October 09, 2011

ஆறுமுக நாவலரின் திணற அடித்த தமிழ்!

றுமுக நாவலர் ஒருநாள் காலை ஏழரை மணி அளவில் சென்னைக் கடற்கரையில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றிக் கொண்டது. அச்சம்பவம் காரணமாகப் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்தது. நாவலர் சாட்சியாக நீதி மன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


நீதிபதி, ஆறுமுக நாவலரைப் பார்த்து, "தீ விபத்து நடந்தபோது எத்தனை மணி இருக்கும்? நீங்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்டார்.

அதற்கு ஆறுமுக நாவலர், மறுமொழியாக, தூய்மையான உயர்ந்த ஆங்கிலத்தில் விடை கூறினார். அவர் ஆங்கிலத்தில் விடை கூறியதை நீதிபதி வரவேற்கவில்லை. நாவலரைத் தமிழிலேயே விடை கூறுமாறு பணித்தார்.

உடனே நாவலருக்குச் சினம் வந்துவிட்டது.

"தமிழில் பேசி எல்லோரையும் திணற அடிக்கிறேன் பார்" என்று எண்ணியவராய்,

"அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே
காலேற்றுக் காலோட்டப் புக்குழி''.

என்று விடை சொன்னார்.

ஆறுமுக நாவலர் இவ்வாறு சொன்னதும், நீதிமன்றத்தில் எல்லோரும் திகைத்து விட்டனர். ஏனெனில், யாருக்கும் அவர் பேசிய தமிழ் புரியவில்லை. இந்நிலையில், மொழிபெயர்ப்பாளர் நிலைமை மிகவும் பரிதாபகரமாகப் போய்விட்டது. ஏனெனில், அவர்தான் ஆறுமுக நாவலர் பேசியதை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதிக்குச் சொல்ல வேண்டும்!

ஆறுமுக நாவலர் கூறிய விடை இதுதான்:-

"அன்று சூரியன் வானத்தில் எழுந்து நான்கு நாழிகை இருக்கும்; நான் கடல் ஓரத்தின் அருகே காற்று வாங்கியவாறு உலாவச் சென்றபோது''!

நீதிபதியின் முகத்தில் ஈயாடவில்லை!

நன்றி:- தினமணி

0 comments: