July 11, 2007

சைவநன்மணி நா. செல்லப்பா காலமானார்

சைவ அறிஞரும் நூலாசிரியருமான சைவநன்மணி நா. செல்லப்பா கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தி இன்றைய தினக்குரல் நாளிதழில் வெளிவந்திருக்கிறது.


இவர் அரச சேவையில் சௌக்கியப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார ஸ்தாபனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சௌக்கிய போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ஆம் ஆண்டில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஆன்மீக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய அலுவல்கள் திணைக்களம் "சைவநன்மணி" என்ற பட்டத்தையும் உலக சைவப் பேரவை "கௌரவ கலாநிதி"ப் பட்டத்தையும் அளித்து கௌரவித்திருந்தன. இவர் பல சமய சிந்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சித்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் சிவயோக சுவாமிகளுக்கு அவரது குருவான செல்லப்பா சுவாமிகள் அருளிய மகா வாக்கியங்களான:

1. எப்பவோ முடிந்த காரியம்
2. நாம் அறியோம்
3. ஒரு பொல்லாப்பும் இல்லை
4. முழுதும் உண்மை

ஆகியவற்றுக்கு அருமையான விளக்கங்களை காலஞ்சென்ற சைவநன்மணி நா. செல்லப்பா தந்திருக்கிறார். இவ்விளக்கங்களை டாக்டர் கி. லோகநாதன் அவர்கள் பிரதியெடுத்திருக்கிறார். விரும்பியவர்கள் எனது தளத்துக்கு சென்று வாசித்து மகிழலாம்:

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்


0 comments: