March 31, 2020

ஆறுமுக நாவலரின் தன்னலமற்ற சேவை


வாந்தி பேதி நோயினால் மக்கள் திடீர் திரெனெ மடிந்துகொண்டிருந்தபோதுநோய்கண்ட பகுதிகளில் மக்கள் நடமாடவே பயந்து கொண்டிருந்தவேளை அந்தக் கொடிய வாந்தி பேதி நோயினால் பீடிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தார் வேட்டிகட்டி வெண்ணீறணிந்த ஒரு கறுத்த மனிதர்!

ஒரு தேசிய வீரரின் தன்னலமற்ற சேவை

-   வெ. சு. நடராசா -

ஈழநாடு மே 17, 1981

1876ம் ஆண்டளவில் நடந்த நிகழ்ச்சி இது!
யாழ். குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் வாந்திபேதி நோய் பெருமளவில் பரவித் தொல்லை கொடுத்த நேரம். எந்தெந்த நேரத்திலோ க்கள் மாண்டு மடிந்து கொண்டிருந்தனர். கொள்ளை நோயின் பீதியினால் மக்கள் கலக்கத்துடன் காலம் கழிக்கவேண்டியிருந்தது.

அப்போதைய அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. நோயைக் கட்டுப்படுத்தத் தனிப்பட்ட சிகிச்சை நிலையங்களை நிறுவி, நோய்கண்ட மக்களை அப்புறப்படுத்திச் சுகாதாரச் சூழலில் வைத்து ஆவன செய்துவந்தது. வாந்தி பேதி நோய் பரவியிருக்கும் பகுதிகளில் நடமாடவே மக்கள் பயந்தனர். இந்த நோய் தொற்றுவியாதி என்று அரசினர் பிரகடனப்படுத்தியுமிருந்தனர். இந்த நோயைக் கட்டுப்படுத்தப் பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்டும், அரசாங்க அதிகாரிகளே இந்த முயற்சியில் ஈடுபடத் தயங்கினர். தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாது மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவையென முன்வரக்கூடிய உள்ளம் படைத்த தியாகசீலர்களைக் கண்டுபிடிப்பது முயற்கொம்பாகவே இருந்தது.

வேட்டி கட்டி வெண்ணீறணிந்து...

யாழ். நகரத்திலே இந்த நோய் கோரத் தாண்டவமாடிற்று. தகுந்த முன்னெச்செசரிக்கையுடன் நிவாரண முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களில் பெரும் பகுதியினர் திடீர்திடீரென நோய் கண்டு மாண்டுகொண்டு வந்தனர். இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நோயாளியும் அரசினர் தனிப்பட்ட இடத்தில் வைத்துச் சிகிச்சையளித்த கரையூர் (இப்போது குருநகர் பகுதியில் இருந்த) சிகிச்சைச் சாலையில் இருந்தார். அந்த நேரத்தில் வேட்டியுடுத்து, வெண்ணீறணிந்த மனிதர் ஒருவர் அரசாங்க அதிகாரிகள் முன்னின்றார். சுகாதாரப் பொறுப்பை ஏற்றிருந்த அரசாங்க அதிகாரிகள், அந்த மனிதர் ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கிறாரோ என ஐயமுற்றனர். அந்த நேரத்தில் அரசினரிடம் உதவிபெற, சுகாதார ஆலோசனைபெற மக்கள் வருவது வழக்கமாக இருந்தது.

உதவி செய்ய அனுமதி கேட்டார்

ந் மனிதர் "என்னால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்யக்கூடுமானால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்' என்றார்.

''உதவியென்றால் எந்த வித்தில், யாருக்கு?" - அதிகாரி கேட்டார்.

நான் யாருக்கும் பயன் கருதாது பணிசெய்யும் பண்புடையவன். தாங்கள் அனுமதியளித்தால் நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுவோருக்கு மன மகிழ்ச்சியோடு தொண்டு செய்வேன்" என்றார் அந்த வெண்ணீறணிந்த வேட்டி கட்டிய கறுத்த மனிதர்.

அதிகாரிக்கு ஒரு சந்தேகம்; வாந்திபேதி நோயின் கொடுமையை உணராமல் இந்த மனிதர் உதவிக்கு வருகிறார் போலும்! ஒருவேளை கொள்ளை நோயில் கோரப் பிடியில் சிக்கி இந்தத் தொண்டர் இறக்க நேரிட்டால் அந்தப் பழியை யார் ஏற்றுக் கொள்வது?

"வாந்திபேதி நோய் உமது உயிரையே உறுஞ்சிவிடக்கூடிய அபாயம் நிறைந்தது என்பது - உமக்கு விளங்குமா?" என்றார் அதிகாரி.

வந்த றுத்த மனிதர் புன்னகையோடு உங்கள் சங்கடம் எனக்கு விளங்குகிறது என்னைப்போல் ஒத்த மனித உயிர்கள் நோய் காரணமாக வருந்தி உயிர் விடும் போது - நானும் ஒரு மனிதாபிமானம் படைத்தவன் என்ற முறையில் என்னால் இயன்ற கடமையைச் செய்யலாமென விரும்புகிறேன். என்னுடைய தொண்டின்போது நானே கொள்ளை நோய்க்கு இரையாகி உயிர்விட நேர்ந்தாலும் மக்கள் சேவைதான் பெரிதென மதிக்கிறேன்.

அனுமதி கிடைத்தது

சிகிச்சை நிலையத்துக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரி, அந்த மனிதரை ஏற இறங்கப் பார்த்தார். நெற்றியில் திருநீற்றுக் குறியும், கழுத்தில் உருத்திராக்கமும் தரித்துக் காட்சிக்குப் பெரிய மகான் போலத் தோற்றமளித்த தன்னலமற்ற சமூகத் துறவியை மேலும் வினாவிடைக்குள்ளாக்கிக் கொண்டிருக்க விருப்பம் இல்லாது சிகிசைச் சாலையினுட்சென்று தொண்டாற்ற அனுமதியளித்தார் அந்த உயர் அதிகாரி.
 
நோயாளர் மத்தியிலே தொண்டு செய்யச் சென்றவர், முன்னர் நான் குறிப்பிட்ட நோயாளியையும் கண்டுகொண்டார். அந்நோயாளிக்கும் தொண்டுகள் பல செய்தார். குறிப்பிட்ட நோயாளி தனது மாணவன் என்று அறிந்ததும் அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளித்துத் தேறச்செய்யத் தன்னாலியன்றவற்றை எல்லாம் செய்தும் பலனளிக்காமற் போனதையறிந்ததும் பெரிதும் மனம் வருந்தினார். அம்மாவனின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்தார். வேறு என்ன அவர் செய்ய முடியும்.

அந்தப் பணியை மேற் கொள்ளவேண்டிவந்தவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல, அவர் மது நல்லூர்  நாவலர் அவர்களேதான். தன்னலம் மறந்து பிறர் நலம் பேணும் நாவலர்பெருமான் போல் பெருமகான்களை க்கள் தெய்வமெனப் போற்றுவதில் என்ன தவறு?

நாவலர் போலப் பல தொண்டர்கள் சைவசமயிகளிடத்தில் தோன்ற வேண்டும்.

 அமரர்  அராலியூர் வெ. சு. நடராசா
ஈழநாடு மே 17 1981
நன்றி: http://www.noolaham.org 


வரலாற்றுக் குறிப்புகள்:

1866 - 1867 காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தைப் பெரும் வாந்தி-பேதி நோய்த் தொற்று தாக்கியது. கொலரா விசாரணைக்குழு 1867 மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் வந்தது. இதன் அறிக்கை 1867 ஏப்ரல் 20 இல் வெளியிடப்பட்டது. 1866 அக்டோபருக்கும் 1867 ஏப்ரலுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் 16,298 பேர் கொலராவால் பாதிக்கப்பட்டனர். 10,210 பேர் இறந்திருக்கின்றனர்.

பின்னர் 1876 அக்டோபர் 21 இல் மீண்டும் வாந்திபேதி நோய் யாழ்ப்பாணத்தைத் (குறிப்பாகக் கரையூரில்) தாக்கியது. 1877 ஆரம்பத்தில் பாசையூர், ஊர்காவற்றுறை, அல்லைப்பிட்டி, நவாலி உட்படப் பல இடங்களுக்குப் பரவியது.

1877 சூலை 16 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 1875 இல் 224 பேர் இறந்துள்ளனர். 1876 இல் 826 பேருமாக, 1877 சூன் மாதம் வரை 5,481 பேர் இறந்துள்ளனர்.

கொலராவுக்குப் பின்னர் வட மாகாணத்தில் பெரும் பஞ்சம் நிலவியது. 20,000 பேர் வரை இறந்ததாகப் பதிவாகியுள்ளது.

நன்றி: John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, 1923, (2ம் பதிப்பு: 2003)

3 comments:

said...

வாழ்த்துகள் பல...

said...

நாவலர் பெருமான் குறித்த அரிய தகவல்களுக்கு நன்றி

said...

நாவலர் குறித்த தகவல்களுக்கு நன்றி