July 11, 2007

சைவநன்மணி நா. செல்லப்பா காலமானார்

சைவ அறிஞரும் நூலாசிரியருமான சைவநன்மணி நா. செல்லப்பா கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தி இன்றைய தினக்குரல் நாளிதழில் வெளிவந்திருக்கிறது.


இவர் அரச சேவையில் சௌக்கியப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார ஸ்தாபனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சௌக்கிய போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மீக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களம் "சைவநன்மணி" என்ற பட்டத்தையும் உலக சைவப் பேரவை "கௌரவ கலாநிதி"ப் பட்டத்தையும் அளித்து கௌரவித்திருந்தன. இவர் பல சமய சிந்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளுக்கு அவரது குருவான செல்லப்பா சுவாமிகள் அருளிய மகா வாக்கியங்களான:

1. எப்பவோ முடிந்த காரியம்
2. நாம் அறியோம்
3. ஒரு பொல்லாப்பும் இல்லை
4. முழுதும் உண்மை

ஆகியவற்றுக்கு அருமையான விளக்கங்களை காலஞ்சென்ற சைவநன்மணி நா. செல்லப்பா தந்திருக்கிறார். இவ்விளக்கங்களை டாக்டர் கி. லோகநாதன் அவர்கள் பிரதியெடுத்திருக்கிறார். விரும்பியவர்கள் எனது தளத்துக்கு சென்று வாசித்து மகிழலாம்:

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்


July 09, 2007

நவாலி நரபலி 1995

அதிகாலை விழிதிறந்த போது
எமன் ஊருக்குள் புகுந்தான்.
அசுரப்பறைவைகள்
இரை தேடி வானத்தில் அலைந்தன.
பீரங்கி பூட்டிய இயந்திர யானைகள்
குருதி வடியும் பற்களுடன் நிலமுழுது வந்தன.


கையில் எடுத்தவை மட்டுமே எடுத்தவையாக
ஊர்துறந்து ஓடியது ஒரு கூட்டம்.
பின்னாற் துரத்தி வந்தன எறிகணைகள்.
வாயுலர்ந்து போனது
நீருக்குத் தவித்தன நாக்குகள்.


ஆயினும் வேகத்தைக் குறைக்கவில்லை கால்கள்.
கூடுகலைந்த குருவிகள் " நவாலி" வந்தடைந்தன.
வரவேற்றது "சென் பீற்றர்ஸ் தேவாலயம்".
இனிக் கொஞ்சம் ஆறலாமென
சுவாசம் சீரானது.
"வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
நானுங்களுக்கு ஆறுதல் தருவேன்" என்றது அசரீரி.


வாருங்கள் என்று அகலத் திறந்து கிடந்தன
தெய்வத் திருச்சபையின் கதவுகள்.
அச்சமில்லை அமருங்களென்று
கட்டளையிட்டது கூரைச்சிலுவை.
"பேதுருவானவரே!
நாம் செய்த தவறென்ன?
ஏனெங்கள் கூடு கலைந்து போனது?
என்றபடி எல்லோரும் ஆறியிருந்த போதுதான்
அது நடந்தது.


இரைச்சலிட்டபடி வந்த கொலைப்பறவை
ஆறுகுண்டுகளைப் பீச்சிவிட்டுப் போக
"ஐயோ!" புழுதி மேகத்துள்ளே
உலகத்தை உலுக்கியது கதறல் உணர்வு
திரும்பிய போது உலகமே இருண்டு கிடந்தது.
குப்பென்றடித்தது பிணவாடை.
நொடிக்குள் நூறு உடல்கள் குதறப்பட்டு
சிதறிக்கிடந்தன அவயவங்கள்.


அந்தச் சதைக் குவியலுக்குள்ளேதான்
ஒரு தாமரைப் பூவும் கிடந்தது.
புழுதி பூசப்பட்டு குருதி வழிந்தபடி
அழகிய கவிதையொன்று கிடந்தது.
பஞ்சுப் பொதி போன்ற பிஞ்சொன்று
பிளந்து கிடந்தது.


கருப்பை வாசல் கடந்து வந்து
ஆறுமாதங்கள் கூட ஆகாத "கற்பகப்பூ"
கருகிக் கிடந்தது.
உலகமெங்கும் அரசோச்சும்
மனித உரிமைகளின் மனச் சாட்சிகளே!
என்ன செய்யும் உத்தேசம்?
ஏவிவிட்ட பாவி இன்னும் இருக்கின்றாள்.
"ரீவி" யில் முகம் காட்டுகின்றாள்.
குளிர்ந்த நிலவின் பெயர் அவளுக்கு
அவளும் கருப்பை சுமந்தவள்.
அடையாளம் தெரிகிறதா?
அவளுக்கு என்ன தீர்ப்பு எழுதுவீர்?


புதுவை இரத்தினதுரை

1995 ஆண்டு ஜூலை 9 இல் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 141 பேர் கொல்லப்பட்டனர். பார்க்க: விக்கிபீடியா கட்டுரை