August 05, 2006

தெற்கிலங்கையின் சைவாலயங்கள்

ஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று விஷ்ணுகோயிலாக மாற்றப்பட்டு தென்னிலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயமாக விளங்குகின்றது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.



இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்த இந்த தொண்டேஸ்வரம் நம்மில் பலர் அறியாத ஒன்று. இவ்வாலயம் தற்போதய மாத்தறைப் பகுதியில் உள்ள தெவிநுவர என்ற இடத்தில் அமைந்திருந்தது. இது தேவந்துறை, தேவநகர, Dondra Head (தேவேந்திரமுனை) என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. தேவந்துறை என்பது இறைவன் இறங்கிய துறை எனப் பொருள்படும்.

திறந்தவெளிக் கோயிலாக அமைந்திருந்த இக்கோயில் பின்னர் சந்திரசேகரர் கோயிலாக உருமாறியது. மாத்தறைப் பகுதியில் விஜயன் சந்திரசேகரர் ஆலயத்தை அமைத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

கி.பி. 150 ஆண்டுகளில் வாழ்ந்த தொலமி தனது குறிப்புகளில் இக்கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 14ம் நூற்றாண்டில் இலங்கையில் பயணம் மேற்கொண்ட இபின் பட்டுட்ட என்ற அரேபியர் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் அங்கு நடைபெற்ற வருடாந்த விழா பற்றியும் விபரித்துக் கூறுகின்றார். இவரது குறிப்புகளின்படி அப்பகுதியில் பெருமளவில் இந்துக்கள வாழ்ந்தார்கள் எனவும், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வழிபாடு நடத்தியதாகவும், பொற்கொல்லர்கள், நடனமாதுக்கள் இருந்ததாகவும் அறியக் கூடியதாகவுள்ளது.

தெவிநுவரவில் 1998 நவம்பரில் தொண்டேஸ்வரம் நந்தி ஆகழ்ந்தெடுக்கப்பட்டதாக News Lanka என்ற லண்டன் வார இதழ் ஒன்று 5 நவம்பர் 1998 ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாத்தறைப் பகுதி மட்டுமன்றி காலி நகரில் இருந்து கதிர்காமம் வரை உள்ள பிரதேசம் சைவர்களின் ஒரு புண்ணிய பூமியாக விளங்கியது எனலாம். தமிழ்க்கடவுளான முருகனை அடைவதற்கென வள்ளி அவதாரம் செய்த வள்ளிமலை, முருகன் வேடனாக, வேங்கையாய் நாடகமாடிய கதிர்காமம், முருகனுடன் வள்ளியை விநாயகர் சேர்த்து வைத்த செல்லக்கதிர்காமம் ஆகியன இப்புண்ணியபூமியில் அடங்குவன.

புத்தசமயம் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பே கதிர்காமம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கியது. புத்தர் இலங்கையில் விஜயம் செய்த 16 இடங்களில் கதிர்காமமும் ஒன்று என்று பேராசிரியர் பரணவிதாரண குறிப்பிடுகின்றார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலம் தனது நூலில் இலங்கையில் முருக வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இருந்தது எனவும், எல்லாப் புத்தவழிபாட்டுத் தலங்களிலும் கொண்டாட்டங்களிலும் இது முக்கிய இடம் பெற்றது என்றும் 18ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கனால் புத்தரது தந்தம் கண்டிப் பெரஹரவில் அறிமுகப்படுத்தும் வரை கண்டிப் பெரகரவில் கூட முருகன் முக்கிய இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்த மீனாட்சிசுந்தரரை வணங்கினான் என்பது ஐதீகம். வேறு மலையொன்றும் அற்ற காலி நகரில் கடற்கரையில் கம்பீரமாக ஒரு மலை காணப்படுவதும் அம்மலை சிங்களத்தில் "உண வற்றுணா" (நோய் அகன்றது) என அழைக்கப்படுவதும் இதை உறுதி செய்கின்றன.

இன்று கதிர்காமம், தொண்டேஸ்வரம் இந்துக் கோயில்களாக இருந்தது என்பது பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மாறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

தொண்டேஸ்வரம் பற்றிய மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.

9 comments:

Anonymous said...

தேவேந்திர முனையிலே திருமாலுக்கு திருவிழா கட்டுரையைப் பார்க்க.

said...

தொண்டேஸ்வரம் அறியாத செய்திகள்!சரித்திரம் வெகுவாக மறைக்கப் பட்டுள்ளது. புத்தர் ஓர் இந்து என்பதே சிங்களப் பௌத்த பிள்ளைகளுக்கு மறைக்கப்படுகிறது. திட்டமிட்ட மாற்றம் ;இன அழிப்பின் ஒரு அங்கமாக சிங்கள அரசுயாவும்;இலங்கையில் நடைமுறைப் படுத்துகிண்றன.
யோகன் பாரிஸ்

said...

தங்கள் கட்டுரைக்கு நன்றி அண்ணா
பொலனறுவையிலும் சோழ மன்னர்களால் அமைத்த சிவாலயங்கள் சுவடில்லாமல் போனவைதானே? பழைய வரலாற்றுப் புத்தகங்களில் இவற்றின் கீற்று ஓவியங்களைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றது.

நீங்கள் தந்த தினக்குரல் கட்டுரை இணைப்பை உங்கள் பதிவிலும் சேர்த்தால் நல்லது. ஏனென்றால் இத் தமிழ்ப்பத்திரிகைகளின் இணைப்புக்கள் நாளடைவில் எடுக்கப்பட்டுவிடும் அபாயமும் உண்டு.

said...

யோகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அண்மையில் வெற்றி, மலைநாடான் ஆகியோர் திருத்தம்பலேஸ்வரம் பற்றிய பதிவுகளைப் பதிந்திருந்தனர். அவற்றின் தொடர்ச்சியாகவே தென்னிலங்கை கோயில்கள் பற்றி மேலதிக தகவல்களை சேகரித்து இங்கு தந்துள்ளேன்.

said...

பிரபா, பொலன்னறுவையில் அழிந்துபோன ஆலயங்களைப் பற்றிய விபரங்களைத் திரட்டித் தருகிறேன்.
//தமிழ்ப்பத்திரிகைகளின் இணைப்புக்கள் நாளடைவில் எடுக்கப்பட்டுவிடும் அபாயமும் உண்டு//
ஆமாம், சில நல்ல கட்டுரைகள் தேடுபொறியில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றின் இணைப்புகள் முறிந்துபோயுள்ளன. குறிப்பாக தினக்குரல், வீரகேசரி கட்டுரைகள் சில மாதங்களில் காணாமல் போய்விடுகின்றன. அந்தக் கட்டுரையை பின்னூட்டமாகத் தருகிறேன்.

said...

நேற்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை:

தேவேந்திர முனையிலே திருமாலுக்கு திருவிழா
11 - August - 2006 த.மனோகரன்

தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திர முனையிலே அமைந்திருக்கும் திருமால் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 16 ஆம் திகதி மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறவுள்ளது.

இன்று தெவிநுவர விஷ்ணுதேவாலயம் என்று தென்னிலங்கையில் சிறப்புடனும், பக்தியுடனும் போற்றப்படும் இவ்வாலயம் விஜயன் இலங்கையில் கரையொதுங்கிய அதாவது கி.மு.ஆறாம் நூறாறாண்டில் சிறப்புடன் விளங்கிய சிவாலயமாகும்.

புத்த பெருமான் அவதரித்த காலத்திலேயே விஜயன் இலங்கையில் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது. விஜயனுடன் இலங்கைக்கு வந்த உபதிஸ்ஸன் என்ற பிராமணன் இலங்கையின் நாலாதிசைகளிலுமிருந்த ஐந்து சிவாலயங்களைச் சென்று வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. வடக்கே நகுலேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம், மேற்கே திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் தெற்கே தொண்டீஸ்வரம் என்பவையே பஞ்சேஸ்வரங்கள் என்று இன்று குறிப்பிடப்படும் உபதிஸ்ஸன் சென்று வழிபட்ட சிவாலயங்களாகும்.

பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாகிய இலங்கையின் தென்முனையிலிருந்த தொண்டீஸ்வரமே இன்று திருமால் திருத்தலமாக தெவிநுவர விஷ்ணு கோயிலாக மாற்றமடைந்துள்ளது. கிரேக்க இனத்தவரும், உலகப்படத்தை முதன் முதல் வரைந்தவருமான டொலமி தனது படத்தில் இக் கோயிலையும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று சீன இனத்தவரான இபன் பதூதா என்பவர் தனது பயணக்குறிப்பில் இவ்வாலயம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

போர்த்துக்கேசரால் சிதைக்கப்பட்ட இச்சிவாலயம் ஒல்லாந்தர் காலத்தில் மீளமைக்கப்பட்டு விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டு இன்று சிறப்புடன் விளங்குகின்றது.

இவ்வாலய வளவிலே இன்று விஷ்ணு மூலவராக வீற்றிருக்க பிள்ளையார், முருகன், அம்மன், சிவன், சூரியன் ஆகிய இந்து மத தெய்வங்களும் கோயில் கொண்டுள்ளதுடன் இந்து ஞானியாகிய கௌதம புத்தருக்கும் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்ச ஈஸ்வரங்களென்று பெருமை பெற்ற ஐந்து பழம் பெரும் சிவாலயங்களும் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டன. அவற்றில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலுள்ள நான்கு சிவாலயங்களும் மீளவும் சிவாலயங்களாக எழுச்சி பெற சிங்கள, பௌத்த மக்கள் தொண்டீஸ்வரத்தை விஷ்ணு ஆலயமாகப் புனர்நிர்மாணம் செய்துள்ளனர்.

ஆதியிலே தேவேந்திரமுனை, தேவநகர், தொண்டீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டு வந்த இவ் விடத்தில் எழுந்தருளியிருந்த இறைவனை சந்திர மௌலீஸ்வரர் சந்திரேஸ்வரர், தொண்டீஸ்வரர் என்றும் திருப்பெயர்களால் குறிப்பிட்டுள்ளனர்.

கால மாற்றத்தால் சிவாலயம், விஷ்ணு ஆலயமாக மாற்றமடைந்தாலும் இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைஷ்ணவம் தென்னிலங்கைக் கரையிலே சீர்பெற, சிறப்புடன் போற்றப்படுவது இந்துக்களின் பழைமைக்கும் பெருமைக்கும் கட்டியம் கூறிநிற்கின்றது. இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற திருமால் திருத்தலங்களான பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில், துன்னாலை வல்லிபுரக்கோயில், வட்டக்கச்சி ஷ்ரீ ரங்கநாதன் பெருமாள் கோயில், தெகிவளை வெங்கடேஷ்வரபெருமாள் கோயில் போன்று தெவிநுவர விஷ்ணு கோயிலும் சிறப்பு வாய்ந்த இந்துத் திருத்தலமாகும்.

தென்திசையில் வீற்றிருக்கும் திருமால் இந்நாட்டில் அமைதி நிலவ, ஆணவம் அடங்கி நிம்மதி நிலவ அருள வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
நன்றி: தினக்குரல்

said...

கனக்ஸ்,
நல்ல கட்டுரை.

//புத்தசமயம் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பே கதிர்காமம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கியது. புத்தர் இலங்கையில் விஜயம் செய்த 16 இடங்களில் கதிர்காமமும் ஒன்று என்று பேராசிரியர் பரணவிதாரண குறிப்பிடுகின்றார்.//

பேராசிரியர் பரணவிதாரண எழுதிய நூலின் பெயரைத் தந்துதவ முடியுமா?

said...

/சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்த மீனாட்சிசுந்தரரை வணங்கினான் என்பது ஐதீகம். வேறு மலையொன்றும் அற்ற காலி நகரில் கடற்கரையில் கம்பீரமாக ஒரு மலை காணப்படுவதும் அம்மலை சிங்களத்தில் "உண வற்றுணா" (நோய் அகன்றது) என அழைக்கப்படுவதும் இதை உறுதி செய்கின்றன.
/
கனக்ஸ்!

சின்ன வயதிலிருந்தே எனக்குள் இந்த வினா இருந்தது. இராமயணம் உண்மையெனில் அனுமான் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் பகுதி இன்னமும் இலங்கைத்தீவிலேதான் இருக்க வேண்டும் என்பது என் வலுவான வாதம். இதுவரையில்நான் எண்ணியிருந்தது, ஹபரணைக்குப் பக்கத்தில் 'ஒறுவில' எனும் சிங்களக்கிராமம். அக்கிராமத்தில் முறிவு நெரிவுக்கான கைவைத்தியம் குடும்ப வைத்தியமாக பரம்பரை பரம்பரையாகச் செய்யப்படும். இவ்வைத்தியத்திற்கான மூலிகைகள் அருகிலிருக்கும் ஒரு மலைக்குன்றிலிருந்து பெறப்படும். அக்குன்றினையே சஞ்சீவி மலையின் பகுதியென எண்ணயிருந்தேன்.
ஆய்வுரீதியான , ஆதாரபூர்மான , தங்கள் பதிவுக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும்.

Anonymous said...

//பேராசிரியர் பரணவிதாரண எழுதிய நூலின் பெயரைத் தந்துதவ முடியுமா?//
வெற்றி, இப்போது விபரங்கள் இல்லை. முடிந்தால் தேடித் தருகிறேன். வருகைக்கு நன்றி.

மலைநாடான்,
//ஹபரணைக்குப் பக்கத்தில் 'ஒறுவில' எனும் சிங்களக்கிராமம். அக்கிராமத்தில் முறிவு நெரிவுக்கான கைவைத்தியம் குடும்ப வைத்தியமாக பரம்பரை பரம்பரையாகச் செய்யப்படும். இவ்வைத்தியத்திற்கான மூலிகைகள் அருகிலிருக்கும் ஒரு மலைக்குன்றிலிருந்து பெறப்படும். அக்குன்றினையே சஞ்சீவி மலையின் பகுதியென எண்ணயிருந்தேன்.//
நீங்கள் சொல்வதும் சரியாயிருக்கலாம். இதுபற்றி ஆழமாக ஆய்வு செய்யப்படவேண்டும்.