்பர் 18, 1822 - திசம்பர் 5, 1879) அவர்களின் 194-வது பிறந்தநாள் இன்று 2017 திசம்பர் 18.

தமிழகத்தில் இருந்து வெளியான 1939 ஆம் ஆண்டின் "சக்தி" இதழில் இக்கட்டுரை வெளிவந்தது.
 
 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
1822-1878

(ஸ்ரீ ஸி. எஸ். ஜகதீசசுந்தரம் பிள்ளை)


ழநாட்டின்கண் செம்மை நிறைந்த, புலமை மலிந்த, சைவம் பழுத்த, தமிழ் வளர்த்த சைவப் பெரியார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரே. தமிழர்கள் மாண்பினையும், நிலையினையும், வாழ்க்கையினயும் உயர்த்திச் சமயப் பற்றுள்ளவர்களாக்கின உத்தமத் தமிழ்நாவலர் இவரே. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற மூதுரையைத் தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு நம் தமிழ் நாட்டிற்காக உழைத்த மகான், நாவலர் பெருமான் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

உரைநடை நூல்கள் மிகக் குறைவாயிருந்த அக்காலத்தில் - எடுத்த தெல்லாம் செய்யுள் வடிவிலேயே அமைந்து கிடந்த அக்காலத்தில், சிறுவர் வகுப்புக்குப் புத்தகங்களெழுதிச் சிறுவர்களையும், சொல்வன்மை பொருள் வன்மை மிகுந்த நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் முதலிய புராணங்களைக் கத்திய ரூபமாக்கிப் பெரியோர்களையும் மகிழச் செய்து தமிழை வளர்த்துவந்தார். இம்மட்டோ இறந்துபட்டொழியவிருந்த ஏட்டுப் பிர திகளிலுள்ள அநேக நூல்களைப் பரிசோதித்து வெளியிட்டார். அன்றியும் அநேக நூல்களுக்கு எளிதிற் பொருள் விளங்கப் புத்துரை செய்தும் சைவ மதத்தை வளர்த்தற்கு ஆவசியகமான நூல்களைத் தாமே இயற்றியும் வெளிப்படுத்தினார்.

ஆங்கில பாஷையிலே காணப்படுகிற கமா, ஸெமிகோலன், கோலன், டாஷ், புல்ஸ்டாப் முதலிய, வாக்கிய லக்ஷணத்திற்கு மிகவும் இன்றியமையாத, குறியீடுகளை முதன்முதலில் தமிழ் வசன நடையில் நன்கு உபயோகப் படுத்தினவர் இப் பேரறிஞரே. நாவலர் காலத்துக்கு முன்னர் குறியீட்டிலக்கணங்கள் தமிழ் வசனங்களிலே செவ்வனே இடம் பெறாதிருந்தன. வி. கோ. குரியநாராயண சாஸ்திரியாரும் தமது 'தமிழ் மொழி வரலாறு' என்னும் நூலின் கண்ணே,

''ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசனமுற்றதாகக் காணப்படுகிற குறியீட்டிலக்கணம் தமிழின்கண் முழுதுந் தழுவிக் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியு முண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின்கண் ஆர்வமுண்டாகின்றது. இக் குறியீட்டிலக்கண மெல்லாம் வசனநடை கைவந்த வள்ளலாராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களாலே முன்னரே மேற்கொண்டு வழங் கப்பட்டுள்ளன'' என்று நாவலரவர்கள் வசனச் சிறப்பினைச் சிறப்பித்துப் போந்தார்.

நம் நாவலர் இயல்பான ஆற்றொழுக்காகச் செல்லும் உரைநடை கைவரப் பெற்றவர். அவர் உரை நடை புல்லறிவாளரும் எளிதில் வாசித்து உணர்ந்து கொள்ளும்பொருட்டுச் சந்தி விகார மின்றிச் சொற்கள் பிரிக்கப்பட்டிருக்கும். அவருடைய தீஞ்சுவைத் தமிழ்நடையை என்னென்பது!

சந்தானகுரவர் நால்வரும் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபஃது, சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சைவசித்தாந்த சாத்திரங்களை அருளிச் செய்து, எல்லாச் சமயங்களையும் கடந்து நின்றது சித்தாந்த சைவ சமயமென்று சாதித்தார்கள்.
அதன் பின்னர், நமச்சிவாய தேசிகர், சிவஞான முனிவர், மாசிலாமணித் தேசிகர், ஞானப்பிரகாச முனிவர், குமரகுருபர சுவாமிகள் முதலிய மகான்கள் பஞ்ச கிருத்தியங்களையுஞ் செய்யும் கர்த்தாவாகிய சிவபெருமானே சர்வலோக நாயகரென்றும், அவரை வழிபடு மார்க்கமே முத்திமார்க்க மென்றும் அவரை வழிபடும் அடியார்களே மெய்யடியார்களென்றும் தெளிந்து, அவருடைய பெருமையைத் தங்கள் நூல்களாலும் உரைகளாலும் உணர்த்தி அடியார்களுக்குப் போதித்துச் சென்றனர்.

நாவலர் காலத்தில் சைவ சமயிகளுட் சிலர் பரமத நூல்களைக் கற்றுத் தங்கள் வாணாட்களை வீணாட்களாகக் கழித்து ‘கண்டதே காட்சி கொண்டதே கோலமாக’ இருந்து வந்தனர். இதனைக் கண்ட நாவலர் பெருமான் மனம் பொறாது அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த வெண்ணி, பரசமயிகளோடு சமய வாதங்கள் செய்து வென்றார். பரசமயத்திலே புகுந்தவர்களுக்கும், புகவெண்ணியவர்களுக்கும் உண்மைச் சமயமாகிய சைவ சமயத்தைப் போதித்து அவர்களைத் திருத்தினார். இதுவுமன்றி, பற்பல விடங்களுக்குச் சென்று பல்லோர் நிறைந்த அவைக் களத்தின்கண், சபைக்குப் பணிவுடைமையும் கம்பீரமும் முகத்திற் றோன்ற, இனிய ஓசையுடன் சொற்சுவையும் பொருட்சுவையும் தொடை நயமும் அமைய, எதுகை, மோனை, மடக்கு முதலிய செய்யுளி லிலக்கணங்களை இடையிடையே செறித்து, அமிர்ததாரை வர்ஷித்தது போலச் சைவசித்தாந்த உண்மைகளைப் பிரசங்கித்தார்; தேவாலயந் தோறும் புராணப் பிரசங்கமுஞ் செய்தார். இவருடைய முதல் பிரசங்கம் பிலவங்க வருடம் மார்கழி 18உ (ஜனவரி 1848) சுக்கிரவாரத்தில் வண்ணார்பண்ணையிலுள்ள சிவாலயத்திலே நடந்தது. அன்று முதல் ஒவ்வொரு சுக்கிரவாரமும் நியமமாகச் சைவப் பிரசங்கஞ் செய்து வந்தார்.

கேட்டார் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

என்ற பொய்யாமொழியை பொய்யாமொழியாகச் செய்துள்ளார்.

நாவலர் காலத்தில் தென்னிந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களெல்லாம் ஒவ்வொரு உபாத்தியாயரால் தெருத் திண்ணைகளிலும் கொட்டில்களிலும் வைத்துப் பிள்ளைகளின் சம்பளம் பெற்றுக்கொண்டு படிப்பிக்கு மிடங்களாயிருந்தன. படிப்பிக்கப்படும் நூல்களோ ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களும் சேந்தன் திவாகரம், எண்சுவடி முதலிய கருவி நூல்களுமேயாம். கற்பிக்கும் ஆசிரியர்களோ உபாத்தியாயரின் பிரதிநிதிகளாகிய சட்டாம்பிள்ளைகளே யாவர். சைவசமய வொழுக்க நூல்கள் அங்கே கற்பிக்கப் படவில்லை. சைவ சமயிகள் சைவ நூல்களைக் கற்பதில்லை. கற்றறிந்த சிலர், யாவரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி சமயாசாரங்களைப் பிறருக்கு இலகுவில் கற்பிப்பதில்லை. சிறுவராயிருக்கும் போது இவைகளை யெல்லாம் அனுபவித்துணர்ந்த இப்பெருந்தகையாளர், தமிழ் நாடெங்கும் பாடசாலைகளைத் தாபித்து, பிள்ளைகளுக்குச் சமய நூல்களையும், அவைகளுக்கு வேண்டும் உப நூல்களையும், லைகீக நூல்களையும் கற்பித்தல் அவசியமென்றெண்ணி, கற்றறிந்த பெரியோர்களை உபாத்தியாயராக நியமித்து, யாழ்ப்பாணத்திலே வண்ணார்பண்ணையில் இலவச வித்தியாசாலை யொன்றைத் தாபித்தார். அது சைவப் பிரகாச வித்தியாசாலை யென்னும் பெயருடன் விளங்குவதாயிற்று. அச்சமயத்தில் வர்த்தகசாலை யொன்று விற்பனைக்கு வந்தது. அதனைத் தம்முடைய வித்தியாசாலையின் அபிவிருத்திக்காக வாங்க விரும்பினார். கையில் போதிய பணம் இல்லை. அதனால் மனம் வருந்திப் பூசையிலே தமது உடையவரை நோக்கி யழுது,

"மணிகொண்ட கடல்புடைகொ ளிந்நாட்டி
      லுன்சமய வர்த்தன மிலாமை நோக்கி
மகிமை பெறு நின்புகழ் விளங்குவான் கருதியிம்
      மைப்பொருட் பேறோழித்தே
கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவ்வூர்க்
      கயவர்செயு மிடர்கள் கண்டுங்
கல்லூரி யதைநடாத் தப்பொருட் டுணைசெயக்
      கருதுவோ ரின்மை கண்டும்
அணிகொண்ட சாலைய தொழிப்பினஃ
      துனையிகழு மந்நிய மதத்தர்சாலை
யாமென நினைந்தெனெஞ் சற்பகற்
      றுயருற லறிந்து மொரு சிறிதுமருளாத்
திணிகொண்ட நெஞ்சவினி நின்முன்றா
      னுயிர்விடுத றிண்ணநீ யறியாததோ
சிறியேன தன்பிலர்ச் சனைகொளழ
      கியதிருச் சிற்றம் பலத்தெந் தையே."

என்றொரு செய்யுளைச் சொன்னார், என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் அழுது புலம்பின அன்றே உதாரகுணம் படைத்த பிரபுவாகிய நன்னித்தம்பி முதலியார் என்பவர் இவ் வித்தியாசாலைக்காக அனுப்பியிருந்த நானூறு ரூபாயும் வந்து சேர்ந்தது. அப் பணத்தைக் கொண்டு வர்த்தகசாலையை விலக்கு வாங்கினார், பின்னும் யாழ்ப்பாணத்தார் உதவிய பொருள் கொண்டு சிதம்பரத்திலும் ஒரு சைவப் பிரகாச வித்தியாசாலை ஏற்படுத்தினர். இவருடைய பெரு முயற்சியினாலே யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத் துறை, கந்த மடம், பருத்தித் துறை, மாதகல், இணுவில் முதலிய விடங்களில் வித்தியாசாலைகள் ஏற்படுத்தப் பட்டன. தமிழ் மக்களுக்கு இவரால் ஏற்பட்ட நன்மைகள் அளவில. சைவ சமயத்தின் உண்மைகளைப் போதித்தும், பிரசுரித்தும், பிரசாரஞ் செய்தும், மற்றும் பலவாறு தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்குமாக இப்பெருந்தகையார் ஆற்றியுள்ள தொண்டுகள் கணக்கில்லாதனவாகும். இங்கனம் இப் பெருமகனார் தமிழுக்காக ஆற்றின தொண்டினை நினைக்குந்தோறும், தமிழன்னையின் தவப்புதல்வர் என்றும், சமயத்துக்காக உழைத்த உழைப்பினை உன்னுந் தோறும் சமய குரு என்றும் கொண்டாடுதல் கூடும்.

புலவர் கூற்று

நாவலரும் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் ஒரே காலத்தினர்; நட்புரிமையும் பூண்டவர்கள். ஒரு சமயம் நாவலர் தம் ஆர்வலராகிய பிள்ளையவர்களுடன் காவேரியில் ஸ்நானஞ் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது பொழுதோ அதிகாலை; காலமோ பனிக்காலம். பலருடைய தேகமும் குளிரினாலே விடவிட வென்று நடுங்கிற்று. நடுக்குறுதலைக் கண்ட பிள்ளையவர்கள் 'பனிக் காலம் கொடிது' என்று நாவலரைப் பார்த்து நவின்றனர். உடனே கலாவிநோதராகிய நாவலர் 'பனிக்காலம் நன்று' என்று விடையிறுத்தனர். இவருடைய வாக்கு நயத்தையும் விசேஷத்தையுமுணராத உடனிருந்த மாணவர்கள் இரு பிரிவினராகி, 'பனிக்காலம் கொடிது, ஜலகோஷத்தை உண்டாக்கும்' என்றனர் ஒரு சாரார். 'பனிக்காலம் நன்று, தேகத்தைக் குளிரச் செய்யும்; உஷ்ணத்தைத் தணிக்கும்’ என்றனர் மற்ருெரு சாரார். இங்ஙனம் அவர்கள் தத்தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களைக் கூறி வாதிப்பதைக் கண்ட நாவலர் என்னென்று வினவ, மாணவர் தம் ஏதுக்களைக் கூறினர்கள். நாவலர், 'நானும் பிள்ளையவர்கள் கூற்றையே வலியுறுத்திக் கூறினேனன்றிப் பிறிதொன்று மில்லையென்று தாம் கூறிய பதத்தை, பனிக்கு-ஆலம்-நன்று” என்று பதம் பிரித்துக் கூறினர்.

பனிக்கு ஆலம் நன்று பனியை விட விஷம் நல்லது. நாவலர் பெருமான் ஹாசியமாகவும் கருத்தொத்தும் உடனுக்குடனே பதிலுரைப்பதில் வல்லுநர் என்பது இதனால் வியக்தமாகிறது.

1939 'சக்தி' இதழில் வெளிவந்தது.

மூலம்: பசுபதிவுகள்

எனது ஆறுமுக நாவலர் வலைப்பக்கம்

December 16, 2017

யார் இந்த கார்ல் பொப்பர் (Karl Popper)?


ருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞான அறிவுக் கொள்கையாளரான கால் பொப்பர் (1902 - 1994) தனது 92 வயதிற் காலமானார். இந்த நூற்றாண்டில் பொப்பரினது சிந்தனையின் ஆளுகைக்குட்படாத அறிவுத்துறையென எதுவுமே இல்லையெனலாம், கலை வரலாறு முதற்கொண்டு மருத்துவம் ஈறாகவுள்ள சமூக, இயற்கை விஞ்ஞானத் துறைகள் அனைத்திலும் பொப்பரின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது.

விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் தருக்கம் (The Logic of Scientific Discovery), திறந்த சமூகமும் அதன் எதிரிகளும் - (2 பாகங்கள்) (The Open Society and its Enemies), வரலாற்று நியதிவாதத்தின் வறுமை (The Poverty of Historicism), ஊகங்களும் நிராகரித்தலும் (Conjectures and Refutations), சார்பற்ற அறிவு (Objective Knowledge) என்பன பொப்பரால் எழுதப்பட்ட பிரதான நூல்களாகும், பெருந்தொகையான கட்டுரைகளையும் பொப்பர் எழுதியுள்ளார், இவற்றில் சில இவரது மாணவர்களால் தொகுக்கப்பட்டு மூன்று நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன, இம் மூன்று நூல்களும் பொப்பரின் முதனூலான விஞ்ஞான கண்டுபிடிப்பின் தருக்கம் என்பதில் முன்மொழியப்பட்ட வாதங்களிற்கு அனுசரணையாகத் தொகுக்கப்பட்டனவையாகும். "முடிவிலாத் தேடல்" (Unended Ouest) என்ற தலைப்பிலான சுயசரிதையொன்றும் பொப்பரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. இவை தவிர ஜே. சி. ஈசெல்ஸ் என்பாருடன் இணைந்து "உயிரும் அதன் மூளையும்" (The Self and its Brain) என்றதொரு நூலையும் இவர் எழுதியுள்ளார்.

கால் மார்க்ஸ், சிக்மன்ட் ஃபிராய்ட், ஐயன்ஸ்ரைன் என்ற மூவரதும் கண்டுபிடிப்புகளும் இளமை காலத்தில் தன்னை மிகவும் ஆர்கக்ஷவித்தவையாக இருந்தனவென்று தனது சுயசரிதையில் கூறுகிற கால் பொப்பர், இவர்களில் முதலிருவர்களதும் கொள்கைகளைக் காலப்போக்கில் தான் நிராகரித்து விட்டதாகவும், ஐயன்ஸ்ரைன் மட்டுமே உண்மையான விஞ்ஞான மனப்பான்மையுடைய
சிந்தனையாளராகக் காணப்பட்டாரெனவும் குறிப்பிடுகிறார். சமூகத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சி சில விதிகளின்படி இயங்குகிறதெனக் கருதிய கால் மார்க்ஸ், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கொள்கையை முன்மொழிந்தார். அதே போல சிக்மன்ட் ஃபிராய்ட் என்ற மருத்துவரும் தன்னிடம் நோயாளராக வந்தோரில் கணிசமான தொகையினர் உளநோயுடையவர்களாகவே இருப்பதைக் கண்டு, அவர்களின் உளநோயைத் தீர்க்கும் வகையில் ‘உளப்பகுப்பாய்வு' என்ற செல்வாக்குப் பெற்ற உளவியற் கொள்கையொன்றை உருவாக்கினார். கால் மார்க்ஸும் , ஃபிராய்ட்டும் தமது கொள்கைகள் உண்மையான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களே என்பதை நிறுவுவதற்கான தமது ஊகங்களிற்குச் சாதகமான தரவுகளைத் திரட்டுவதிலேயே பெரு முயற்சியுடன் ஈடுபட்டனர். தமது கொள்கைகள் பொய்யாகவிருக்கலாம் என்று அவர்கள் கிஞ்சித்தேனும் சிந்திக்கவில்லை. இதுவே கால் மார்க்ஸும், ஃபிராய்ட்டும் விடுத்த பெருந்தவறென பொப்பர் குற்றம் சாட்டுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி எந்தவொரு விஞ்ஞானக் கொள்கையையும் அறுதியாக நிறுவலாமென கருதுவது தவறானது. மேலும் அது விஞ்ஞான மனப்பான்மைக்கு முற்றிலும் எதிரானதென பொப்பர் குறிப்பிடுகிறார்.

தொலமியின் புவிமையக் கொள்கையை நிராகரித்ததாலேயே கொப்பநிக்கசின் சூரியமையக்கொள்கை சாத்தியமாயிற்று. காலம் வெளி பற்றிய நியூட்டனது கருத்தை நிராகரித்ததாலேயே சார்புக் கொள்கை கண்டு பிடிக்கப்படலாயிற்று. புவிமையக் கொள்கையையோ அல்லது நியூட்டனின் காலம், வெளி பற்றிய கொள்கையையோ அறுதியாக நிறுவப்பட்ட உண்மைகளென விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டிருந்தால் விஞ்ஞானம் இன்றைய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாது. பழைய கொள்கைகள் நிராகரிக்கப்பட்டதாலேயே புதிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு அதனூடாக விஞ்ஞானமும் வளர்ச்சியடைந்து வருகிறது.

ஐயன்ஸ்ரைன் தனது கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்படலாமென ஏற்றுக் கொண்டிருந்தார். வானத்தின் தொலைதூரத்திலிருந்து வருகிற ஒளியில் சிவப்பு வரி விலகல் காணப்படுவதேன் என்கிற பிரச்சனைக்கு பாரிய வானத்துப் பொருட்களைக் கடந்துவர நேரிடுவதாலேயே ஒளியானது ஈர்ப்பு விசைக்குட்பட்டு வளைந்து வருகிறது. இதுவே திரிசியக் கோட்டில் சிவப்பு வரி விலகலுக்கு காரணமாயிருக்கலாமென ஐயன்ஸ்ரைன் ஊகித்தார். நீண்ட காலம் வெறும் விஞ்ஞான ஊகமாக இருந்து வந்த இவ்விளக்கம் 1919ல் நிகழ்ந்த பூரண கிரகணத்தின் பொழுது வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. திரிசியக்கோட்டில் சிவப்பு வரி விலகலிற்கு ஈர்ப்பு விதி காரணமாக இல்லாதுவிடின் சார்புக்கொள்கையின் பொதுத் தத்துவம் தவறானதாக இருக்குமென ஐயன்ஸ்ரைன் எழுதினார். அவதானிக்கப்பட்ட நேர்வினடிப்படையில் தன்னால் மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கையையே நிராகரிக்கத் தயாராக ஐயன்ஸ்ரைன் இருந்தமையே விஞ்ஞான மனப்பாங்கென்று கூறுகிற பொப்பர் பழைய விஞ்ஞானக் கொள்கைகள் பொய்ப்பிக்கப்படுவதன் மூலம் புதிய கொள்கைகளை நாடி விஞ்ஞான அறிவு வளர்ச்சியுறுகிறதென வாதிடுகிறார்.

விஞ்ஞான ஆராய்ச்சி எப்பொழுதும் பிரச்சனைகளிலிருந்தே ஆரம்பமாகிறது. பிரச்சனைகளிற்கான தீர்வைக் காண வேண்டுமெனின் முதலில் அதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். விளக்கம் தீர்விற்கான முன் நிபந்தனையாகுமென கூறுகிற பொப்பர், விஞ்ஞானத்தின் நோக்கம் திருப்திகரமான விளக்கத்தைப் பெறுதலேயென எடுத்துக்காட்டுகிறார். உண்மையான விளக்கம் என்பதற்குப் பதிலாக திருப்திகரமான விளக்கம் என்ற பதத்தை பொப்பர் பயன்படுத்துவதேன் என ஒருவர் கேட்கலாம். பொப்பருடைய அபிப்பிராயப்படி விஞ்ஞான விளக்கங்கள் கொள்கைகள் அனைத்தும் தற்காலிக ஊகங்களேயாகும். எனவே தற்காலிக ஊகங்களை உண்மையான விளக்கம் என்பதிலும் பார்க்க திருப்திகரமான விளக்கமென்பதே மிகவும் பொருத்தமானதென இவர் கருதுகிறார்.

ஒரு விஞ்ஞானப் பிரச்சனைக்குத் தரப்பட்ட விளக்கம் திருப்திகரமான விளக்கமென எவ்வாறு தீர்மானிக்கலாமென்பதற்கு 'நம்பகத்தன்மையுடையதாயிருக்கிற விளக்கமே’ திருப்திகரமான விளக்கமாகுமென பொப்பர் பதிலளிக்கிறார். இதன்படி இன்று நம்பகத் தன்மையுடையதாகயிருக்கிறதொரு விஞ்ஞான விளக்கம் நாளை தனது நம்பகத் தன்மையை இழந்து விடலாம். இதனிடத்தை புதியதொரு விஞ்ஞான விளக்கம் பெறலாம். இவ்வாறே விஞ்ஞானக் கொள்கைகளும் அவதானிக்கப்பட்ட புதிய நேர்வுகளால் (தகவல்களால்) தம் நம்பகத் தன்மையை இழப்பதுடன் புதிய விஞ்ஞானக் கொள்கைகளிற்கு வழிவிடுவதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. இதுவே 'தவறுகளைக் களைவதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகிறதென’ பொப்பர் குறிப்பிடுவதன் தாற்பரியமாகும்.

தவறுகளை களைவதன் மூலமே விஞ்ஞானம் முன்னேறுகிறதெனில், இவ் வளர்ச்சியில் விஞ்ஞானியின் பங்கென்ன வென்பதற்கு, விஞ்ஞானியானவன் எச்சந்தர்ப்பத்திலும் எவ்விஞ்ஞானக் கொள்கையையும் நிறுவ வேண்டுமென முயற்சித்தல் கூடாதெனவும் மாறாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை பொய்ப்பிக்கவே முயலுதல் வேண்டுமெனவும் பொப்பர் வாதாடுகிறார். நிறுவ லிற்குப் பதிலாக நிராகரித்தலை வற்புறுத்துவதன் மூலம் பிரான்ஸிஸ் பேக்கன் என்பவரால் தொடக்கி வைக்கப்பட்டு பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த விஞ்ஞான முறைக்குப் பதிலாக பொய்ப்பித்தற்கோட்பாடு என்ற முற்றிலும் புதியதொரு விஞ்ஞான முறையை பொப்பர் முன்மொழிகிறார்.

பாரம்பரியமாக விஞ்ஞான முறையானது ஒன்றையொன்று தொடரும் ஆறு படிமுறைகளைக் கொண்டதாக எடுத்துக் காட்டப்பட்டது. முதலாவது படி நிலையில் நோக்கலும் பரிசோதனையும், இரண்டாவது படிநிலையில் தொகுத்தறிப் பொதுமையாக்கமும், மூன்றாவது படிநிலையில் கருதுகோள் உருவாக்கமும், நான்காவது படிநிலையில் கருதுகோளை வாய்ப்புப் பார்த்தலும் நடைபெற்று அதனடியாக விஞ்ஞான அறிவு பெறப்படுமெனக் கூறப்பட்டது. பொப்பர் இதற்குப் பதிலாக விஞ்ஞான முறையானது முதலாவது படிநிலையில் எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறதெனக் கூறி, அப்பிரச்சனை வழக்கமாக ஏலவேயுள்ளதொரு கொள்கையை அல்லது எதிர்பார்க்கையை மறுதலிப்பதாகவே இருக்க வேண்டுமென்கிறார். இண்டாவது படி நிலையில் மறுதலிக்கப்பட்ட பழைய கொள்கைக்குப் பதிலாகப் புதிதாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம்பெற வேண்டுமென்றும், மூன்றாவது படிநிலையில் புதிதாக முன் மொழியப்பட்ட கொள்கையிலிருந்து பரிசோதிக்கக் கூடிய தரவுகளை உய்த்தறிதல் இடம்பெறவேண்டுமென்றும், நான்காவது படிநிலையில் பரிசோதனை- அதாவது மறுதலிக்கப்படவேண்டிய கொள்கையை, பெறப்பட்ட புதிய தரவுகளினடிப்படையில் நிராகரிக்க முயற்சிப்பது இடம் பெறவேண்டுமென்றும், ஐந்தாவது படிநிலையில் பழைய விஞ்ஞானக் கொள்கையைா அல்லது போட்டியிடும் புதிய விஞ்ஞானக் கொள்கையா எது ஏற்புடையதெனத் தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம்பெற வேண்டுமென்றும் தனது விஞ்ஞான முறை பற்றிப் பொப்பர் விளக்குகிறார்.

விஞ்ஞான முறை பற்றிய பொப்பருடைய விளக்கம் - அதாவது பொய்ப்பித்தற் கோட்பாடு, தொகுத்தறிதலை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான முறை எதிர்நோக்குகிற பிரச்சனைகளைத் தீர்ப்பதுடன், விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுமெனவும் வாதிடப்படுகிறது.

தொகுத்தறிவு முடிவுகள் நிச்சயமான முடிவுகள் அல்லவென்றும், அவை வெறும் எதிர்பார்ப்புக்களே என்றும் டேவிட் கியூம் என்ற நவீனகால மெய்யியலாளர் எடுத்துக்காட்டினார். இவரது அபிப்பிராயப்படி தருக்க நிச்சயம் தொகுத்தறி முடிவுகளிற்கில்லை. அவை உளவியல்சார் நம்பிக்கையால் விளைந்த எதிர்பார்க்கையே. இவ்வாறு கியூமினால் எடுத்துக்காட்டப்பட்ட விமரிசனத்தை கருத்திற்கொண்ட தற்கால விஞ்ஞான முறையியலாளர்கள் நிகழ்தகவுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொகுத்தறி முடிவுகளின் நிகழ்திறத்தை அதிகரிக்க முயன்றனரெனினும், இம் முயற்சியினால் தொகுத்தறிதலிற்கெதிராக கியூமினால் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அகற்ற முடியவில்லை. சான்றுகளின் தொகையை அதிகரிக்க அதிகரிக்க நிகழ்திறம் அதிகரித்துச் செல்லுமேயொழிய நிச்சயத்தன்மையை அது ஒரு பொழுதும் எய்துவதில்லை. ஒரு விஞ்ஞானக் கொள்கையை அது உண்மையேயெனக் காட்ட ஆயிரக்கணக்கான சான்றுகளைச் சேகரித்தாலும் அதனை ஒருபொழுதும் அறுதியாக நிறுவமுடியாதென்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொப்பர் இப்பிரச்சனை யிலிருந்து விடுபடுவதற்கு பொய்யாக்கற் தத்துவம் பயனுடையதென எடுத்துக்காட்டினார்.

ஒரு விஞ்ஞானக் கொள்கை ஏற்புடையதேயென நிறுவுதற்கு எத்தனை சான்றுகள் தேவைப்படுமென எவராலும் தீர்மானிக்க முடியாதென்பது உண்மையே. ஆனால் அக்கொள்கை பொய்யானதென நிராகரிப்பதற்கு அக்கொள்கையை மறுதலிக்கும் ஒரு சான்று உளதென்று எடுத்துக்காட்டுவதே போதுமானதென்பதால், விஞ்ஞானக் கொள்கையை நிறுவுதற்குப் பதிலாக நிராகரிக்க முயல வேண்டுமென்று கூறுவதன் மூலம் தொகுத்தறிதலிற் கெதிராக கியூமினால் எடுத்துக் காட்டப்பட்ட பிரச்சனையை பொப்பர் தீர்க்கிறார்.

பொப்பரின் அபிப்பிராயப்படி: விஞ்ஞான அறிவின் முன்னேற்றம் ஏலவேயுள்ள விஞ்ஞானக் கொள்கைகளை மறுதலிப்பதன மூலம் புதிய கொள்கைகள் உருவாதற்கு வழியமைத்துக் கொடுப்பதாலேயே சாத்தியமாகும். பழைய கொள்கைகள் நிராகரிக்கப்படாதவரை புதிய கொள்கைகளிற்கு இடமில்லையென்பதால் விஞ்ஞானிகள் தமது ஆய்வை பொய்யாக்கற் தத்துவத்தினடிப்படையிலேயே செய்ய வேண்டியதாகிறதெனக் கூறியதன் பின்னர், பொய்ப்பிக்கப்படுதலே விஞ்ஞானக்கொள்கைகளின் இலட்சணம் என்ற முடிவிற்கு வருகிறார். பொய்ப்பிக்க முடியாதிருக்கும் விஞ்ஞானக்கொள்கையென இதுவரை காலமும் எந்தவொரு கொள்கையும் இருக்கவில்லை. எனவே பொய்ப்பிக்கக் கூடியதாயிருத்தலே விஞ்ஞானக் கொள்கைகளின் இயல்பெனறும், எந்தவொரு அறிவுத் துறையிலும் பொய்ப்பிக்க முடியாக் கொள்கைகள் உளதென ஒருவர் வாதிடுவராயின் அவ்வறிவுத்துறை விஞ்ஞானமேயல்ல எனறும் பொப்பர் வாதிடுகிறார். இவருடைய அபிப்பிராயப்படி மார்க்சிசம் பொய்ப்பிக்கமுடியாக் கொள்கை எனக் கூறப்படுவதால், அது விஞ்ஞானமல்ல (மார்க்சிசத்திற்கெதிரான பொப்பரின் விமரிசனம் ஏற்புடையதல்ல. மார்க்சிசம் என்றால் என்னவெனத் தான் விளங்கிக் கொண்டதொரு கொள்கையையே பொப்பர் விமர்சிக்கிறார். மார்க்சிசம் நியூட்டனதோ அல்லது ஐயன்ஸ்ரைனினதோ கொள்கைகளைப் போன்றதொரு விஞ்ஞானக் கொள்கையல்லவென்பதையும், அதுவோர் உலக நோக்காகவும், முறையியலாகவுமே இருக்கிறதென்பதையும் பொப்பர் உணரத்தவறிவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.) என்ற முடிவிற்கு வருகிறார். இதுபோலவே வரலாறும் விஞ்ஞானமல்லவென்பது அவரது நிலைப்பாடு.

விஞ்ஞானத்தை விஞ்ஞானமல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்தும் தத்துவமாக பொய்ப்பித்தற் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பொப்பர் இதனடிப்படையில் அறிவுக்கொள்கை யொன்றையும் விருத்தி செய்து கொள்கிறார். உண்மை எதுவென எவரும் அறியார், நாம் செய்யக் கூடியதெல்லாம் அறியாமையிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்வதே. முடிவிலியாய்த் தொடரும் இப்பயணத்தை அறிவின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையென அழைப்பர். அறியாமையிலிருந்து அறிவை நோக்கிய இப்பயணம் பிரச்சனை தீர்க்கும் முறையிலமைகிறதென்பது பொப்பரது வாதம். இதனைப் பின்வருமாறு விளக்குகிறார்.

P1—> TS —> EE —> P2

அறிதல் முயற்சி எப்பொழுதும் ஒரு பிரச்சனையுடனேயே ஆரம்பமாகிறது. இதனை P1 குறிக்கிறது. TS என்பது முன்மொழியப்பட்ட தீர்வு முயற்சியையும், EE என்பது முன்மொழியப்பட்ட தீர்வில் காணப்படும் தவறுகளைக் களைதலையும் P2 என்பது தவறுகள் களையப்பட்டதன் பின்னர் உள்ள நிலையையும் குறிக்கிறது. P1 உம் P2 உம் சாராம்சத்தில் பிரச்சனைகளேயெனினும், P1 பிரச்சனையின் தொடக்கத்தையும், P முன்மொழியப்பட்ட தீர்வினடிப்படையில் தவறுகள் களையப்பட்ட நிலையையும் அதேசமயம் புதிய பிரச்சனையொன்றின் தொடக்கத்தையும் சுட்டுகிறது.


P1 —> TS —> EE —> P2 —> TS —> EE —> P3

என அறிவானது உண்மையை நோக்கி பிரச்சினை தீர்க்கும் முறையினூடாக வளர்ச்சியடைந்து செல்கிறது. பொதுவாக அறிவுலகத்தையும், குறிப்பாக விஞ்ஞான அறிவையும் பொறுத்தவரையில் முடிவிலியாய்த் தொடரும் இத்தேடலில் பழைய கொள்கைகள் (ஊகங்கள்) நிராகரிக்கப்பட்டு புதிய கொள்கைகள் (ஊகங்கள்) வந்தவண்ணமேயிருக்கின்றன. அறிவும் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. எந்தவொரு அறிவுத் துறையில் எக்கணத்தில் இவ்வளர்ச்சி தடைப்படுத்தப்பட்டு, இருப்பதுடன் திருப்தியடைய நேரிடுகிறதோ அக்கணத்தில் அவ்வறிவுத் துறை விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை இழந்து விஞ்ஞானமல்லாததாய், சித்தாந்தமாய்ப் போய்விடுகிறது.

ஊகமும் நிராகரிப்புமாக வளர்ந்து செல்வதே விஞ்ஞான பூர்வமான அறிவு என்ற நிலைப்பாட்டிலிருந்து கொண்டு நிர்ணயமில்வாதம் என்ற கோட்பாட்டைப் பொப்பர் முன்மொழிகிறார். நிர்ணயமில்வாதமென்பது நிர்ணயவாதத்திற்கு எதிரானது. இயற்கை விஞ்ஞானங்களிலும், சமூக விஞ்ஞானங்களிலும் நிர்ணயவாத மென்பது ஒரு அதிதக்கொள்கையாக (Meta theory) அதாவது அறிவைப் பெறுவதற்கு ஆதாரமாயிருக்கின்ற தத்துவமாக எண்ணப்பட்டது. காரணத்தைத் தேடுவதன் மூலம் காரியத்தை விளங்கிக்கொள்ளலாம் என்ற காரணக்கோட்பாடும் நிர்ணயவாதத்தையே ஆதாரமாகக் கொண்டது. நிர்ணயவாதத்தையும் காரணக்கொள்கையையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். அரிஸ்ரோட்டலின் காலத்திலிருந்தே காரணக்கொள்கை அறிவைப் பெறுவதற்கானதொரு திறவுகோலாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவந்தது. நியூட்டனின் விஞ்ஞானமும், நிறை போட்டிப் பொருளாதாரமும், திட்டமிடல் தொடர்பான கொள்கைகளும் உள்பொருளியலடிப்படையில் நிர்ணயவாதமாகவும் அறிவாராய்ச்சியல் அடிப்படையில் காரணக் கொள்கையாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிர்ணயவாதமும் காரணக்கொள்கையும் இயற்கை விஞ்ஞானங்களில் நியதிவாதத்திற்கும் சமூக விஞ்ஞானங்களில் விதிவாதத்தை ஆதரிக்கும் மூடுண்ட சமூக விஞ்ஞானக் கொள்கைகளுக்கும் இட்டுச் செல்லுமென எச்சரித்து, நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறார். இயற்கை விஞ்ஞானங்களில் ஒன்றான பெளதீகத்தில் ‘’குவாண்டும் மெக்கானிக்ஸ்’’ (சக்திச் சொட்டுக் கொள்கை) நிர்ணயமில்வாதத்தை ஆதரிக்கிறதென்றும் நிர்ணயமில்வாதம் சமூகவிஞ்ஞானங்களில் குறிப்பாக அரசியலில் திறந்த சமூகத்திற்கு இட்டுச்செல்லுமென்றும் பொப்பர் குறிப்பிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி திறந்த சமூகமே நீதியான சமூகமாகும். பொப்பரின் வழியில் திறந்த சமூகத்தின் பொருளாதாரம் பற்றிச் சிந்தித்த பெருளியலாளர்களில் கயக் (Hyek) குறிப்பிடத்தக்கவர்.

திறந்த சமூகம் என்பது பொப்பருடைய அபிப்பிராயப்படி விமரிசனத்தை அனுமதிக்கிற, சகிப்புத்தன்மையுடன் தாங்கிக் கொள்கிற சமூகமாகும். சமூகம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இம்மாற்றம் எவரினதும தேவை கருதியோ அல்லது யாதேனுமொரு திட்டத்தின்படியோ நிகழ்வதில்லை. எனவே சமூக நிறுவனங்களை உருவாக்கும் பொழுதும், சமூகம் தழுவிய தீர்மானங்களை எடுக்கும் பொழுதும் அதனோடு தொடர்புடையவர்கள் மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியவர்களாவர். அனைவர்க்கும் நன்மை பயக்குமெனக் கருதும் அரசியற் கொள்கைகள் அனைத்தையும் பொப்பர் நிராகரிக்கிறார். ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதவை இன்னவை என்ற திட்டத்துடன் அரசியலை அணுகுபவர்கள் சமூகத்தை ஆபத்தான பரிசோதனைக்கு உள்ளாக்குபவர்களாவர். விளைவுகளின் பலாபலன்களை முன்கூட்டியே அறியும் வல்லமை மனிதர்க்கில்லை. எதிர்காலத்தின் தேவைகள் பற்றிய இன்றைய கணிப்பீடு ஒருபொழுதும் சரியாக இருக்கமுடியாது.

மனிதனின் அறிவு வளர்ந்துகொண்டே போகிறது. சமூகத்தின் தேவைகளும் மாறிக்கொண்டே போகின்றன. எனவே எதிர்காலத் தேவைகள் எவையாக இருக்கலாமென்று தெரியாத நிலையில் எதிர்காலத்திற்காக நாம் இன்று எவ்வாறு திட்டமிடமுடியுமென பொப்பர் வாதிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி சமூகத்தை முழுமையும் ஒரேயடியாக மாற்ற முயலாது சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். விமரிசனத்தை அனுமதிப்பதன் மூலம் சீர்திருத்தங்களின் நன்மை தீமைகளை அறியமுடிகிறது, திருத்திக்கொள்ளவும் முடிகிறது. மேலும் நடைமுறைப்படுத்தப் பட்டதொரு சீர்திருத்தம் சமுதாயத்திற்கு தீங்கு பயக்குமெனக் கண்டுகொண்டால் குறைந்தளவு இழப்புடன் அதனைச் சீர் செய்து கொள்ளவும் முடிகிறது. ஆனால் முழுமையான மாற்றத்தை சமூகம் தழுவி நடைமுறைப்படுத்தும் பொழுது தீமைகளைத் தவிர்ப்பதற்கு சந்தர்ப்பமில்லாது போவதுடன், திருத்திக் கொள்ளவும் இடமில்லாது போய்விடுகிறது. அதிகளவு இழப்புக்களையும் சந்திக்க நேரிடுகிறது.

முழுமையான சமூகம் தழுவிய மாற்றங்களிற்குப் பதிலாக, படிப்படியான சீர்திருத்தக் கொள்கையை முன்மொழிகிற பொப்பர் அதனை எவ்வாறு நடைமுறைப் படுத்துவதென்பதற்கு 'சந்தர்ப்பத்தின் தருக்கம்’ (Logic of situation) என்ற கோட்பாட்டை முன்மொழிகிறார். எத்தகைய முற்கற்பிதங்களும் இல்லாது புத்திபூர்வமாக, தனித்தனியாக பிரச்சனைகளை அணுகுவதன் மூலம் பொருத்தமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே சந்தர்ப்பத்தின் தருக்கம்  என்பதன் தாற்பரியமாகும். முழுமைக்குமான சிபார்சுகள் அவை எக்காலத்திற்குமுரியவை என்றோ கருதாது ஒவ்வொரு சந்தர்ப்பமும் அதற்கேயுரிய சிறப்பியல்புகளுடன் அணுகப்படல் வேண்டும்.

சமூகம் என்றோ பிளோட்டோ முதல் மார்க்ஸ் ஈறாக சமூகம் பற்றிச் சிந்தித்தவர்களெல்லாம் தமது திட்டங்களுக்கியைய சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினர். இவர்களது இவ்விருப்பம் அரசியலில் அதிகாரம் செய்யும் சர்வாதிகாரிகளையே தோற்றுவிக்கும். தாம் விரும்பும் சமூக அமைப்பு எவ்வாறிருக்க வேண்டுமென்பதில் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே. மாற்றத்தை அதிகம் விரும்பாத பழமைவாதிகள், தாராண்மைவாதிகள், சோசலிஸ்டுக்கள் என மாறுபட்ட அரசியலார்வம் கொண்டவர்களை ஒரு சமூகத்திற் காணலாம். இக்குழுக்களின் தன்மை எதுவாயிருப்பினும், அரசியலதிகாரத்தைப் பெறும் பொழுது அவர்கள் தமது அரசியற் திட்டங்களையே நடைமுறைப்படுத்த விரும்புவர். ஒரு திறந்த சமூகத்தில் எதிர்க்கருத்துடையவர்களின் விமரிசனம் ஆட்சியாளர்களை விழிப்புடன் செயற்பட உதவும். முழுச் சமூகத்திற்கும் பொதுவான இலட்சியங்கள் என்ற கருத்தாக்கத்திற்கு திறந்த சமூகத்தில் இடமில்லை. கற்பனாவாத இலட்சியங்களை கொண்ட அரசியலோ முழுச்சமூகத்திற்குமான பொதுநோக்கென ஒன்றை அமுல்படுத்துவதாகக் கூறிக் கொண்டு சர்வதிகாரத்திற்கு வழி வகுக்கிறது.

பாரிய அளவிலான தீவிர புனரமைப்புகள் மிகவும் நீண்ட காலத்தை எடுக்கும். இவ்விடைக்காலத்தில் நோக்கங்களும், இலட்சியங்களும் மாறாமல் தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்குமென எவரும் எதிர்பார்க்கமுடியாது. நோக்கங்களும் இலட்சியங்களும் மாறமாற, அதற்கேற்ப மாற்றங்களும் எல்லையற்று நீண்டு கொண்டே போகும். முடிவில் துன்பமும் விரக்தியுமே மிஞ்சும். இலட்சிய சமூகம் எப்பொழுதும் இ ல ட் சி ய மா க வே இருப்பதால், அடையமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. மாற்றம் ஒரு பொழுதும் ஓய்ந்து விடுவதுமில்லை, மாற்றமுறாது எதுவும் இருப்பதுமில்லை. எனவே சமூகத்திற்கான மாற்றமுறா திட்டமென்பது அர்த்தமற்றதொன்றென பொப்பர் வாதிடுகிறார். சுதந்திரம் என்றால் என்ன? சமுத்துவம் என்றால் என்ன? சனநாயகம் என்றால் என்ன? என்பது போன்ற வினாக்களிற்கு ஒரு பொழுதும் முடிவான பதிலைக் கூற முடியாது. இத்தகைய வினாக்களிற்குரிய விடை, அடிப்படையில் சாராம்சவாதத்திற்கும் கற்பனா வாதத்திற்குமே இட்டுச் செல்லும். எனவே சமூகப் பிரச்சனைகளை அணுகும் பொழுது “இத்தகைய சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்” , “நீர் என்ன கருதுகின்றீர்?” என பரஸ்பர விமரிசனத்துடன் கூடிய வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுத்துதல் வேண்டும். விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்படுவது போலவே அரசியலிலும் ஆட்சியாளர்களின் ஊகங்கள் பொய்யாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் விமரிசனத்தை வரவேற்றுச் செயற்படுதல் வேண்டும்.

இறுதியாக வரலாறு பற்றியதொரு குறிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாமெனக் கருதுகிறேன். 'திறந்த சமூகம் அதன் எதிரிகளும்' என்ற நூலின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் ‘’வரலாற்றிற்கு யாதேனுமொரு பொருளுண்டா’’ என்றதொரு கட்டுரை உளது. அக்கட்டுரையில் நாகரீகத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் முழுமையான வரலாறு என வரலாற்று அறிஞர்கள் கூறுவதை சுத்தமான அபத்தம் என பொப்பர் குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்தின் வரலாற்றை பண்பாட்டுக் கூறுகள் பலவற்றின் வரலாறாக, அரசியல் வரலாறாக, சாதியின் வரலாறாக, சமயத்தின் வரலாறாக வர்க்கங்களின் வரலாறாக பலவகையில் எழுதலாம். அவையனைத்தும் மெய்யான வரலாற்றின் நிரப்புக் கூறுகளாக இருப்பதுடன், வரலாற்றாசிரியர்களின் ஊகங்களாகவே இருக்கின்றன. கடந்த காலம் 'இவ்வாறு தான் இருந்ததென’ கூறுபவன் அக்காலம் பற்றிய தனது விளக்கத்தைத் தருகிறானே ஒழிய உண்மையை கூறுபவனாக ஒரு பொழுதும் இருக்கமாட்டான், அவ்வாறு இருக்கவும் முடியாது.

பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (பெப்ரவரி 2, 1947 - மே 29, 2009)


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைப் பேராசிரியர். அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.

பண்பாடு 10வது சிறப்பிதழ் ஆனி 1995. வெளியீடு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு

நன்றி: நூலகம்.ஒர்க்

விக்கிப்பீடியாவில் கார்ல் பொப்பர், சோ. கிருஷ்ணராஜா.