March 10, 2007

பேராசிரியர் எலியேசர் நினைவு நாள் இன்று

பேராசிரியர் மாமனிதர் சி. ஜே. எலியேசர் அவர்களின் நினைவு தினம் இன்றாகும் (மார்ச் 10, 2001). இலங்கையில் கல்வி கற்கும் காலங்களில் இவரது கணித நூல்களை (குறிப்பாக பிரயோக கணிதப் பயிற்சி நூலை) பலரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவரது "எலியேசர் தேற்றம்" பௌதிகவியலில் பயன்படுத்தப்படுகிறது.


கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர் (Christie Jeyaratnam Eliezer) 1918 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி ("'PhD'') பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் புகழ்பெற்ற விஞ்ஞானி போல் டிராக் (''Paul Dirac'') அவர்களின் வழிகாட்டலில் டாக்டர் (''DSc'') பட்டமும் பெற்றார்.

எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் கடமையாற்றினார். ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக ''அமைதிக்காக அணு சக்தி'' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (''La Trobe'') பல்கலைக்கழகத்தில் பயன்முகக் கணிதத்தில் (Appied Maths) பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்து 1983இல் இளைப்பாறினார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978 ம் ஆண்டில் விக்ரோறியா மாநில 'இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்' தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் ''Order of Australia'' விருது 1996இல் வழங்கப்பட்டது.

1997 ம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எலியேசரின் புகழ்பெற்ற தேற்றம்:

புரோத்தன் (நேர்மின்னி) ஒன்றின் மின்புலத்தினூடாக இலத்திரன் (எதிர்மின்னி) அந்த புரோத்தனின் மையத்தை நோக்கிச் (''radially'') செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த இலத்திரன் லோரன்ஸ்-டிராக் (''Lorentz-Dirac'') சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல புரோத்தனால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது இலத்திரனில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' (''asymptotically'') ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது ''எலியேசரின் தேற்றம்'' எனப்படுகிறது.
[Eliezer, C.J., ''The hydrogen atom and the classical theory of radiation'', Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)]

விக்கிபீடியாவில் பேராசிரியர் சி. ஜே. எலியேசர்.