December 29, 2009

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மன்னனின் கல்லறை கண்டுபிடிப்பு

வட சீனாவை 1,700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட சாவோ சாவோ என்ற புகழ் பெற்ற மன்னனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனத் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சாவோ சாவோ மன்னன் (கிபி 155–220)சீன தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 8.000 சதுர அடி பரப்புள்ள கல்லறைத் தொகுதி ஒன்றில் இம்மன்னின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்திய சீனாவின் எனான் மாகாணத்தில் ஆன்யாங் என்ற பழம்பெரும் தலைநகரத்திகுக் கிட்டவாக சிகாசூ என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கக் கல்லறைக்குச் செல்வதற்கு 130 அடி பாதை ஒன்றும் உள்ளது.


கல்லறையில் மூன்று மனிதர்களின் உடல்கள் உள்ளன. 60 அகவை மதிப்புடைய ஆண், 50 மற்றும் 25 அகவை மதிப்புடைய இரு பெண்களுடைய உடல்கள் அங்கு காணப்பட்டுள்ளன.


இவை அநேகமாக கிபி 220 ஆம் ஆண்டில் இறந்த சாவோ மன்னனின் உடல் எனவும், 230 ஆம் ஆண்டில் இறந்த அவனுடைய மனைவி, மற்றும் அவர்களின் தாதி ஆகியோருடையதாக இருக்கல்லாம் என தொல்பொருளியலாலர்கள் தெரிவித்துள்ளனர்.


சக்கரவர்த்தி சாவோ சாவோ (155–220) ஒரு கவிஞனாகவும் இருந்திருக்கிறான். ஹான் வம்சத்தின் வீழ்ச்சியின் பின்னர் வடக்கு சீனாவின் பெரும் பகுதியை இவன் கூட்டிணைத்து ஒற்றுமைப்படுத்தியிருந்தான்.


சென்ற ஆண்டு டிசம்பரில் இந்த இடம் அகழ்வாய்வுக்கு உட்படுத்தியதில் இருந்து இங்கு 250 இற்கும் மேற்பட்ட புராதனச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொன், மற்றும் வெள்ளியினாலான பாத்திரங்கள், மற்றும் பொருட்களும் அடங்கும்.


சாவோ காலத்து நிகழ்வுகளைக் குறிக்கும் கல் ஓவியங்களும் சாவோவின் தனிப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


"இதுவரை கிடைக்கப்பட்ட ஆதாரங்களை வைத்து இக்கல்லறை சாவோ சாவோவினுடையது என நாம் திட்டவட்டமாகக் கூற முடியும்," என சீன அரசின் கலாச்சார மரபுப் பாதுகாப்புக்கான நிறுவனத்தின் பதில் தலைவர் குவான் கியாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.

October 13, 2009

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்திகள்

தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.


"பகீரா கிப்லிங்கி" (Bagheera kiplingi) எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும், மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40,000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.


இது குறித்த ஆய்வுக் கட்டுரை "நடப்பு உயிரியல்" என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில், பென்சில்வேனியாவின் விலனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


பாயும் "சிலந்திதேள் வகுப்பு" (arachnid) வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலத்தியே வர வேண்டியிருக்கிறது.


இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் மீகன் என்பவரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தற்போது பேராசிரியர் கறியின் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கறி இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், "தாவரங்களை மட்டுமே தேடிச் செல்லும் சிலந்தி உலகில் இதுவொன்றே" எனத் தெரிவித்தார்.


"இவை பாயும் சிலந்திகளாதலால், தமது உணவுக்காக வலைகளைப் பின்ன வேண்டியதில்லை."


"அக்காசியாக்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தருவதால் இச்சிலந்திகளுக்கு உணவுக்குப் பஞ்சமில்லை." இவ்வாறு தெரிவித்தார் பேராசிரியர் ராபர்ட் கறி.

விக்கிசெய்திகளுக்காக எழுதியது.

August 04, 2009

தமிழில் விக்கிசெய்தி - நீங்களும் செய்தி எழுதலாம்


விக்கிசெய்தி என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை வெளியிடும் விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு சகோதரத் திட்டம். இது இப்போது தமிழிலும் கிடைக்கிறது.


விக்கிசெய்தி உங்களால் எழுதப்பட்ட சுயாதீன செய்தி மூலம். இங்கு நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு செய்தியும் உங்களைப் போன்ற ஒருவரால் எழுதப்பட்டவையே. இங்குள்ள எந்த ஒரு கட்டுரையையும் நீங்கள் திருத்த முடியும், அல்லது விரிவாக்க முடியும்.

இரு வகை செய்திக் கட்டுரைகளை நீங்கள் எழுதலாம்:


1. ஒரு செய்தி தொடர்பாக பல்வேறு நம்ப தகுந்த ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை வைத்து ஒரு தொகுப்பு செய்திக் கட்டுரையை எழுதலாம். ஊடகங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகும்.


2. ஒரு செய்தி நிகழ்வைப் பற்றி நீங்கள் நேரடியாக பதிவு செய்யலாம். இயன்றவரை தகுந்த ஆதரங்களை வழங்குங்கள்.


இத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு செய்திகளை எழுத ஆர்வமுள்ளோரை அழைக்கிறேன். உங்களுக்கு விரும்பிய ஒரு துறையில் செய்திகளை எழுதலாம். சட்டமும் ஒழுங்கும், பண்பாடு, பேரிடர் மற்றும் விபத்து, பொருளாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவம், அரசியல், அறிவியல், ஆன்மிகம், விளையாட்டு இப்படி எத்துறையிலும் செய்திகளை எழுதலாம்.


செய்தியாளராக வருவதற்கு விருப்பமிருக்கிறதா? வாருங்கள் விக்கிசெய்திகளுக்கு.

http://ta.wikinews.org/

அண்மையில் எழுதப்பட்ட சில செய்திகள்:

1. மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை
2. உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி கனாரி தீவுகளில் அமைக்கப்பட்டது
3. இந்தியாவில் புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது
4. டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு?
5. நிலநடுக்கம் நியூசிலாந்தை ஆஸ்திரேலியா நோக்கி நகர்த்தியது
6. வியாழன் கோளில் மோதுகை இடம்பெற்றதை நாசா உறுதிப்படுத்தியது