May 13, 2006

தாய் செய்த நன்றி

தாய் செய்த நன்றி

ன் மிருதுவாகிய முலையினால் உனக்குப் பால் ஊட்டி, தன் கைகளிலே நீ நித்திரை செய்யும்படி உன் கன்னத்தில் இனிமையாகிய முத்தம் கொடுத்தவள் எவள்? -என் தாய். நித்திரை உன் கண்ணை விட்டு நீங்கின பொழுது, நீ உறக்கம் கொள்ளும்படி இனிமையான கீதங்களைப் பாடி நீ அழாதபடிக்குத் தாலாட்டினவள் எவள்? -என் நற்றாய். நீ தொட்டிலில் நித்திரை செய்யும்பொழுது தொட்டிலை ஆட்டிக்கொண்டு, உன்னுடன் கூட இருந்து, உன்னைச் சாவதானமாகக் காப்பாற்றி, உனக்காக அன்பின் கண்ணீர் விட்டவள் எவள்? -என் அன்னை. நீ வியாதியினாலும் துன்பத்தினாலும் அழுதபொழுது, துக்கக் குறியையுடைய உன் கண்ணைப் பார்த்து, நீ இறந்து போவாயோ என்று பயந்து அழுதவள் எவள்? -என் மாதா. நீ விழுந்த பொழுது, உனக்கு உதவி செய்யும்படி ஓடிவந்து, இனிமையான கதைகளைச் சொல்லி, உன் காயத்தைச் சவுக்கியப் படுத்த உனக்கு முத்தம் கொடுத்தவள் எவள்? -என் அருமைத்தாய். நீ பாவஞ் செய்யாமல் விலகும் பொருட்டும், புண்ணியத்தைச் செய்யும் பொருட்டும், கடவுளிடத்தே அன்பு வைத்து அவரை எந்நாளும் வழிபடும் பொருட்டும், உனக்குப் போதித்தவள் எவள்? -என்னைப் பெற்ற தாய். இப்படியே உன்னிடத்தில் இவ்வளவு அதிக அன்புள்ளவளாய் இருக்கின்ற உன் மாதாவிடத்தினிலே நீ எப்பொழுதாவது அன்பில்லாதவனாய் நடக்கலாமா? -நடக்கலாகாது. பிள்ளையே, நீ கடவுளுடைய திருவருளினாலே சீவனோடிருக்கும் வரையும், உன் அன்புள்ள மாதா உனக்காகப்பட்ட பிரயாசத்துக்கு நீ பிரதிபலன் அளிக்கும்படி விரும்பிக் காத்திருக்க வேண்டும். அருளியவர்: ஆறுமுக நாவலர் நாளை அன்னையர் தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்தக் கட்டுரை பதியப்படுகிறது.

3 comments:

said...

சும்மாவா சொன்னார்கள் " பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானிலும் நனிசிறந்தனவே" என்று.
தாய்பாசத்திற்கு நிகர் இத்தரணியிலும் இல்லை.

said...

கானா பிரபா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Anonymous said...

நாவலர் தனக்குரிய பாணியில சொல்லியிருக்கிறார். நல்ல பதிவு.