November 26, 2010

ஆறுமுகநாவலர் ஒரு நோக்கு


ஈழத்துத் தமிழினம் தனது பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, கலை, கலாசாரத்தை இழக்க வேண்டிய ஒரு பயங்கரமான சூழலின் போது அவதரித்தவர் தான் நல்லை நகர் தந்த ஆறுமுகநாவலர் பெருமான். ஈழத்தமிழர் தம் சமய வாழ்வில் புகுந்து விட்ட களைகளை நீக்க முயன்றும் புறச் சமய வெள்ளத்திலிருந்து அணை கட்டி காவல் செய்ய முயன்றும் பெரும் தொண்டாற்றியவர்; வெற்றியும் கொண்டவர்.

"நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?'
என்ற சி.வை.தாமோதரம்பிள்ளையின் அழியாக்கூற்றே இதற்கு நற்சான்றாகும்.

அன்னார் நல்லை நகரில் 18.12.1822 அன்று அவதரித்தார். நாவலருக்கு சிறு வயதிலேயே தமிழையும் சைவசமயத்தையும் வளர்த்து அபிவிருத்தி செய்யவேண்டுமென்றும் ஆசை உண்டாகி அது பேராசையாகி அதற்காக எந்த இடர்வரினும் எதிர்கொள்ளும் துணிவும் உண்டாயிற்று.

இக்காலகட்டத்தில் தான் கிறித்தவப் பாதிரியாரான பேர்சிவல் துரையின் நட்பு நாவலருக்குக் கிட்டியது. அந்நேரத்தில் பார்ப்பவர்களுக்கு நாவலரும் பேர்சிவல்துரையும் நேர் விரோத கொள்கையுடையவர்கள். ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் என்றே எண்ணத்தோன்றியது. ஆனால் உண்மை அதுவல்ல; அவர்கள் இருவரும் தத்தம் சமயத்திற்கு விசுவாசமாயிருந்தார்கள். இருவரம் உண்மைச் சமயவாதிகளாக இருந்தமையால் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவில்லை. மாறாக நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். இந்த நட்பு மன ஒருமைப்பாடு ஒரு சைவனுக்கும் ஒரு கிறித்தவனுக்கும் இன்னுமொரு கிறித்தவனுக்கும் இருந்ததில்லை.

நாவலருக்கு பார்சிவல் துரையின் நட்பு கிடைத்த விதம் சுவாரசியமானது. புதுமையானது. ஆங்கிலம் கற்கும் முகமாக நாவலரது 12 ஆவது வயதில் அவர் பார்சிவல் துரையிடம் அனுப்பப்பட்டார். இவ்வாறு ஆங்கிலக் கல்வி கற்கும் போது தமிழ்க் கல்வியை இன்னமும் அதிகமாகக் கற்க வேண்டும் என்ற பேராவலால் அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த சரவணமுத்து புலவரிடத்திலும் சேனாதிராய முதலியாரிடத்திலும் திருக்குறள், நன்னூற் காண்டிகையுரை, இரகுவம்சம், விருத்தியுரை, திருக்கோவையார், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற அரும்பெரும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்று மேல்வகுப்புக்கு வந்தபோது ஆறுமுகப் பிள்ளையின் (இதுதான் நாவலருக்குப் பெற்றோர் சூட்டிய இயற்பெயர்) இரு மொழித் திறமை கண்டு வியந்த பார்சிவல் துரை அன்னாரை கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் மேல் வகுப்புகளுக்கு தமிழ் கற்பிக்கவும் வேண்டிக் கொண்டார். மேலும் பைபிளைத் திருத்தி தமிழில் அச்சேற்றுவதற்கு உதவி புரியுமாறும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.

அந்த அன்புக் கட்டளையை சிரமேற் கொண்டு பைபிளை தமிழில் எழுதி முடித்தவுடன் அதனை அச்சிடும் பொருட்டு பார்சிவல் துரையுடன் சென்னை மாநகருக்கு வந்தார். அங்கிருந்த பாதிரிமார் நாவலர் தமிழில் தவறு உள்ளதென்று தடை செய்ய முயற்சித்தனர். ஆயினும் சென்னை நகரிலே மிகச் சிறந்த வித்துவானாக இருந்த திரு.மகாலிங்க ஐயர் தமிழ் பைபிளை முற்றாக வாசித்து அதில் பிழையேதும் இல்லையென்றும் அப்படியே அச்சிடலாமென்றும் கூறி நாவலரின் யாழ்ப்பாணத் தமிழைப் போற்றி சிலாகித்துப் பாராட்டினார்.

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய போது அநேகர் சைவசமயத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறுவதை அறிந்து மனம் வருந்தினார். இந்நிகழ்வு தமது சமயத்திலுள்ள உண்மையை அறியாமலே நிகழ்கின்றது என்பதை அறிந்தார். சைவசமயப்பிரசங்கங்களும் சைவ நூல் வெளியீடுகளுமே மக்களுக்கு உண்மையை உணர்த்தி மதமாற்றத்தை நிறுத்த முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு செயலில் இறங்கினார்.

யாழ்.வண்ணார்பண்ணையில் வள்ளல் வைத்திலிங்கச்செட்டியாரால் கட்டப்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் வசந்த மண்டபத்திலே தமது 25 ஆவது வயதிலே 31.12.1947 அன்று தனது முதலாவது சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இரவில் பிரசங்கம் நடைபெற்றது.

அவரைப்பின்பற்றி அவரது பள்ளி நண்பரான கார்திகேய ஐயரும் சைவப்பிரசங்கங்கள் நடாத்திவந்தார். இவ்விருவரும் வேதாகமங்கள், சிவபக்தி, யாக்கை நிலையாமை, மகளிரொழுக்கம், திருவிழாக்கள், சிவதீட்சை, தர்மம், கல்வி கற்பித்தல், பசுக்காத்தல், பிரபஞ்சமாயை, பேதமை, அறிஞரைத் தழுவி நடத்தல், தீட்சை, கொல்லாமை, கள்ளுண்ணல் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் பிரசங்கங்கள் செய்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்கள்.

இப்பிரசங்கங்கள் கைமேற்பலனை ஏற்படுத்தின. மதுபானம் அருந்திய பலர் அப்பழக்கத்தைக் கைவிட்டார்கள். மாமிச போசனம் செய்தோர் செய்யாது விட்டார்கள். உருத்திராட்சம் தரியாது ஆலய தரிசனம் செய்தோர் உருத்திராட்சம் தரித்து செவ்வனே தரிசனம் செய்யத் தலைப்பட்டார்கள். பலர் விரதங்கள் அனுட்டிக்க ஆரம்பித்தார்கள். ஆலயப் பக்கமே தலை வைத்துப்படுக்காதவர்கள் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடி மனமுருகி ஆண்டவனை வேண்டினார்கள்.

இந்த வெற்றிகளால் களிப்புற்ற நாவலர், நல்ல சமய நூல்கள் குறைவாக இருப்பதையும் இருக்கின்ற நூல்களிலே எழுத்துப் பிழை, சொற்பிழை, கருத்துப்பிழை இருப்பதனையும் கண்ணுற்று அச்சியந்திர சாலை ஒன்றை நிறுவுதலும் சைவ நூல்கள் வெளியிடுதலும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்களை மீள்பதிவு செய்தலும் சைவமும் தமிழும் தழைத்தோங்க நல்ல வழி என உணர்ந்து செயற்படத் தொடங்கினார்.

அதன் முதற்படியாக தாம் ஸ்தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலையை தமது நம்பிக்கை மிக்க மாணாக்கர் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு தமது பால்ய கால நண்பரான சதாசிவப்பிள்ளையை அழைத்துக் கொண்டு அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கும் முகமாக 1849 ஆம் ஆண்டு சென்னை நகரம் நோக்கிப் புறப்பட்டார்.

சென்னையில் சிலகாலம் தங்கியிருந்த நாவலர் பெருமான் சூடாமணி நிகண்டு உரையையும், சௌந்தர்ய லகரியையும், அச்சில் பதிப்பித்தார். யாழ்.மீண்ட அன்னார் "வித்தியா நுபாலன யந்திரசாலை' என்ற அச்சகத்தை நிறுவி முதல் முயற்சியாக நீதி சாரங்களையும் சைவசமய சாரங்களையும் திரட்டி வசன ரூபங்களாக எழுதி முதற் பாலபாடத்தின் இறுதியிலே ஆத்திசூடி கொன்றைவேந்தன் என்ற நீதி நூல்களையும் இரண்டாம் பால பாடத்தில் அவைகளுக்கு உரையையும் எழுதிச் சேர்த்து அச்சிட்டு வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்கள் அவரால் வெளியிடப்பட்டன. அவற்றுள் "கொலைமறுத்தல்', "திருமுருகாற்றுப்படைஉரை' என்பன குறிப்பிடத்தக்கவை.

நாவன்மை மிக்க இவருக்கு அன்னாரது 27 ஆவது வயதில் 1849 இல் "நாவலர்' பட்டம் கிடைத்தது. நாவலர் பெற்ற பெறுபேறுகள் வெற்றிகள் கண்டு திருப்தியடையவுமில்லை. இறுமாப்போ, பெருமிதமோ கொள்ளவுமில்லை. மாறாக நல்ல ஆசிரியர்களையும் சைவப் பிரசாரகர்களையும் உருவாக்க ஐந்தாண்டுத் திட்டமொன்றை நிறுவினார் திட்டம் வருமாறு: வருடந்தோறும் இருபது மாணவர்களுக்கு ஒழுக்கமும், சைவ அறிவும் தமிழ்ப்புலமையும் போதிக்கப்படும். ஐந்தாம் வருடத்தில் ஐந்து வருடப்பயிற்சி பெற்ற இருபது இளைஞர்கள் இருப்பார்கள். அவர்கள் பயிற்சி முடிந்து வெளியேற அடுத்தவருடம் புதிதாக இருபது இளைஞர் பயிற்சியில் சேருவார்கள்.

பயிற்சி முடிந்த இருபது இளைஞர்களில் ஒரு பகுதியினர் கற்று வல்ல ஆசிரியர்களாக இருப்பார்கள். இன்னுமொரு பகுதியினர் சைவப் பிரசாரகராகவிருப்பர். மிகுதியினர் முக்கிய ஆலயங்கள் தோறும் நியமனம் பெற்று கோயில் பூசை முதலிய அன்றாட கருமங்களை சாத்திர முறைப்படி நடாத்த வழிகாட்டிகளாகவும் உசாத்துணைவர்களாகவும் இருப்பர். மேலும் பெற்றோருடன் அள வளாவி சமய தீட்சை பெற்று சமயாசாரம் உடையவர்களாகத் திகழ வழிவகுப்பர்.

ஆனால் என்னை துரதிர்ஷ்டம்! இத்திட்டம் நிறைவேற முன்னரே அதாவது 5.12.1879 அன்று தனது 57 ஆவது வயதில் பெருமானை எல்லாம்வல்ல இறைவன் தம்முடன் அழைத்துக் கொண்டான். வாழும் போதே அன்னாரை சைவப்பெருமக்கள்"ஐந்தாம் குரவர்' என மனதாரப் பாராட்டி பட்டம் வழங்க எத்தனித்தனர். நாவலர் பெருமான் அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் அந்த முயற்சிகளையும் வன்மையாகக் கண்டித்தார். பேச்சாற்றலுக்கு புகழ் பெற்றதால் "நாவலர்' என்றும் உரை நடையினைக் கையாண்ட திறமையினால் "வசன நடை கைவந்த வல்லாளர்' என்றும் போற்றிப்புகழப்பட்ட நாவலர் பெருமானுக்கு 1971 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது.

நன்றி: தினக்குரல், நவம்பர் 26, 2010

ஆறுமுக நாவலர் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்.

February 06, 2010

பல்பரிமாணச் சிந்தனையாளர் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா

பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்கள் உரும்பிராய் கிராமத்தில் சோமசுந்தரம், நல்லம்மா தம்பதியினருக்கு 02-02-1947 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 29-05-2009 ஆம் திகதியன்று தனது வாழ்க்கைப் பயணத்தை நிறுத்திக்கொண்டார்.


அழகான உருவம், தீட்சண்யமான பார்வை, பரந்த ஆழமான உள்நோக்கு இவற்றால் தோன்றும் கருத்துகளும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து வெளிப்படுத்தும் மொழியாற்றல், உண்மை பேசும் பண்பு, நடுநிலைநின்று பணியாற்றுதல், நிறுவன ஒழுங்குக்குக் கட்டுப்படுத்தல், எளிமை, அமைதி, பிரச்சினைகளைச் சரியாக இனங்கண்டு அவற்றைப் பல்வேறு கோணங்களிலும் உணர்ந்து பொருத்தமான முறைகளைப் பயன்படுத்தி விடுவிக்கும் ஆற்றல், காலம், இடம் அறிந்து கருத்தாடும் திறன், இடையறாத வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றின் உறைவிடம் பேராசிரியர் கிருஷ்ணராஜா.

கடந்த மூன்று தசாப்தங்களாக மெய்யியல் வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் வரிசையில் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவும் ஒருவர். இலங்கையர்களில் முதல் தரச் சிந்தனையாளர் ஆவார். இவருடைய கருத்துகளும் எழுத்துகளும் சொல்லாடல்களும் இக்காலப்பகுதியின் சிந்தனைப் போக்கையும் தரிசனங்களையும் மாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளன. இவரது வாழ்வியலும் சிந்தனைகளும் எம்முன் திறந்த புத்தகங்களாக உள்ளது.

அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.

1. அழகியல் (1996, மறுபதிப்பு 2008),
2. விமர்சன மெய்யியல், (1989)
3. விமர்சன முறையியல், (1992)
4. 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கொள்கை, (1994)
4. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல், (1995)
5. சைவசித்தாந்தம் மறுபார்வை, (1998)
6. பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம், (1999)
7. இந்துக் கலைக் கொள்கை ,(2004)
8. சங்ககாலச் சமூகமும் சமயமெய்யியல் சிந்தனைகளும் (2007)

என்னும் நூல்களை வெளியிட்டிருந்தார்.

அவர் ஒரு சிறந்த மெய்யியலாளனாக இருந்ததன் காரணமாகவே இவ்வாறு பல்வேறு துறைகளிலும் தடம்பதிக்கக்கூடிய ஆதரவைப் பெற்றிருந்தார் எனலாம். இவை ஒவ்வொன்றும் அவரின் சிந்தனைப் பாய்ச்சலின் பல்வேறு தளங்களையும் அடையாளப்படுத்தி நிற்பவை.

அவரால் எழுதப்பட்ட அவரின் காலத்தில் நூலுருப் பெறாத மூன்று நூல்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களால் நூலுருப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவை:

1. மெய்யியலாளன் நோக்கில் பண்பாடு

2. ஐரோப்பிய மெய்யியல் வரலாறு

3. மெய்யியல் பிரச்சினைகள் ஓர் அறிமுகம்

என்னும் மூன்று நூல்களுமாகும்.

இதைவிட தர்க்க பானஹ (1988), தர்க்க கௌமுதி (1990) இந்திய மெய்யியல் (கிரியண்ணாவினால் எழுதப்பெற்றது) சிவஞானபோத வசனாலங்காரதீபம் (2003) என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவற்றை விட ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துக் கலைக் களஞ்சியத்தின் உருவாக்கத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியவர்.

பேராசிரியர் எந்த ஒரு விடயத்தையும் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கிலும் இயங்கியல் நோக்கிலும் பார்க்கும் முறையியல் நியமத்தைப் பின்பற்றுபவர், எனவே அவருடைய மெய்யியல், சமூகவியல், பண்பாடு, கலை இலக்கியத் தேடல்கள் ஆழமானவை. மறுபுறத்தில் இவரின் புலமைப் பின்புலத்தின் சிறப்பு சமயம், ஒழுக்கம் சைவசித்தாந்தம் ஆகியவற்றில் அவர் காட்டிய ஈடுபாடாகும். சமயக் கிரியைகளையும் சடங்குகளையும் ஆழமாக நோக்கி அவை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கோலங்களையும் சமூகவியல் உண்மைகளையும் இயற்கை கடந்த உண்மைகளையும் அறிந்துகொண்டார். மெய்கண்டாரின் சிவஞான போதத்தை ஐயமறக்கற்றவர். இதனால் அவரால் சைவசித்தாந்த உண்மைகளைப் பல்வேறு கோணங்களிலும் கூர்மையாக நோக்க முடிந்தது.

கிருஷ்ணராஜாவைச் சந்திப்பதும் அவருடன் உரையாடுவதும் தனி அனுபவமாகும். அவர் ஒரு நடமாடும் நூல்நிலையமாக விளங்குவதால் பல அடிப்படைக் கோட்பாடுகளை அறிவதுடன் அவை தொடர்பான வினாக்களை எழுப்பி மேலும் அவை பற்றிய புதிய தேடல்களைச் செய்யவும் எமது சிந்தனையை விரிவுபடுத்தவும் அவ்வுரையாடல் உதவும்.

பேராசிரியரிடம் சோக்கிரட்டீசிடம் காணப்பட்ட உண்மையை நேசிக்கும் பண்பும் உரையாடல் முறையும் சோபிஸ்ட்டுகளிடம் காணப்பட்ட மனித மைய நோக்கும் அரிஸ்ரோட்டலிடம் காணப்பட்ட விஞ்ஞான அணுகுமுறையும் மத்திய கால ஐரோப்பிய மெய்யியலாளர்களிடம் காணப்பட்ட சமய பௌதீகவாதித பார்வைகளும் டேக்காட்டிலும் காணப்பட்ட அறிவை ஐயுற்று உண்மையைத் தேடும் உளப்பாங்கும் ஹெகலிடம் காணப்பட்ட இயங்கியல் அணுகுமுறையும் கால்மாக்ஸிடம் காணப்பட்ட பொருள் முதல் வாதம், இயங்கியல் பொருள் முதல் வாதம் ஆகியவற்றைப் பயன்படுத்திய மனிதவாதச் சிந்தனைகளும் பேர்ட்டன் ரசலின் தர்க்க அணுவாத நோக்கும் விக்கன்ஸ்ரையின், கில்பேர்ட்றைன் போன்றவர்களிடம் காணப்பட்ட மொழிப்பகுப்பாய்வு ஆற்றலும் கால்பொப்பர், சிக்மன்ட் புரொயிட் கான்யுங், லக்கான், தேமஸ்கூன், டெறிடா, பூக்கோளியோத்தர் போன்றோரிடம் காணப்பட்ட பழைய சிந்தனைகளைப் புதிய கோணங்களில் ஆய்வுக்குட்படுத்தும் நுட்பங்களும் இந்தியச் சிந்தனைச் சிற்பிகளிடம் காணப்பட்ட பன்முக இறையியல் நோக்குகளும் உட்பொதிந்து காணப்பட்டன. இவற்றைப் பேராசிரியரின் பேச்சுகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் கண்டு கொள்ளலாம்.

பேராசிரியர் கிருஷ்ணராஜா சுயநலத்திற்குத் தன்னை அடிமையாக்காது பொதுநலம், சமூகநலம் குறித்து தனது கொள்கைகளையும் சிந்தனைகளையும் விரிவடையச் செய்தமையினால் பதவி, பட்டம் என்ற வட்டத்துக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாது யாழ்.

சமூகமும் அதன் மெய்யியல் புலமும் அதன் விரிவாக்கமும் என்ற எண்ணத்துடன் தான் இறக்கும் வரை தொழிற்பட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் இருப்பிற்கும் அதன் விரிவாக்கத்திற்கும் பேராசிரியரின் பங்களிப்பு மகத்தானது. 02.02.2010 ஆகிய இன்றைய தினம் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜாவின் பிறந்த தினமாதலால் அவரின் நினைவுகளை மீட்கும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றது. பேராசிரியர் எழுத்துகளில் சிந்தனைகளின் முக்கியத்துவம் அவரின் நினைவுகளை அகலப்படுத்தும்.

நன்றி: தினக்குரல்

பி.கு: மறைந்த பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா அவர்கள் சோவியத் ஒன்றியத்தில், மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் (Moscow State University) தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

January 23, 2010

விண்கற்களின் நிறம் பூமியை அண்மிக்கும் போது மாறுவது ஏன்?

சிறுகோள்கள் பூமியை அண்மிக்கும் போது அல்லது அதனைத் தாண்டும் போது பூமி அதனை அதிரடையச் செய்வதால் அவற்றின் நிறமும் மாற்றம் அடைகின்றது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியில் விழும் விண்கற்களின் (''meteorites'') நிறம் விண்வெளியில் சிறுகோள்களின் (''asteroids'') நிறத்துடன் ஒத்துப்போகாதது இதுவரையில் அறிவியலாளர்களுக்கு பெரும் புதிராக இருந்து வந்தது.


951 காஸ்பிரா என்ற சிறுகோள்


விண்வெளியில் சூரியக் கதிர்வீச்சு சிறுகோள்களின் மேற்பரப்பைச் சிவப்பாக்குகின்றது என முன்னர் நடத்தாப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தன.
பூமியை அண்மிக்கும் போது அவை எப்படி தமது மேற்பரப்பை மாற்றியமைக்கின்றன என்பதை "நேச்சர்" (''Nature'') அறிவியல் இதழ் தற்போது வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் பேராசிரியர் ரிச்சார்ட் பின்செல் என்பவர் இவ்வாய்விற்குத் தலைமை தாங்கினார்.

தனது குழுவினர் விண்வெளியில் சிறுகோள்களின் நிறத்தையும், அச்சிறுகோள்களில் இருந்து பூமியில் விழும் விண்கற்களின் நிறங்களையும் ஒப்பிட்டு இவ்வாய்வை மேற்கொண்டிருந்தனர் என அவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


நியூயோர்க்கில் அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு விண்கல்


"அநேகமான சிறுகோள்கள் இளம் சிவப்பு நிறம் கொண்டவை," என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார். சூரியக் காற்று அவற்றின் தாதுக்களைச் சேதப்படுத்தி அவற்றைச் சிவப்பாக மாற்றுகின்றன.

ஆனால், சில சிறுகோள்கள் பூமிய நெருங்கும் போது அவற்றின் நிறம் இளம் சிவப்பாக இருப்பதில்லை. இவற்றின் நிறம் பூமியில் அறிவியலாளர்களால் சேர்க்கப்பட்ட விண்கற்களின் நிறங்களுடன் ஒத்துப் போகின்றன, என்கிறார் பேராசிரியர் பின்செல்.

"பூமியை அவை நெருங்கும் போது பூமி அவற்றிற்கு ஒரு "நிலநடுக்கத்தை" எற்படுத்துகின்றது. இந்த நிலநடுக்கம் அவற்றின் மேற்பரப்பை மாற்றியமைக்கின்றது".

இந்த நிற மாற்றங்களில் இருந்து, சிறுகோள் ஒன்று பூமியை அண்மித்ததா இல்லையா என்பதைக் கண்டு கொள்ளலாம் என பேராசிரியர் பின்செல் தெரிவித்தார்.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.

January 15, 2010

இரண்டாவது மிகச் சிறிய புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது

மது சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியை விட நான்கு மடங்கு திணிவுடைய புறக்கோள் (extrasolar planet) ஒன்றைக் கலிபோர்னியா தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தை (Caltech) சேர்ந்த வானியலாளர்கள் ஹவாயில் உள்ள மவுனா கியா என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் நீள "கெக் 1" என்ற அதிஉணர்வுத் நூண்காட்டி மூலம் கண்டுபிடித்துள்ளதாக் அறிவித்துள்ளனர்.



இக்கோள் HD 156668 என்ற தனது தாய்-விண்மீனை நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள 400 இற்கும் அதிகமான புறக்கோள்களில் இது இரண்டாவது மிகச் சிறியதாகும். இதற்கு முன்னர் பூமியை விட 1.94 மடங்கு கிளீசு 581 e என்ற புறக்கோள் 2009, ஏப்ரல் 21 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய புறக்கோள் பூமியில் இருந்து ஏறத்தாழ 80 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2010, ஜனவரி 7 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட இப்புறக்கோளுக்கு HD 156668b எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் இருந்து பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்திற்கு அண்ணளவாக இப்புறக்கோளும் அதன் சூரியனும் இருப்பதால் இதில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

"பூமியை ஒத்த கோளின் கண்டுபிடிப்பு காரணமாக இது குறித்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு இன்னும் நிறைய வேலை உண்டு", என கால்ட்டெக்கின் வானியலாளர் ஜோன் ஜோன்சன் தெரிவித்தார். இவர் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்ட்ரூ ஹவார்ட், ஜெஃப் மார்சி, பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேசன் ரைட், யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெப்ரா பிஷர் ஆகியோருடன் இணைந்து இப்புறக்கோளக் கண்டுபிடித்தார்.

"மிகத் திறமையான சுற்றுவட்ட-வேகக் கருவி ஒன்றை நாளையே உருவாக்கினால், இன்னும் மூன்றாண்டுகளில் இதற்கான விடை கிடைக்கும். இன்னும் பத்தாண்டுகளில் பூமியை ஒத்த கோள்களின் மொத்தத் தொகையையும் நாம் அறியக்கூடியதாக இருக்கும்."

கெக் I (Keck I) தொலைக்காட்டி கெக் அவதானநிலையத்தின் ஒரு பகுதியாகும். இது கால்டெக் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஓரு கூட்டு முயற்சியாகும்.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.