November 07, 2005

கந்தபுராணக் கலாச்சாரம்

அந்தக்காலத்து யாழ்ப்பாண கலாச்சாரம் குறித்து நியூசீலாந்து சி. குமாரபாரதி அவர்கள் முன்னை நாள் தமிழ்.நெட் மடலாடும் குழுமத்திற்கு அனுப்பிய கட்டுரையின் ஒரு பகுதி இது. குறிப்பாக யாழ்ப்பாணத்துக் கந்தபுராணக் கலாச்சாரம் குறித்து இலேசான நகைச்சுவையுடன் குமாரபாரதி அவர்கள் கூறியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

-----Original Message-----
From: C.Kumarabharathy
Date: Wednesday, 26 January 2000 15:33
Subject: [tamil] Sources of culture

ஈழத்து வாழ்க்கை முறைகள் எனக்கு ஏன் தெரிய வேண்டும் என்ற ஒருவர் கேள்விக்கு நேர்மையாக பதிலளிக்க என்னால் முடியாது. எனது சில நிலைப் பாடுகளை("பெரிய நிலைப்பாடு") சொல்வதற்கு தேவையானதை கையாளுவதுதான் என் இயல்பு. எனது மடல்கள் 21ம் நூற்றாண்டில் வசிக்கும் சாதாரண தமிழன் முகம் கொடுக்கும் அறைகூவல்களை எடுத்தியம்பும் முயற்சி எனபதாக ஒரு நினைப்பு. பல முறை இந்த இலக்குத் தவறியிருக்கிறது. எனது அவதானிப்புகளின் எல்லையுடன் கட்டுரை நிற்க வேண்டும் என்று வரையறுக்கிறேன். ஆனால் வரையறையையும் மீறி எளிமைவாதமாக (oversimplification) சில சமயம் பொதுமைப் படுத்துகிறேன் (generalisation) என்பதும் தெரிகிறது.சமூகவியல் வரலாறு பொருளாதாரம் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பல துறைகளும் சேர்ந்துதான் இவ்வாறு சில பொது முடிவுகளைப் பெற முடியும். பார்த்தீர்களா?

மறைந்த நாவலர் போன்று கையையுயர்த்தி கங்கை கடாரம் கலிங்கம் ஈழம் என்று விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணும் தோரணை வந்துவிட்டது.சில வேளைகளில் டி வியில் emotional pscychological and spiritual suffering எனச் சுலபமாகக் கூறிவிடுகிறார்கள். இதெல்லாம் இப்படி அளந்து பாகுபடுத்தி உணர முடிவதை பற்றி ஆச்சரியம்.

சென்ற நூற்றாண்டை இருகூறாக்கி முந்தைய பகுதியை கந்தபுராணக் கலாச்சாரம் என்றும் பிந்தைய பகுதியைக் கிளறிக்கல் கலாச்சாரம் என்றும் வசதிக்காக கூறலாம்.

எந்தவொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பான மனப்போக்குகள, எதிர்பார்ப்புக்கள், மதிப்பீடுகள் இருக்கும். இதைப் பொதுப்படையாக சமுதாய நீரோட்டம் என்று இக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன். இப்படியான பொதுவான மனப்பண்புகள் அக்கலாச்சாரத்தை எப்படியோ வேறுபடுத்தி அதை அடையாளம் காட்டிவிடுகின்றன. இந்தப் பண்புகளைப் பிரதிபலித்து, அவற்றிற்கு வெளி உருவம் கொடுத்துத்தான் கலை, பண்பாடுகள, ஆன்மீகம், அரசியல் என்று ஏற்பட்டுவிடுகின்றன.

பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை பல வகையில் பிரதிநிதிப்படுத்தியவர். யாழ்ப்பாணக் கல்விமுறை வாழ்க்கை முறைகளைப் பிரதிபலித்த ஒரு கடைசித் தனிமரம். சைவம், தமிழ் ஆகிய துறைகளில் பெரும் புலமையெய்தி திண்ணைப் பாடசாலை முறை முலமாக கைமாறு கருதாமல் தனது அறிவாற்றலைப் பலருக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் போன்று வேறு பலரும் வாழ்ந்திருக்கிர்கள்.
நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர், மட்டுவில் மகாலிங்கசிவம், மாவை நவநீதகிருஷணபாரதியார் (no relation of mine) ஆகியோர் சிலரின் பெயர்கள் இதை எழுதும் பொழுது ஞாபகம் வருகிறது. ஒரு கட்டுக்கோப்பான கல்வி முறைக்கு வித்திட்டவை இந்தத் திண்ணைப் பாடசாலைக் கல்விமுறைதான். இப்படியான ஒரு அடி அத்திவாரம் இன்றேல் விரைவாக ஆங்கிலக் கல்வி விரிவடைந்திருக்க முடியாது.

இந்தப் பாரம்பரியக் கல்வி முறைதான் அந்நியர் ஆட்சிக் காலங்களிலும் தமிழ் ஒழுக்கம் ஆகியவற்றை ஓரளவுக்கேனும் கட்டிக் காத்தது எனலாம். 300 வருடங்களாக முடிவில்லாது நீண்டு விரிந்து கொண்டு எறித்த கலாச்சாரக் கோடையிலும் யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாகாமல் காப்பாற்றியது இக் கல்வி முறைதான்.

இந்திய மரபில் நாங்கள் கேள்விப் படுவது போன்ற குருபக்தி என்ற அளவுக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. யதாரத்தமாகவே மாணவர்கள் ஆசிரியர்கள் மேல் மரியாதை வைத்திருந்தார்கள். ஆசிரியர்களும் குருதட்சணையாகக் மாணவர்களிடம் கட்டைவிரலைக் கேட்கும் அதீத வழக்கமும் இருக்கவில்லை. மாணவர்களைக் கட்டிமேய்த்து சோறு போடும் நிலையில் நமது புலவர்கள் இருந்ததில்லை. மாணாக்கர்களும் முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்தும் அளவு வசதி பெற்றிருக்க வில்லை. நடுகை, கதிரடிப்பு, உழவு என்று பல மாதங்களாக தலை மறைவாவதும், பாலபண்டித பரீட்சைச் சமயம் அறிஞர்கள் வீட்டில் முகாமடித்து படிப்பதும் உண்டு.

கல்விக்கு பணப் பரிமாற்றம் கிடையாது. அவரவர்கள் ஊரிலுள்ள பிரசித்தமான பொருட்களை கையுறையாக வழங்குவார்கள்.
ஆறுமுகநாவலர் திணணைப் பாடசாலையாக நல்லூரில் ஆரம்பித்த பொழுது மாணவரும் நாவலரும் வீடுவீடாகச் சென்று அரிசி தண்டிக் கொண்டு வந்து பாடசாலை நடாத்தினார்கள். பிற்பாடு இந்த இயக்கம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியாகவும் வேறுபல இந்துக் கல்லூரிகளாகவும் பரிணமித்தது. நாவலர் என்று சொல்லும் பொழுது ஒழுக்கம், கண்டிப்பு, விபூதிப்பட்டை என்பன ஞாபகத்திற்கு வரும். இவரது சைவவினாவிடையில் என்ன என்ன சொல்லிக் கொண்டு எந்தப்பக்கம் பார்த்துக்கொண்டு வளவுக்கிருக்க வேண்டும் என்ற சுகாதார நடவடிக்கைகளுக்குக்கூட விதி செய்திருந்தார் என்றால் எதையும் உறுதியாகச் சொல்லக் கூடியவர் செய்யக்கூடியவர் என்று தெரிகிறதல்லவா?

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலக் கல்வி பரவலாக்கப் படும் சமயம் யாழ்ப்பாணக் கல்வி வளர்ச்சியில் ஒரு திடீர்ப்பாய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு தாவுபலகையாக அமைந்தது திண்ணைப் பாடசாலை என்ற கல்வி முறை.

பண்டிதமணி அக் கால யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை கந்தபுராணக் கலாச்சாரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு மாதம் காப்புக் கட்டி விரதமிருந்து ஏதாவது கோவிலுக்குச் சென்று புராணப் படிபபுக் கேட்கும் வழக்கத்தை யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய குறியீடாக அவர் கருதியிருக்கிறார்.

பல தலை முறைகளாக யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஊற்றுக்களாக ஒரு ஞான பரம்பரை இருந்திருக்கிறது.
யோகசுவாமி ஒரு தற்செயல் தனி நிகழ்வன்று. இவர்களை கைலாச குரு பரம்மரை என்பார்கள். இப் பரம்பரையின் ஆதி குரு நந்தி நாதர். திருமுலர் சிவவாக்கியர் ஆகிய சித்தர்கள் இந்த ஆன்மீக மரபில் வந்தவர்கள்தான். வேலையை விட்டுவிட்டு குழப்பத்தில் வந்த யோகரை "தேரடா", என்று கூறி இருத்திவிட்டு ஊர் சுற்றச் சென்றுவிட்டார் அவரது குரு செல்லப்பாசுவாமி. தேரடா என்பதற்கு "இதுதான் தேர்" எனவும் "தேர்ந்து தெரிந்து கொள்" என்றும் பொருள் கொள்ளலாம். செல்லப்பா சுவாமியின் குரு கடையிற் சுவாமி. கடையிற் சுவாமியின் குரு சித்தானைக்குட்டிச்சாமி. இவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளை நம்புவதா? விடுவதா? என்ற ஆச்சரியத்தன்மை இருக்கும். இவ் விஷயத்தை நான் இங்கு வலியுறுத்தப் போவதில்லை. They can look after themselves.

இந்த இடத்தில் பாரதியாரின் குருவரிசையில் வரும் பாடல் ஒன்றைக் குறிப்பிடலாம். அவர் யாழ்ப்பாணச்சாமியைப் பற்றி இப்படிக் கூறுகிறார். பொதுவாகவே சிதம்பரம் பக்கம் யாழ்ப்பாணத் தொடர்பு இருந்தது. கோவில்.

கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்.

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை பற்றி அக நோக்கில் குறிப்பிட்டேன். இக் கலாச்சாரத்தின் புறத்தோற்றமாக அமைந்து அடையாளம் காட்டக்கூடியவை யாவை? அங்கு எழுப்பப் பட்ட கோவில்கள், பாடசாலைகள், மடங்கள், விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் என்ற சமுதாய கூட்டு முயற்ச்சிகளின் விளைவுகளைக் இதன் அடையாளமாகக் குறிப்பிடலாம்.

பழைய யாழ்ப்பாண வாழ்க்கையை இலட்சியப்படுத்தி சொல்வது எனது நோக்கமாக இருக்கவில்லை. ஆனால் கட்டுரையின் தோரணை அப்படி அமைந்து விடுகிறது. அதே போன்று சம கால வாழ்க்கை முறையை குறைத்துச் சொல்வதும் நோக்கமல்லவாயினும் இந்த இடத்தில் நின்று பார்க்கும் பொழுது அதுவும் இதே ரீதியில் தான் செல்லும் போல் தெரிகிறது. இது ஒரு பழமை வாதமா? அல்லது உண்மை நிலையா? பழையன எல்லாம் உயர்ந்தது என்றொரு உணர்வு - சென்டிமண்ட் சுலபமாக நாணயமாகக் கூடிய கருத்து என்னிலும் இருக்கிறது போலும்.

அன்புடன்
சிகுமாரபாரதி

Technorati Tags:

0 comments: