March 25, 2011

பிரமிளின் "உதிர நதி"

உதிர நதி
-பிரமிள்-

அச்சிட்ட எழுத்துக்களின்
அறிவிப்புப் பவனி
ஸ்தம்பிக்கிறது.
செய்தித்தாளில்
பிரதிபலிக்கும்
வாசகமுத்துக்குள்
அலறுகின்றன
ஓராயிரம்
கபாலங்கள்.
அலறும் ஒவ்வொரு
அச்செழுத்திலும்
குரல் பெறுகிறது ஓர் மூதாதை இனம்.
மனித வர்க்கத்தின் மனசாட்சியினுள்
பாய்கிறது அதன்
உதிரநதித்துடிப்பு
நேற்றிருந்த முற்றத்தில்
மழலை விளைத்து இன்று
குற்றியிரில் துடிக்கும்
குழந்தையின் நாளத்தில்
நேற்றைக்கும் முக முந்தி
எகிப்தின் பிரமிட்கள்
எழுமுன்னாடி ஒரு
யுகத்தின் வாசலில்
இமயம் உருகி
எழுகிளை விரித்து
பிரவஹித்த சப்த
சிந்து துடிக்கிறது.
துடித்துக் கொடுங்கோலின்
துப்பாக்கி ரவை மழையில்
கிடந்து வெடிக்கிறது.

மூலம்: நிலம், சனவரி 2001
நன்றி: நூலகம்