April 20, 2006

செய்திகள் வாசிப்பது எஸ்.புண்ணியமூர்த்தி

"செய்திகள் வாசிப்பது எஸ். புண்ணியமூர்த்தி". அன்று எழுபதுகளில் இலங்கை வானொலியைக் கேட்டவர்கள் இந்த கணீரென்ற குரலை மறந்துவிட முடியாது. கடந்த 15.04.06 இல் எஸ். புண்ணியமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் காலமானார். அன்னாரது நினைவுகளை இங்கு பகிர்கிறார் திரு வி. ஏ. திருஞானசுந்தரம் அவர்கள். மறைந்த எஸ். புண்ணியமூர்த்தி அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.

றேடியோ சிலோன் அல்லது இலங்கை வானொலி என்று குறிப்பிடும்பொழுது சில காலத்திற்கு முன்னர் அதன் தேசிய சேவை ஒலிபரப்பையே அது சுட்டி நிற்கும். அந்த நாட்களில் செய்தி வாசிப்போர், நேர்காணல்கள் நடத்துவோர், நேரடி நிகழ்ச்சி வர்ணனையாளர்கள் என்போர் அனைவரும் தேசிய சேவை ஒலிபரப்பின் அடையாளங்களாகவே கணிக்கப்படுவர். இந்த தனித்துவப் பண்பு இன்று பேணப்படுகின்றதா? அவ்வாறு இல்லையெனில் அதற்குக் காரணம் என்ன என்று கேட்பார் பலருண்டு. இதுபற்றி ஆழமாகவும், விரிவாகவும் எழுதப்பட வேணடும்; ஆராயப்பட வேண்டும். அதற்கு இது தகுந்த தருணமல்ல.

சென்ற சனிக்கிழமை 15.04.06 நடுநிசியைத் தாண்டி ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நித்திரையிலிருந்து விடுபட்டு, தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தேன். "புண்ணிய மூர்த்தியின் பிரதர் இராமகிருஷ்ணன் பேசுகிறேன்......I have a bad news for you" என்று தொடங்கினார். செய்தி என்ன என்பதை ஒருவாறு ஊகித்துக்கொள்ள முடிந்தது. சற்று நேரத்தின்பின் புண்ணியமூர்த்தி அவர்களின் மகளும் அந்த வேதனைமிகுந்த செய்தியை அமெரிக்காவிலிருந்து தொலைபேசியூடாக தனது தந்தை அமரரான செய்தியைச் சொன்னார்.

சென்ற 10 ஆம் திகதி திங்கட்கிழமை நான் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவின் மூன்றாம் நாள் மாலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த சமயம், எனது வீட்டுக்கு புண்ணியமூர்த்தியின் தொலைபேசி அழைப்பு கிடைத்தது. நான் வீட்டில் இல்லாத படியினால் "நாளை அவருடன் பேசுகிறேன்....." என்று கூறியிருந்தார். "நாளை பேசுகிறேன்" என்ற அந்தச் செய்தி கிடைத்த ஐந்தாவது நாள் புண்ணியமூர்த்தி அமரராகிவிட்டார். அவர் எனக்கு என்ன சொல்லவிருந்தார் என்ன பேசவிருந்தார் என்பதை அறியும் வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது வேதனை.

புண்ணியமூர்த்தி தனது ஒலிபரப்புத் துறை அனுபவங்களை பிரபல பத்திரிகையாளர் பி.கிருஷ்ணசாமி மூலமாக ஒரு நூலாகப் படைத்துள்ளார். அதில் எவ்வளவோ விடயங்களை வாசித்து அறிந்து கொள்ளலாம். 2004 பிற்பகுதியில் செய்திகள் வாசிப்பவர் எஸ்.புண்ணியமூர்த்தி அதாவது News Read by S.Punniamoorthy என்ற அந்த ஆங்கில நூலை கொழும்பில் வெளியிட வேண்டுமென்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்து, ஊடகவியலாளர்களான திருவாளர்கள் ஆ.சிவநேசச்செல்வன், கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரின் உதவியையும் பெற்று நூல் வெளியீட்டை நடத்தித் தருமாறு கேட்டிருந்தார். நூல் வெளியீட்டுக்கு தன்னால் சமுகமளிக்க இயலாது என்றும் டாக்டர்களின் ஆலோசனைப்படி விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டியுள்ளது என்றும் கூறி, மனதுருக்கும் செய்தியொன்றையும் குறிப்பிட்டார்.

"....இருதய நோய் இருப்பதால் டாக்டரின் கவனிப்பில் இருக்க வேண்டும். அந்த டாக்டர் சொல்லிவிட்டார் Your days are numbered என்று. அவர் சொல்லியபோது கேட்கவே கஷ்டமாக இருந்தது. தினமும் மரணத்தின் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்ப்பது, அவரது வாயாலே அதைக் கேட்பதென்பது துன்பத்தின் உச்சாணி என்பதாக உணர்ந்தேன்.

`நீங்கள் வருத்தப்படுவது எனக்குப் புரிகின்றது.... கவலைப்படாதீர்கள்.... நான் ஒரு பூரணமான - நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். அன்பான மனைவி, அறிவார்ந்த பிள்ளைகள்.... இந்த மனநிறைவோடு இருக்கும் என்னை நான் அன்றாடம் வழிபடும் நல்லூர்க் கந்தன் எந்தநேரத்திலும் என்னை அழைத்துவிடுவான்" என்பது அவரது வார்த்தைகள். அவர் விரும்பியவாறே அவரது சுயசரிதை நூலை கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் 19.03.2005 இல் நடத்தி வைத்தோம். விழாவின் வீடியோ ஒளிப்பதிவுகள், அதன் செய்திகள் வெளிவந்த பத்திரிகை நறுக்குகள் போன்றவற்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். அது அவருக்குமிக்க மகிழ்ச்சியைப் பெற்றுக் கொடுத்தது.
இதன்பிறகு ஞாயிறுதோறும் காலையில் அவர் என்னுடன் தொலைபேசியூடாக தொடர்புகொள்வார். தமது நூல் கனடாவிலும், லண்டனிலும் வெளியிட்டு வைக்கப்பட்டதை மனநிறைவுடன் அறிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் புலம்பெயர்ந்து அந்தநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் ஒலிபரப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட திருவாளர்கள் சி.வி.ராஜசுந்தரம், எஸ்.திருச்செல்வம், வி.என். மதியழகன், பி.விக்னேஸ்வரன், திருமதிகள் நவராஜகுலம் முத்துக்குமாரசாமி, மனோகரி சதாசிவம், நமசிவாயம், யோகா பாலச்சந்திரன், வசந்தா நடராஜன் மற்றும் பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புண்ணியமூர்த்தி இலங்கை வானொலில் 17.07.1952 இல் பகுதிநேர அறிவிப்பாளராக சேர்ந்து கொண்டார். பின்னர் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டார். ஓர் அரச திணைக்களமாக விருந்த இலங்கை வானொலி 1967 இல் கூட்டுத்தாபன அந்தஸ்துக்கு மாற்றப்பட்ட பின்னர், இம்மாதம் முதலாந்திகதி காலமான மற்றொரு ஒலிபரப்பாளர் அல்ஹாஜ் வீ.ஏ.கபூர் அவர்களைப் போல முதலாந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1971 இல் செய்திப் பிரிவு மறுசீரமைக்கப்பட்ட சமயம் தமிழ்ப் பகுதி தனியாக ஸ்தாபிக்கப்பட்டது. இப்பகுதியின் முதலாவது தலைவராக புண்ணியமூர்த்தி பதவியுயர்வு பெற்றார். அவர் 1987 இல் ஓய்வுபெறும்வரை இப்பதவியை வகித்து வந்தார். அதன்பின் 1993 இல் இசைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த தமது துணைவியாருடன் அமெரிக்கா சென்று தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டார்.

புண்ணியமூர்த்தி மேற்கு `ஜேர்மன் அரசின் புலமைப்பரிசில் பெற்று 1973 இல் ஜேர்மனி சென்று ஒலிபரப்புத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். இதுதவிர, 1975 இல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வானொலியின் வகிபாகம்' என்பது பற்றிய ஒருமாத கால கருத்தரங்கிலும் அவர் பங்குபற்றினார். புண்ணியமூர்த்தி 1974 இல் இலண்டன் பி.பி.சி. சென்று செய்தித் துறையில் ஒரு மாத காலம் விசேட பயிற்சியும் பெற்றார். 1981 ஆம் ஆண்டில் புதுடில்லியில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட பிராந்திய மாநாட்டில் இலங்கையிலிருந்து அறிக்கை செய்வதற்கு அங்கு சென்ற குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

புண்ணியமூர்த்தி தனது ஒலிபரப்பு வாழ்க்கையில் செய்தித் துறையில் முழுமையாக ஈடுபட்டவராவார். கலை, கலாசார நிகழ்ச்சிக்காக பலவற்றை வடிவமைத்து ஒலிபரப்பியிருந்தாலும், அவர் ஒரு செய்தியாளராகவே அடையாளம் காணப்பட்டார். செய்தித்துறை இன்றைய காலத்தைப் போலல்லாமல் அன்று பிரச்சினைகளுக்கு உட்படாத ஒன்றாக விளங்கியது. எவரும் விளம்பரத்தினூடாக வாழ்ந்தவர்கள் அன்று இருந்ததில்லை அல்லவா? ஆனாலும் கூட போட்டி, பொறாமை காரணமாக சவால்கள் பலவற்றுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. புண்ணியமூர்த்தி தனக்கு ஏற்பட்ட சவால்களை துணிவுடன் முகங்கொடுத்து தன் திறனை தன்தரப்பு நியாயத்தை நிலைநாட்டினார்.

புண்ணியமூர்த்திக்கு சமீபத்தில் கனடாவில் ரொரன்டோ நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற `தமிழர் தகவல்' மாதாந்த சஞ்சிகையின் 15 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் நான்கு தசாப்த வானலை வித்தகர் என்ற விருது வழங்கப்பட்டது அவருக்குக் கிடைத்த பெருங்கௌரவமாகும். மரணம் என்பது நிச்சயமான ஒரு நிகழ்வு. பிறப்புக்கும் மரணத்துக்குமிடையில் வாழ்ந்த காலத்தை ஏனையோர் எண்ணிப் பார்க்கும் வகையில் வாழ முடிந்திருந்தால் அந்த நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும். இந்தவகையில் இலங்கை வானொலியின் செய்தி வாசிப்புத் துறையில் நேயர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துக் கொண்ட புண்ணியமூர்த்தி, வீ.ஏ.கபூர் ஆகிய இருவரின் நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலாதவை; அவை நிலைத்திருக்கும்.

இந்த நினைவை எழுதியவர்: வீ. ஏ. திருஞானசுந்தரம்

நன்றி: தினக்குரல்

April 06, 2006

யாழ்ப்பாண விருந்து

ண்மையில் நாவுக்குச் சுவையான ஒரு கட்டுரை மல்லிகை ஆண்டு மலரில் வெளிவந்திருந்தது. அன்று யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகளைப் பற்றியது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகளை இந்தப் பதிவில் தருகிறேன். செல்லக்கண்ணு என்பவர் இதனை எழுதியிருக்கிறார்.

ஒடியல் கூழ் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரசித்தமானது. இது பனையின் வழங்கல். தற்போது பணத்தை அள்ளும் இலக்கோடு சில வர்த்தகர் 'யாழ்ப்பாண விருந்துகளை' ஏற்பாடு செய்கின்றனர். அதில் ஒடியல் கூழ் முக்கியம் பெறுகின்றது. கிழடுகளின் மண்டை ஓட்டுக்குள் மறைந்திருக்கும் அன்றைய நாவைப் பனிக்க வைக்கும் உணவு வகையறாக்கள் இன்னமும் சொந்தங்களைத் தொடருகின்றன.

ஊது மாக் கூழும் அதிலொன்று. நெஞ்சு நோவுக்கு மருந்தாக இதைச் செய்து குடிப்பார்கள். கஞ்சி வகைகளும் உண்டு. பாற் கஞ்சி! சிறுகதைச் சிற்பி வைத்தியலிங்கம் இந்தப் 'பாற் கஞ்சி' என்ற தலைப்பில் சிறுகதையொன்றை எழுதி, அதைத் தனது தொகுப்பினதும் பெயராகச் சூட்டியுள்ளார். கோயில்களில் சித்திரைக் கஞ்சியாக இது வழங்கப்படுகின்றது. 'முருங்கை இலைக் கஞ்சி'யையும் எமது யாழ்ப்பாணத்தவர்கள் குடித்துப் பார்த்தவர்கள். இதே தலைப்பில் அமரர் கே. டானியல் எழுதிய குறுநாவல் ஒன்றும் தினகரனில் வெளியானது.

புளிக் கஞ்சி! இது புளியைக் கரைத்து அரிசியோடு கலக்கி, இறாலும் போட்டு ஆக்குவது. வேறும் சில 'கூடு'களையும் கலப்பார்கள். உறைப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும். காய்ச்சல் முறிந்த பின் நாவில் ஒரு கசப்பு வருவதைச் சகலரும் அறிவர். அத்தகைய சந்தர்ப்பத்தில் அன்றைய அப்பாச்சிகளும், பெத்தாச்சிகளும் அத்தகைய நோயாளிகளுக்கு இந்தக் "கசாயத்தைக்" கொடுப்பர்.

இனி, உப்புக் கஞ்சி! இவர் 'பரம' ஏழை. அரிசியையும் உப்பையும் நீரையும் மட்டும் பாவித்து உண்டாக்குவர். ஏழைகளின் ஆத்ம நண்பன். அவர்களது குறைந்த வருமானத்திற்குத் தோதான சிக்கன உணவு.

துவையல்களென்ற திண்மமான பல வகையறாக்களும் அன்றைய யாழ்ப்பாணத்தாரின் உடல் வாகை உச்சப்படுத்தின. மரவள்ளிக் கிழங்குத் துவையல், இலுப்பைப் பூத்துவையல் இவைகளை அன்றைய யாழ்ப்பாணத்தவர்கள் சிற்றுண்டிகளாக மட்டுமின்றித் தமது மூவேளை உணவுகளில் ஒன்றாகவும் பழக்கப்படுத்தி இருந்தனர்.

உலக நாடுகளனைத்திலும் இன்று, சுத்தமான எள்ளில் வடித்த நல்லெண்ணையின் வாசத்தை நுகரலாம். இந்த நல்லெண்ணெய் இன்று யாழ்ப்பாணத்தாரின் குறியீடாகவும் ஆகிவிட்டது. பூப்பெய்திய இளசுகளுக்கு இதொரு விற்றமின். இந்த எள்ளிலிருந்து பெறப்படுவதுதான் எள்ளுப்பாகு. இப்பொழுது 'போளை' வடிவில் கிடைக்கிறது. ஆனால் அக்காலத்து ஆச்சிமார் அரைத்த மிளகாய்க்கூடுபோல் இதைச் செய்வர். பருத்தித்துறைப் பகுதியில் இதன் புழக்கம் இப்பவும் உண்டு.

இதை வாசித்துப் பொச்சடிக்கும் இன்றைய சந்ததி தாமும் ஒருமுறை இவைகளைச் சுவைக்கக் கூடும். பயப்படவேண்டாம்! என்றோ ஒரு நாள் நிச்சயமாக பெரிய "ஐந்து நட்சத்திர" ஹோட்டல்கள் தம்மிடம் வந்தால் இவைகளைப் பருகலாமென விளம்பரம் செய்யும். முடிந்தால் சென்று சுவைத்துப் பாருங்கள். திரிவுபடுத்தப்படாதிருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்!