October 13, 2011

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1874-1966)



சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (சூன் 8, 1874 - ஏப்ரல் 12, 1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியில் இருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார்.

வாழ்க்கைக் குறிப்பு:

வைத்திலிங்கம் துரைசுவாமி யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் தமிழ், சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலியார் குடியில் பிறந்தவர். தந்தை ஐயாம்பிள்ளை வைத்திலிங்கம் திருவிதாங்கூர் அரசில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். துரைசுவாமியுடன் கூடப் பிறந்தவர்கள் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்தினம், இரத்தினகோபால், இராஜகோபால் ஆகியோர். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். முதலியார் சிற்றம்பலம் சதாசிவம் என்பவரின் மகள் இராசம்மா என்பவரை 1905 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மகேசுவரி, நடேசுவரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேசுவரி, பரமேஸ்வரி, யோகேந்திரா, தேவேந்திரா என எட்டுப் பிள்ளைகள். யோகேந்திரா துரைசுவாமி இலங்கைத் தூதுவராகப் பல உலக நாடுகளில் பணியாற்றியவர்.

அரசியலில்:

சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இடம்பெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஆறுமுகம் கனகரத்தினத்தை அதிகப்படியான வாக்குகளால் வென்று முழு வட மாகாணத்திற்கும் பிரதிநிதியானார். இதனால் வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத்தின் மேற்குப் பகுதியில் இருந்து போட்டியின்றித் தெரிவானார்.

இலங்கைக்குக் கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆணிலப்பதம் எனப்படும் டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் அவர் அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை.

தம் கொள்கையில் இருந்து வழுவாமல், 1934 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கு என இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார். பதிலாக யாழ்ப்பாணத்தில் இருந்து அருணாசலம் மகாதேவா, சுப்பையா நடேசன், நெவின்ஸ் செல்வதுரை, ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சபை முதல்வராகத் தெரிவு:

1936 ஆண்டில் இரண்டாவது அரசாங்க சபைக்கான சபை முதல்வர் தேர்வுக்கு பிரான்சிசு டி சில்வா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சில்வா 17 வாக்குகளும், பந்துவந்துடாவை 14 வாக்குகளும், துரைசுவாமி 27 வாக்குகளும் பெற்றனர். இந்நிலைமை அரசியலமைப்பின் 5 (6A) பிரிவின் கீழ் அமையாததனால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் பெயரை நீக்கி விட்டு ஏனைய இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சில்வாவிற்கு 29 வாக்குகளும் துரைசுவாமிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, அபயகுணசேகர துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததனால், துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சேர் பட்டம்:

துரைசுவாமி அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராக துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

சமூகப் பணி:

துரைசுவாமி சைவவிருத்திச் சங்கத்திலும், சைவபரிபாலன சபையிலும் தலைவராய் இருந்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரி முதலாம் கலாசாலைகளின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவை புரிந்துள்ளார்.

பெரியோர் கருத்து:

துரைசுவாமிக்கு யாழ்ப்பாணத்து யோகசுவாமிகளின் அருளும் இருந்துள்ளது. "சுவாமிகள் எனக்கு அடித்து அப்பம் தீற்றிய அற்புதத்தை என்னென்பேன்" என்று துரைசுவாமி அடிக்கடி கூறுவார்.



சிவமணங்கழுது சேர். துரைசுவாமிக்கு, அவர்
மனம் உருகுது அன்பு மிகப் பெருகுது;
தன்னைத் தன்னால் அறியும் தவமும் வாய்ச்சுப் போச்சுது;
தன்னைப்போற் பிறரையும் நேசிக்கலாச்சுது.
உற்றர் பிறந்தார் ஊரார் ஒப்பிடலாச்சுது.
உண்மை முழுதுமென்னும் உறுதியும் வாய்ச்சுப் போச்சுது." - யோகசுவாமி”




சேர். துரைசுவாமி ஆர் நிகருனக்குப் பார் சிவம் எங்கும்!
ஆர் பகை? ஆர் நட்பு?
செய்வது பூசை நினைப்பது மந்திரம், உய்ந்தாய், உய்ந்தாய்.
பலபடச் சொல்வதில் பலன் ஒன்றுமில்லை." - யோகசுவாமி”



சேர் துரைச் சாமி சிவயோகர் மாசீடர்
பார்புரக்கு மன்றப் பழந்தலைவர் - நேர்மைமிகு
சைவத் தமிழர் சனநா யகமுதல்வர்
உய்வைப் புகழும் உலகு." - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை



நன்றி: விக்கிப்பீடியாவுக்காக எழுதியது


உசாத்துணை: க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லாவை வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008

October 09, 2011

ஆறுமுக நாவலரின் திணற அடித்த தமிழ்!

றுமுக நாவலர் ஒருநாள் காலை ஏழரை மணி அளவில் சென்னைக் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றிக் கொண்டது. அச்சம்பவம் காரணமாகப் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்தது. நாவலர் சாட்சியாக நீதி மன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


நீதிபதி, ஆறுமுக நாவலரைப் பார்த்து, "தீ விபத்து நடந்தபோது எத்தனை மணி இருக்கும்? நீங்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு ஆறுமுக நாவலர், மறுமொழியாக, தூய்மையான உயர்ந்த ஆங்கிலத்தில் விடை கூறினார். அவர் ஆங்கிலத்தில் விடை கூறியதை நீதிபதி வரவேற்கவில்லை. நாவலரைத் தமிழிலேயே விடை கூறுமாறு பணித்தார்.

உடனே நாவலருக்குச் சினம் வந்துவிட்டது.

"தமிழில் பேசி எல்லோரையும் திணற அடிக்கிறேன் பார்" என்று எண்ணியவராய்,

"அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே
காலேற்றுக் காலோட்டப் புக்குழி''.

என்று விடை சொன்னார்.

ஆறுமுக நாவலர் இவ்வாறு சொன்னதும், நீதிமன்றத்தில் எல்லோரும் திகைத்து விட்டனர். ஏனெனில், யாருக்கும் அவர் பேசிய தமிழ் புரியவில்லை. இந்நிலையில், மொழிபெயர்ப்பாளர் நிலைமை மிகவும் பரிதாபகரமாகப் போய்விட்டது. ஏனெனில், அவர்தான் ஆறுமுக நாவலர் பேசியதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதிக்குச் சொல்ல வேண்டும்!

ஆறுமுக நாவலர் கூறிய விடை இதுதான்:-

"அன்று சூரியன் வானத்தில் எழுந்து நான்கு நாழிகை இருக்கும்; நான் கடல் ஓரத்தின் அருகே காற்று வாங்கியவாறு உலாவச் சென்றபோது''!

நீதிபதியின் முகத்தில் ஈயாடவில்லை!

நன்றி:- தினமணி