October 15, 2006

ஏ.ஜே. பற்றிய நினைவுப்பகிர்வு- கா. சிவத்தம்பி

ஈழத்து இலக்கிய செழுமைக்கு பணிபுரிந்த விமர்சக அறிஞன் ஒருவனின் மறைவு
-பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி-

சென்ற வாரம் ஏ.ஜே.கனகரத்னா கொழும்பில் தனது சகோதரர் இல்லத்தில் காலமானார். நீண்ட காலம் சுகவீனமாக இருந்த அவர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைக்காக வந்த பின்னர், தான் விரும்பியபடி யாழ்ப்பாணம் செல்ல முடியாது கொழும்பிலேயே காலமானார். அவரது வேண்டுகோளை நிறைவேற்ற விரும்பிய அவரது குடும்பத்தினர் மிகுந்த அமைதியான சூழலிலே இறுதிக் கடன்களை செய்ய விரும்பினர். உண்மையில் சில நண்பர்களின் வாய்மொழி மூலமாகவே தகவல் பரப்பப்பெற்றது. ஒருவர் மற்றவருக்கு கூறி பரவிய செய்தி தமிழ் வானொலிகளிலும் தமிழ் அச்சு ஊடகங்களிலும் ஆங்கில அச்சு ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியாக மாறிற்று. ஏ.ஜே.கனகரத்னாவின் பணிகள் வாழ்க்கை பற்றி ஒரு முக்கிய சமூக பிரக்ஞையே ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏ.ஜே. கனகரத்னாவுக்கு இலங்கையின் தமிழ் இலக்கிய வட்டாரங்களிலும் ஆங்கில இதழியல் வட்டாரங்களிலுமுள்ள தன் மதிப்பின் இயல்பான வெளிப்பாடாகும். ஏறத்தாழ கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துலகில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லையெனினும், அவர் பற்றிய சமூக மதிப்பீடு எத்துணை உண்மையானதாகவும் ஆழமானதாகவுமிருந்தது என்பதை இது காட்டுகின்றது.

தன் திறமைகளை தானே தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள முயன்ற ஒரு நுண்ணிய நெஞ்சினை மிகச் சரியான முறையில் தமிழ் இலக்கிய உலகு மதிப்பிட்டிருந்தது. இந்த சம்பவத்தினால் தெரிய வந்தது. இந்த மதிப்பின் தளமாக அமைந்த அவரது சாதனைகள் யாவை? அவைபற்றிய விபரிப்பில் இறங்குவதற்கு முன்னர் அவர் தொழிற்பட்ட காலம் அந்தப் பணிகளின் வீச்சு பற்றி ஓர் அறிமுக குறிப்பு அவசியமாகின்றது.

ஏறத்தாழ 1960களில் மலரத் தொடங்கிய ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பல்துறைப்பட்ட வளர்ச்சி வரலாற்றில் ஏ.ஜே. கனகரட்னா என்பது ஒரு முக்கியமான பெயராகும். அந்தக் காலத்து வரலாறு எழுதப்படும் பொழுது கரகரத்னாவின் பணிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் அந்த வரலாற்றையே நிறைவு செய்ய முடியாது. அந்த இலக்கிய வளர்ச்சிகளின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராக அவர் விளங்கினார்.

இன்று பின்நோக்கி பார்க்கும் பொழுது ஏ.ஜே.கனகரத்னாவின் மிகப் பெரிய பங்களிப்பு, அவர் வளரும் ஈழத் தமிழ் இலக்கியத்தின் செழுமையை ஆங்கிலம் மூலமாக உலகறியச் செய்தார். அதேவேளையில், தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கிய உலகின் வளர்ச்சிகளை தமது எழுத்துகளின் மூலமும் தமது கலந்துரையாடல்கள் மூலமும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்தப் பணியினை, குறிப்பாக இரண்டாவது பணியினை அவர் நடத்திய முறைமை அவரை அக்காலத்தில் நிலவிய இலக்கிய விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாலான ஒருவராக வைத்திருந்தது. உண்மையில் வேறுபடும் கருத்து நிலையினர் ஒவ்வொருவரும் அவரை தம்பக்கத்து ஆள் என்றே கூறிக் கொண்டனர். இதற்கு நல்ல உதாரணமாக அமைவது `மல்லிகை' வழியாக ஜீவாவுடனும் அவரது நண்பர்களுடனும் வைத்திருந்த தொடர்புகளும் எஸ்.பொ., இளம்பிறையுடனும் அவருக்கிருந்த தொடர்புமாகும்.

அவருடைய ஒரே ஒரு பிரசுரமாக இன்றுள்ள `மத்து' கட்டுரைத் தொகுதி எஸ்.பொ.வே முன்னின்று வெளியிட்டிருந்தார். ஆனால், ஏ.ஜே. யோ இந்த சர்ச்சைகளுக்கு அப்பாலானவராய், முகில்களுக்கு மேலேயுள்ள மலை விளக்குப்போல பிரகாசித்துக் கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பாக இப்பொழுது மேல் நாடுகளிலே உள்ள சில இலக்கிய ஆர்வலர்களும் புரவலர்களும் அவரை முற்போக்கு வாதத்தின் எதிர்நிலை விமர்சகராக காட்டுவதில் மிகுந்த சந்தோசப்பட்டனர்.

மேலே கூறியதைப் போல இந்த முகில்கள் அந்த சூரியனை பாதிக்கவில்லை.

பிற்காலத்தில் அவர், குறிப்பாக இளைப்பாறியதன் பின்னர் ஈழத்து இலக்கிய படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்துள்ளார். நண்பர் மு.பொ.வின் `பொறிக்குள் அகப்பட்ட தேசம்' என்ற நீண்ட அற்புதமான கவிதையை அவர் ஆங்கிலத்திலே மொழி பெயர்த்துள்ள முறைமை அந்த மொழியின் பண்பாட்டுக் கூடாக மு.பொ.வின் கருத்தை, கவித்துவத்தை வெளிக்கொணர்வதாகவுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இவருடைய எழுத்துக்கள் ஒன்று சேர்க்கப்படவில்லை. `மத்து' தொகுதியை கொண்டு வந்ததற்காக எஸ்.பொ. போற்றப்பட வேண்டும். அவருடைய தமிழ் எழுத்துகளை தொகுப்பது ஒரு புறமாக, மறுபுறத்தில் அவர் செய்த ஆங்கில மொழி பெயர்ப்புக்களை ஒரு தொகுதியாக்கி பிரசுரிக்க வேண்டுவது அவசியமாகும். கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இத்துறை ஆர்வலர்கள் ஈடுபட வேண்டுமென்பது எனது பெரு விருப்பமாகும்.

ஏ.ஜே.பற்றி வெளிவரவிருந்த மலர் ஒன்று இதுவரை எனது கைக்குக் கிட்டவில்லை. அதற்கு நான் எழுதிய கட்டுரை பற்றியும் பின் தகவல்கள் எதுவுமில்லை.

பரந்து நின்ற ஆலமரம் விழுந்ததன் பின்னர் அது நிறைந்திருந்த இடம் `வெளி'யாக தெரிவதுபோன்று ஏ.ஜே.யின் மறைவு அவருடைய முக்கியத்துவத்தை இப்பொழுது உணர்த்துகின்றது.

ஏ.ஜே.யின் இலக்கிய ஆளுமைக்குள் முக்கியத்துவம் அவரது ஆசிரிய பணிக்கும் உண்டு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு மேல் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்கும் ஆங்கில போதனாசிரியராக அவர் கடமையாற்றினார். அவரது வகுப்புகளை மாணவர்கள் பெரிதும் விரும்பினர். அவருடைய பிரிவுக்கு சாராதவர்கள் கூட அவரது வகுப்புக்கு செல்வதுண்டு. உண்மையில் அவரது ஆங்கில மாணவர்கள் பலருக்கு அவருடைய இலக்கிய ஆளுமை பற்றித் தெரியாது. அவரையொரு தலைசிறந்த ஆசிரியராக கருதினர். பெரு மதிப்பும் வைத்திருந்தனர். தொழில் நிலையில் அவர் ஆசிரியராகவும் இதழியலாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.

இவருடைய சிறப்புக்கான தளம் இவருக்கு இருந்த ஆழமான ஆங்கில அறிவும் தமிழ் இலக்கிய பரிட்சயமும் ஆகும். தன்னுடைய ஆங்கில அறிவை தமிழிலே தமிழ் நிலைப்பட எடுத்துக் கூறும் ஆற்றல் அவரிடத்து இருந்தது.

இதனால் அவர் வழியாக ஆங்கில இலக்கிய பரிச்சயம் தமிழ் மொழி வழிவந்த எழுத்தாளர்களுக்கு கிட்டிற்று. இந்த எடுத்துரைப்பும் தொடர்பாடலும் இத்துணை நேச நிலைப்பட்டதாகவும் நட்பிறுக்கம் கொண்டதாகவும் அமைந்தமைக்கு காரணம் அவரது ஆளுமையின் இயல்பே ஆகும்.

ஏ.ஜே.கனகரத்னா என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவரல்ல. தன் பாதையிலே போவார். ஆனால், அதற்காக எந்த விதமான புறவெளிப்பாடுகளையும் காட்டிக் கொள்ள மாட்டார்.

அவரிடத்து மிகுந்த அபிமானம் கொண்டவர்களே அவரது நண்பர்களாகினர். மிகச் சிறிய ஒரு தொகையினரே அவரது நண்பர்களாக விளங்கினர். அவருக்காக பல பணிகளைச் செய்தவர்கள், அவரை தமது பெற்றோரைப் போல பாதுகாத்து வந்த திரு.திருமதி கிருஷ்ணகுமார் அவர்கள், அந்த அளவில் ஏ.ஜே.புண்ணியம் செய்தவரும் கூட. தனி மரமாக நின்ற அவரை கிருஷ்ணகுமார் தம்பதியினர் நன்கு பராமரித்தனர். அவரது மிக நெருங்கிய இன்னொரு நண்பர் ஆங்கிலத் துறையில் கடமையாற்றும் சிவகுருநாதன் ஆவார். சிவகுருநாதன் இல்லாவிட்டால், ஏ.ஜே.எப்பொழுதோ பல்கலைக்கழக பணியைக் கூட விட்டெறிந்திருப்பார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அவரை ஆங்கில இலக்கிய துறைக்கான விரிவுரையாளராக நியமிக்க முடியாது போனமை உண்மையில் பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட ஒரு நஷ்டமாகும். நியமன விதிகள் தடை செய்தன. ஆனால், அங்கு ஆங்கில இலக்கியம் கற்பித்த செல்வா கனகநாயகம் முதல் சுரேஷ் கனகராஜா வரை பலர் அவரது ஆங்கில அறிவை மெச்சிப் போற்றியவர்களாவர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏ.ஜே.க்கு இருந்த இந்த இடம் பல அசௌகரியங்களை ஏற்படுத்திற்று. அவருடைய நண்பர்கள் பலர் பேராசிரியர்களாகவும் அவரது புலமையால் பயன் பெற்ற பலர் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்ற இவர் ஆங்கில போதனாசிரியர் என்ற நிலைக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு உலவி வந்தார். ஏ.ஜே.யிடமிருந்த மிகப் பெரிய பலவீனம் அவர் தன்னைத் தான் மறைத்துக் கொள்வத்றகுப் பயன்படுத்திய பழக்கம் ஆகும். ஏ.ஜே.யின் நீராகார பழக்கம் பிரசித்தமானது. அவர் தன்னை அதற்குள் மறைத்துக் கொண்டாரா அல்லது அது அவரை மறைத்துக் கொண்டதா என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. நான் அறிந்த வரையில் இரண்டுமே நடைபெற்றன. ஆனால், எக்காலத்திலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

`டெயிலி நியூஸ்'ஸில் உதவி ஆசிரியராக இருந்த பொழுது அவருக்கு ஒரு திடீர் பதவியேற்றம் வழங்கப் பெற்றது. அனுபவ பதவியேற்றம் வழங்கப்பெற்றது. அனுபவஸ்தர்களான பல பத்திரிகையாளர்களுக்கு மேலே அவர் நியமிக்கப் பெற்றார். ஏ.ஜே.தான் அந்தப் பதவியை வகிக்க முடியாதென்று கூறினார். இறுதியில் இருந்த பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு `லேக் கவுஸு'க்கு வெளியே வந்தார்.

ஏ.ஜே.யின் அறிவுப்புலமையில் நிலவிய தன்னடக்கம் மிகப் பெரியது. ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பிலே இத்தகைய ஒருவரைக் காண்பது அரிது.

ஏ.ஜே.க்கும் எனக்கும் மிகுந்த நட்புறவும் புலமை ஊட்டம் பற்றி குறிப்பிடுவது என் நிலையில் முக்கியமாகவே படுகின்றது.

எனக்கு ஏ.ஜே.யை. பேராதனைப் பல்கலைக்கழக காலத்திலிருந்தே (1953-56) தெரியும். அவர் எங்களுக்கு ஜூனியர். ஆங்கிலத்தை சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தார். அக்காலத்து ஆங்கில சிறப்பு மாணவர்கள் சிங்களம், தமிழிலே பேசவே மாட்டார்கள். ஆனால், ஏ.ஜே.முற்றுமுழுதான விதிவிலக்கு. மெய்யியல் சிறப்புத் துறை மாணவர் கனகரத்னத்துக்கும் இவருக்கும் தெரியாத கந்தானை குடிநீர் நிலையங்கள் இல்லையென்றே கூறலாம். அத்தனையும் சுதேசிய மாத்திரமல்ல உள்ளூர் கலப்புத் தயாரிப்புகள். கனகரத்னாவின் உறவுகள் தமிழினை நிராகரிப்பனவாக அமையவில்லை.

இவர் `டெயிலி நியூஸ்'ஸில் கடமையாற்றிய பொழுது ஈழத்து தமிழ் சிறுகதைகளை வழக்கத்திலே மொழி பெயர்க்குமாறு என்னை ஊக்குவித்துள்ளார். டானியலின் `தண்ணீர்'க் கதையை நான் மொழி பெயர்த்தது இப்பொழுதுபோல இருக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு நான் கடமையாற்ற சென்றதிலிருந்துதான் (1978) அவருடனான எனது உறவு இறுக்கமானது.

நான் ஆங்கிலத்தில் எழுதிய அத்தனை நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்து பார்ப்பதற்கும் மெய்ப்புப் பார்ப்பதற்கும் நான் அவருடைய உதவியையே நாடுவதுண்டு. இதனை நான் எனது நூல்களில் எடுத்துக் கூறியுள்ளேன். உண்மையில் எனது பண்டைய தமிழ் நாடகம் பற்றிய ஆங்கில ஆராய்ச்சி நூலிலே காணப்பெற்ற அச்சுப் பிழைகளை தொகுத்து திருத்தி தந்தவர் அவரே. அது மாத்திரமல்லாமல், ஆங்கில இலக்கியத்தின் அவ்வக்கால வளர்ச்சிகள் பற்றி அவருடன் கலந்துரையாடும் வழக்கத்தினை தவறாமல் மேற்கொண்டிருந்தேன். என்னுடன் அவர் தமது புலமைத்துறைகள் பற்றி மனம் திறந்து உரையாடியதுண்டு. தன்னுடைய விமர்சனங்களையும் வாழ்த்துகளையும் அவர் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் நான் ஏ.ஜே.யை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நமது காலத்தில் புலமைத் தூண்களில் ஒன்றாகவே மதித்து வந்துள்ளேன். போற்றிவந்துள்ளேன். அந்தளவில் நம்மிருவரிடையேயும் ஓர் ஆள்நிலை ஊட்டம் நிலவி வந்தது. நான் கொழும்புக்கு வந்த பின்னர் தடைப்பட்டுப் போயிருந்த அந்த உறவு மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. தொலைபேசியில் பேசிக் கொள்வேன். கடந்த ஒன்றரை மாதங்களாக பேசவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

ஏ.ஜே.யினுடைய அறிவுத் திறத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. அவர் ஐ.சி.ஈ.எஸ்.க்காக பதிப்பித்துள்ள றெஜி சிறிவர்தனாவின் எழுத்து திரட்டின் முதலாம் பாகமாகும். அந்நிறுவனத்தின் பொறுப்பாளரான திரு. தம்பிராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க ஏ.ஜே. அந்தப் பதிப்பு பணியை மேற்கொண்டார். அத்தொகுதிக்கு அவர் எழுதியுள்ள பதிப்பாசிரியர் உரை மிகச் சிறந்ததொன்றாகும். திரு.தம்பிராஜா அவர்களுக்கு ஆங்கில தமிழ் இலங்கை இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது.

அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா என்ற அவரது முழுப்பெயர் விபரம் பலருக்குத் தெரியாத ஒன்றாகும். ஆனால், ஏ.ஜே. என்ற முதலெழுத்துக் குறுக்கமோ எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. இது ஓரளவுக்கு அவரது ஆளுமையின் இயல்பினைக் காட்டுகின்றது. தன்னைப் பற்றி அதிகம் சொல்லாமல் அதேவேளையில் பிறருடைய சுக துக்கங்களில், நலன்களில் அவர் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தார்.

ஏ.ஜே.யை மறப்பது சுலபமே அல்ல. அவரோடு ஊடாடியவர்களுக்கு அது முடியாத காரியம். ஏனென்றால், தான் ஊடாடியவர்களின் ஆளுமைகளில் அவரின் செல்வாக்கு நிறைய உண்டு. தன்னைத்தான் மறைத்துக் கொள்ள விரும்பியவனை, இலக்கிய உலகம் மறக்கவில்லை. இனியும் மறக்காது.

இக்கட்டுரை இன்றைய தினக்குரலில் இருந்து பிரதியெடுக்கப்பட்டது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கானா பிரபாவுக்கு வழங்கிய நேர்காணலின் ஒலி வடிவம் இங்கே.

மேலும் தகவல்கள்: விக்கிபீடியாவில்

4 comments:

said...

பதிவுக்கு நன்றிகள் அண்ணா

said...

கானா பிரபா, வருகைக்கு நன்றி.

Anonymous said...

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி!
ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-

அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி....
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!

"எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்" பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்....

பேசும் வார்த்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.

"ஏ.ஜே" எனும்
மறையாத ஆளுமைமிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!
-மேமன்கவி-

!

said...

ஏ.ஜே. என்ற ஆளுமைமிக்க ஆகிருதி!
ஆளுமைமிக்க ஆகிருதி
ஒன்றின் மரணம் தரும்
மௌனம்-

அது அதன்
உடலின் நிரந்தர உறக்கம்
அதுவே விழிப்பாகி....
விரிந்த மேசையின் பரப்பில்
ஒடுங்கிய புத்தக அடுக்குகளில்
இணைய உலாவிகளின் முடக்கங்களில்
உரத்துப் பேசத் தொடங்கும் தருணமிது!

"எதற்குமே உரிமைக் கோராத
ஞானம்" பெற்ற
ஆகிருதியின் ஆக்கங்களுக்கே
அது சாத்தியம்.
அதன்-
திறன்களின் மீது
பாய்ச்சப்படும் வெளிச்சம் தரும்
புலர்வு
அருகே இருந்த மூளைகளில்....

பேசும் வார்த்த்தைகள் மௌனமாகிப் போக-
எழுதிய வார்த்தைகள் போல்
வாழ்ந்து போன வாழ்வு
அந்த புலரவின் பிரகாசத்தில்
உரத்து வாசிக்கப்படும்.

"ஏ.ஜே" எனும்
மறையாத ஆளுமைமிக்க
ஆகிருதியும்
அதுவான ஒன்றுதான்!