September 09, 2006

கலாயோகியின் நினைவுகள்

கீழைத்தேயக் கலைகளுக்கும் அவற்றின் ஊடுபொருளாக அமைந்த இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி அவர்கள். இறைவனின் பஞ்சகிருத்தியத்தைப் பிரதிபலிக்கும் சிவநடனத்தை எழுதியவர். அவருடைய நினைவு நாள் இன்றாகும் (செப்டம்பர் 9).


சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஏக புத்திரன் ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி. கொழும்பிலே பிறந்து, தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றவர். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பிற் சித்தியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற எதெல் மேரி (Ethel Mary) என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார்.

எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையிற் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் நாடு திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணைத் மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.

அந்தக் காலத்தில் சுதேசிய உணர்வால் உந்தப்பெற்று சமூக சீர்திருத்த சங்கத்தை (1905) தாபித்து, அதன் சார்பில் Ceylon National Review என்னும் சஞ்சிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகச் சேவையாற்றினார். 1907 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்திலும் இந்தியாவிலும் கலா முயற்சிகளில் ஈடுபட்டார். 1911 ஆம் ஆண்டில் அலகபாத்தில் நடைபெற்ற பொருட்காட்சியின் கலைப்பகுதிக்குப் பொறுப்பு வகித்தார்.

இந்திய விடுதலை இயக்க ஆதரவாளராக, அதன் தலைவர்களோடு தொடர்பு கொண்டிருந்தார். ரவீந்திரநாத் தாகூர், சகோதரி நிவேதிதை முதலியோரின் நண்பராக வாழ்ந்தார்.

இறைவனின் பஞ்சகிருத்தியத்தைப் பிரதிபலிக்கும் சிவநடனத்தை விளக்கி 1912 இலே 'சித்தாந்த தீபிகை'யில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை மூலம் இந்தியக் கலைகளின் சிறப்பினை உலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாகக் கொள்ளப்படுகிறார். ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

சகோதரி நிவேதிதையுடன் இணைந்து பௌத்த புராணக்கதைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். 'பிரபுத்த பாரதா' என்ற சஞ்சிகையில் 1913, 1914, 1915 ஆம் ஆண்டுகளில் தாயுமானவர் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை வழங்கினார்.

1917 முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டிற் பொஸ்ரன் நகரில் அமைந்திருந்த நுண்கலை நூதனசாலையிற் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், பின்பு ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார். இங்கு அவர் Dona Lusa என்னும் ஆர்ஜண்டீனா பெண்மணியைச் சந்தித்து அவரைத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ராமா என்னும் பெயர் கொண்ட ஆண்குழந்தை பிறந்தது. ராமா பின்னர் இந்தியாவின் ஹரித்வாரில் உள்ள Gurukul பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று அமெரிக்காவின் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் வைத்தியசாலையில் வைத்தியராக பயிற்சி பெற்று அமெரிக்காவில் வைத்தியராகத் தொழிலாற்றுகிறார். (Dr/Fr Rama Ponnampalam Coomaraswamy அண்மையில் ஜூலை 19, 2006 அன்று அமெரிக்காவில் காலமானார். இவரைப்பற்றிய தகவலை அவரது வலைத்தளத்தில் காணலாம்).

1877 ஓகஸ்ட் 22 இல் பிறந்த ஆனந்த குமாரசுவாமி அவர்கள் தமது எழுபதாவது வயதில் 1947 செப்டம்பர் 9 இல் அமெரிக்காவில் பொஸ்ரன் நகரில் காலமானார்.

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரையை பார்க்க.

2 comments:

said...

பதிவிற்கு நன்றிகள் அண்ணா

said...

வருகைக்கு நன்றி பிரபா.