May 03, 2017

'ஆவண ஞானி’ குரும்பசிட்டி கனகரத்தினம்

ஆவண ஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களுடனான நேர்காணலைக் கண்டவர் எழுத்தாளர் அருணகிரி அவர்கள்.

திருச்சியில் வசித்து வந்த குரும்பசிட்டி கனகரெட்ணம் அவர்களை 1.7.2012 அன்று  சந்தித்தேன். அவருடன் நேர்காணலைப் பதிவு செய்து, சங்கொலியில் வெளியிட்டேன். 2016 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார்.


அவருடனான நேர்காணல்:

அருணகிரி: ஐயா, உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

கனகரெட்ணம்:  எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் அருகே உள்ள குரும்பசிட்டி. நான் பிறந்தது 1934 ஆகஸ்ட் முதலாம் தேதி. என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். தகப்பனார் விவசாயி. எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள யாழ் மத்தியக் கல்லூரியில் படித்து, தொடக்கத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டு, பின்னர் கண்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றேன். அங்கே பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. என்னுடைய திருமணம் 1962 ஆம் ஆண்டு, ‘தமிழரசு தேசியத் திருமணம்’ என்று சொல்லி தந்தை செல்வா தலைமையில் நடந்தது.

அருணகிரி: தமிழரசு தேசியத் திருமணம் என்றால் என்ன? அது சுயமரியாதைத் திருமணமா?

கனகரெட்ணம்:  இது நல்ல கேள்வி. எங்கள் நாட்டில் ஒரு திருமணத்தை நடத்துவதற்கான திட்டங்களையெல்லாம் எழுதிக் கொண்டு போய்க் காட்ட வேண்டும். ஐயர் வைக்க வேண்டும் என்பது ஒரு பிரச்சினை. வயதானவர்கள், பெற்றோர், மாமன் மாமியார்களது கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாகப் போய் மோதக்கூடாது. எங்களுடைய திருமணம், நாங்களாகத் தீர்மானித்தது.

அப்போது, தந்தை செல்வா அவர்களிடம் கேட்டேன். ‘இந்தத் திருமணத்தில் சிங்களமும் ஒரு மொழியாக, ஒரு வாழ்த்து அட்டை போல வைத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று.
‘நிச்சயமாக இல்லை. அது இங்கே தேவை இல்லை’ என்றார்.   இத்தனைக்கும் அவருக்கு மலைநாட்டில் ‘கல்கந்து வத்தை’ என்ற தேயிலைத் தோட்டம் இருக்கின்றது. இப்போது என்ன நிலைமை என்று தெரியவில்லை.

நான் தந்தை செல்வா அவர்களைப் பற்றி, நான்கைந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கின்றேன். ‘25 லட்சம் மக்களின் தலைவர்; தமிழரசுத் தந்தை; செல்வாவின் சிந்தனைகள்’ என இப்படிச் சில புத்தகங்கள். ஒரு கூட்டத்தில் அவர் பேசி முடித்து உட்கார்ந்து இருந்தபோது, அவரிடம் ஒரு புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுத்தேன். அதை வாங்கிக் கொண்டு ‘நன்றி’ என்றார்.

எனது திருமணத்தில், மகன் வீட்டார் வரவேற்பைத் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. அமிர்தலிங்கம், நடராஜா (பொட்டல்) ஆகியோர் பேசினார்கள். திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் நாட்டுப் பாடல்கள் பாடினார். தந்தை செல்வா அவர்கள், தமிழரசுக் கட்சியின் அடையாளச் சின்னத்தை (பேட்ஜ்), மணமகன், மகளிடம் தந்தார்.  பிறகு ஐயர் தாலி எடுத்துக் கொடுத்தார்.

ஆனால் வெளியில் என்ன சொன்னார்கள்? ‘செல்வநாயகம்தான் மணமகளுக்குத் தாலி கட்டினார்’ என்றுகூடப் பேசினார்கள். அன்றைக்கு, அப்படிப்பட்ட ஒரு பிற்போக்கான கிராமமாக எங்கள் கிராமம்  இருந்தது.

சேர் பொன். இராமநாதன் அவர்களின் மருமகன் நடேசன். அவர், செல்வாவுக்கு எதிராகத் தேர்தலில் நின்றவர். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அந்த ஊரில், நடேசன் ஆதரவாளர்கள்தாம் அதிகம். அங்கே, அமிர்தலிங்கம் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அதற்கு முன்பு, பெரியவரை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வருகையில், அவரது கையைப் பிடித்துத் தடுத்தார்கள்.

‘இது நூற்றுக்கு நூறு வீதம் இந்துக்கள் வாழுகின்ற ஊர். இங்கே கிறித்துவரான செல்வா வரக்கூடாது’ என்றெல்லாம் சொன்னார்கள். இதெல்லாம் பழங்கதை. அப்படிப்பட்ட கிராமத்தில், அன்றைக்கு இளைஞர்களாக இருந்த நாங்கள், முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டு வந்து புகுத்தினோம். தமிழர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்; உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டும் எனத் தந்தை செல்வா அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.

அருணகிரி: உங்களுக்கு எழுத்து ஆர்வம் எப்படி வந்தது?

கனகரெட்ணம்:  நூற்றுக்கு நூறு நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்ல மாட்டேன். அரசியல்வாதி என்றும் சொல்ல மாட்டேன். நான் ஒரு இனப்பற்றாளன். உலகத் தமிழர் நன்மையைக் கருதுபவன். தமிழருடைய வரலாற்று ஆவணங்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். காரணம், ‘இலங்கைத் தமிழர்களுக்கு என ஒரு தொடர் வரலாறு கிடையாது.  தங்களுடைய வரலாறை அவர்கள் சரியாக எழுதி வைக்கவில்லை. இலங்கைத் தமிழர் வரலாறு தொடர்பான குறிப்புகளைப் பார்க்க வேண்டும் என்றால், புத்த பிக்குகள் எழுதி வைத்து இருக்கின்ற ‘மகாவம்ச’ போன்ற நூல்களைத்தான் பார்க்க வேண்டியது உள்ளது. அவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதால், அந்த ஆவணங்களும் தமிழர்களுக்கு எதிரான, தவறான கருத்துகளையே கொண்டு உள்ளன. சில நல்ல செய்திகளும் உள்ளன. எல்லாளன் அநுராதபுரத்தை ஆண்டு கொண்டு இருந்தான் என்று சொல்கிறார்களே தவிர, வேறு எந்த உருப்படியான செய்திகளும் இல்லை.

என்னுடைய வரலாற்று ஆசிரியர் படிப்பிக்கும்போது அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பார். ‘நீங்கள் வரலாறு பாடம் படிக்கின்றீர்கள். நீங்கள் வாழ்க்கையில் நன்றாக முன்னேற முடியுமாக இருந்தால், நீங்கள் சரித்திரங்களை எழுதுங்கள். புத்தகமாக ஆக்கி வையுங்கள்’ என்று சொன்னார்.

நான் கண்டியில் இருந்தபோது, 1956 ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் நாள், ‘சிங்களம் மட்டும்’ என்ற சட்டத்தை, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகே கொண்டு வந்து திணித்தார்.

அதை எதிர்த்து, நாடாளுமன்றத்துக்கு எதிரில் உள்ள காலி முகத் திடலில் தமிழர்கள் சத்தியாகிரகம் செய்தார்கள். ‘கோஃல்’ என்றால் தமிழில் ‘காலி’ என்று சொல்லுவர். அப்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அடித்தனர். பலருக்கு மண்டை உடைந்தது. அடுத்த நாள் செய்தித்தாள்களில், இவையெல்லாம் செய்திகளாக வந்தன. அதைத்தான் நான் முதலில் கத்திரித்து, சேகரித்து வைத்தேன். அதுதான் எனது முதலாவது ஆவணம்.  அதற்குப்பிறகு, நிறைய செய்திகளைச் சேகரித்து வெட்டி எடுத்து அட்டைகளில் ஒட்டி வைத்துப் பாதுகாத்தேன். அதை பின்னர் புத்தகமாக ஆக்குவது ஒரு கலை. மிகவும் பொறுமை வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் நாங்கள் ஆவணங்களைச் சேகரித்து வைத்து இருக்கின்றோம். வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தனியாக உள்ளது. தமிழ்நாட்டுச் செய்திகளையும் தனியாகத் தொகுத்து வைத்து இருக்கின்றோம். பூம்புகார் பற்றிய கடல் ஆய்வுகள் நிறைய வெளியாகி இருக்கின்றன. அவற்றையெல்லாம் சேகரித்து வைத்து இருக்கின்றேன்.

பழைய பேப்பர் கடைகளுக்கெல்லாம் போய் செய்திகளைத் திரட்டினேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நித்தியானந்தன், 1890 முதல் உள்ள பத்திரிகைகளின் பிரதிகளைக் கொடுத்தார். அதையெல்லாம் திரட்டித்தான் மைக்ரோபிலிம் செய்தேன். 1964 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில்தான், எனது முதலாவது கண்காட்சியை வைத்தேன். தந்தை செல்வா அவர்கள் வந்து தலைமை ஏற்றார்கள்.

இரண்டாவதாக, 1974 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, நடந்தபோது அங்கே கண்காட்சி வைத்தேன். பாதர் தனிநாயகம் அடிகள் திறந்து வைத்தார்கள்.   அரசியல் சார்பு இல்லாததை, அரசாங்கத்தின் அனுமதியோடு கனடாவுக்குக் கொண்டு  சென்றேன். அங்கேதான், ‘ஆவண ஞானி’ என்ற பட்டத்தை எனக்குக் கொடுத்தார்கள்.

அங்கிருந்து ஆவணங்களை, கப்பல் மூலமாக நோர்வேக்குக் கொண்டு சென்று, அங்கே பல்கலைக்கழகத்தில் கண்காட்சி வைத்தேன்.  பேராசிரியர்கள் வந்து பார்த்துவிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அப்போதெல்லாம், நான் மைக்ரோபிலிம் செய்யவில்லை.

1998 ஆம் ஆண்டு, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘இலங்கையில் சிறுபான்மையினராகிய நாங்கள், இத்தகைய ஆவணப் பணிகளை மேற்கொண்டு உள்ளோம்.  இவற்றை மைக்ரோபிலிம் செய்வதற்கு நீங்கள் நிதி உதவி அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் நிதி உதவி அளிக்க ஒப்புக் கொண்டார்கள். அதனால்தான், ஒரு சாதாரண ஏழையாகிய நான், இந்த அளவுக்கு ஆவணங்களை மைக்ரோபிலிம் செய்ய முடிந்தது.

சென்னை தரமணியில் ரோஜா முத்தையா நூலகம் மைக்ரோபிலிம் பணிகளைச் செய்வது போல, கொழும்பில் அதற்காக ஒரு நிறுவனம் உள்ளது. அவர்கள் அங்கிருந்து ஒரு சிங்களவரை, கண்டியில் உள்ள என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மைக்ரோபிலிம் செய்தோம். இதை மைக்ரோபிலிம் செய்த சிங்களவரது நிறுவனம் ஒரு நாளைக்கு ஒரு மைக்ரோபிலிம் செய்தால் போதும் என்று சொல்லி இருந்தது. ஆனால், அவர் மூன்று மைக்ரோபிலிம்கள் செய்வார். ‘நீங்கள் ஒரு மைக்ரோபிலிமுக்குக் காசு தந்தால் போதும்; மற்ற இரண்டையும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதிக் காசை மட்டும் எனக்குத் தாருங்கள்’ என்றார். நானும் சரி என்றேன்.  அப்படித்தான் மேலும் இரண்டு பிரதிகள் கிடைத்தது.

80 வீதமான பணிகள் நிறைவு பெற்று விட்டன. அந்த நிலையில்தான், தமிழ்ச்செல்வன் என்னைக் கிளிநொச்சிக்கு வருமாறு அழைத்தார். ஒரிஜினல் மைக்ரோபிலிம் என்னிடம் இருந்தது. கிளிநொச்சிக்குக் கொண்டு போனது நகல்தான். சுவிட்சர்லாந்து நாட்டின் ஆர்கிவ்ஸ் என்ற நிறுவனத்துக்குக் கொடுத்ததும் மற்றொரு நகல்தான். நான் சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்று இருந்தபோது, யுனெஸ்கோ அமைப்பைத் தொடர்புகொண்டு, இந்த மைக்ரோபிலிம் பற்றிக் கூறினேன்.

அப்போது அவர்கள் சொன்னார்கள், ‘நீங்கள் இதற்காகப் பணம் எதுவும் கேட்காமல் இலவசமாக அளித்தால், அதை நாங்கள் பாதுகாத்து வைக்கிறோம்’ என்று சொன்னார்கள். அதற்குப்பிறகு நான் இலங்கைக்கு வந்து சுமார் 200 மைக்ரோபிலிம்களை, சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினேன்.

மைக்ரோபிலிம் செய்த சிங்களவரிடம், இதை கொழும்பு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். மொத்தம் ஏழு பெட்டிகள். அவன் ஆறு பெட்டிகளைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, மற்ற ஒரு பெட்டியைத் தன் வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டு, இராணுவம் பறித்துக் கொண்டு விட்டது என்று சொன்னான். அவர்களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டுமானால் 50000 ரூபாய் வேண்டும் என்றான். ஏற்கனவே இதைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு, இவனுக்கு 35000 ரூபாய் கொடுத்து இருந்தோம். இப்போது மேலதிகமாக 50000 கேட்டான். வேறு வழி இல்லை. எவ்வளவோ சிரமப்பட்டு அந்தப் பணத்தையும் திரட்டி அவனிடம் கொடுத்துத்தான், அந்த ஒரு பெட்டியையும் மீளப் பெற்றோம்.

எங்களிடம் எவ்வளவோ பழகியவன், இப்படிச் செய்து விட்டானே என்று வருத்தமாக இருந்தது. தமிழர்களிடம் காசு பறிப்பதே சிங்களவர்களின் நோக்கமாக இருக்கின்றது. கிளிநொச்சி பகுதி அருமையான நெல் விளையும் மண். அதையெல்லாம் இப்போது சிங்களவன் கைப்பற்றிக் கொண்டு விட்டான். என்னமாக இருந்த நாடு அது ஐயா? இப்படி ஆகி விட்டதே?

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.  உலகின் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் வந்து இருந்தனர். அப்போதுதான், ‘உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்’ என்ற அமைப்பை நான் நிறுவினேன். முதலில் இந்த அமைப்புக்கு ‘உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரைத்தான் தெரிவு செய்து இருந்தோம். ஃபிஜித் தீவுகளைச் சேர்ந்த அப்பா பிள்ளை என்ற தமிழ் அறிஞர்,  ‘பாதுகாப்பு’ என்றால் அதில் அரசியல் இடம் பெறக்கூடும்; அது பல நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்; எனவே, அதற்குப் பதிலாக ‘பண்பாட்டு இயக்கம்’ என்று வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு, அவ்வாறே பெயர் சூட்டினோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டில், அப்பா பிள்ளை அவர்களுடைய படத்தையும், பல தமிழ் அறிஞர்களின் படங்களையும் திறந்து வைத்தோம். விரைவில், புதுச்சேரியில் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் ஒரு கல்வி மாநாடு நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதில் அவருடைய படத்தையும் திறந்து வைக்க இருக்கின்றார்கள்.

பண்பாட்டு இயக்கத்துக்குச் சாலை இளந்திரையன் அவர்களை முதல் தலைவராக நியமித்துச் செயல்பட்டுக் கொண்டு இருந்தோம். 1977 ஆம் ஆண்டு, அந்த அமைப்பின் சார்பில் சென்னையில் ஒரு மாநாடு நடத்தினோம். எம்.ஜி.ஆர். அவர்கள் வந்து இருந்தார்கள். பின்னர், சாலை இளந்திரையன் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மலேசியாவைச் சேர்ந்த வீரப்பன் அவர்கள் தலைவராகப் பொறுப்பு ஏற்றுச் சில காலம் நடத்தினார். பின்னர் அவரும் இறந்து போனார். இப்போது கனடாவில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர் வேலுப்பிள்ளை அவர்கள், இந்த அமைப்பின் தலைவராக இருக்கின்றார். ஜெர்மனியில் வசிக்கின்ற கணேசலிங்கம் அவர்கள் செயலாளர் நாயகமாக இருக்கின்றார்.

மலேசியாவில் உதவிப் பிரதமராக இருக்கின்ற பினாங்கு இராமசாமி, கோவைக்கு வந்தபோது ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். ‘உலகத் தமிழர்களின் பாதுகாப்புக்காக ஒரு அமைப்பு தேவை; அதற்காக நான் பாடுபடுவேன்’ என்று.

இலங்கை மண், ஒரு வித்தியாசமான மண். 1970 ஆம் ஆண்டிலேயே இந்தக் கருத்தை நாங்கள் முன்வைத்து இருக்கின்றோம். ‘ஒரு குடையின் கீழ் உலகத் தமிழினம்’ என்று ஒரு புத்தகத்தை நான் அச்சிட உள்ளேன். அந்தப் புத்தகத்தில் இந்தச் செய்திகள் எல்லாம் இடம் பெறும்.

அருணகிரி: ஐயா, எப்போது தமிழகத்துக்கு வந்தீர்கள்?

கனகரெட்ணம்:   நான் கண்டியில் இருந்தபோது, தமிழ்ச் செல்வன் அவர்கள் என்னை அழைத்து, நீங்கள் சேகரித்து வைத்து இருக்கின்ற ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளிநொச்சிக்கு வந்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில், அங்கே சென்றேன். அப்போது என்னிடம் இருந்த ஆவணங்களை எல்லாம் மூன்று பார வண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்றேன். என்னை அழைத்துச் செல்வதற்காக உதவிக்குச் சிலரையும் தமிழ்ச்செல்வன் அனுப்பி இருந்தார். என்னுடைய வீட்டில் ஒரு துண்டுப் பேப்பரைக் கூட விட்டு விடக்கூடாது என்று சொல்லி எடுத்து வரச் சொல்லி இருந்தார்.

2004 ஆம் ஆண்டு, சமாதான காலத்தின்போது, இராணுவ முகாம்கள் இருந்த வழியாகத்தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்றோம். கிளிநொச்சியில், தமிழ் ஈழ ஆவணக் காப்பகத்தின் பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள். நான்கு பிள்ளைகள் எனக்கு உதவியாக இருந்தார்கள்.

அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இருந்து முருகர் குணசிங்கம் என்னிடம் வந்தார். கொஞ்சம் காசு கொடுத்து, என்னிடம் இருந்து ஒரு படியை வாங்கிக்கொண்டு போனார். அதை இலண்டனுக்குக் கொண்டு சென்று கோவிலில் வைத்து இருந்தார். அப்போது, அந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து இருந்தபடியால், அவர்கள் துப்பு அறிந்து, கோவிலுக்கு வந்து அந்த ஆவணங்களையெல்லாம் கைப்பற்றிக் கொண்டு போய்விட்டார்கள் என்று சொன்னார். அதற்குப்பிறகு, குணசிங்கம் மீண்டும் என்னிடம் வந்தார். இயக்கத்திடம் இருந்து ஒரு படியைப் பெற்றுக்கொண்டு சென்றார். அவரிடமும் இந்த ஆவணங்கள் உள்ளன.

கிளிநொச்சியில் நாங்கள் இருந்த இடம், சற்றுத் தொலைவில் உள்ள அக்கராயன் என்ற இடம். அந்தப் பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறி வந்தபொழுது, நாங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு முன்பு, தேசியத் தலைவரைக் காண வேண்டும் என்று எனக்கு விருப்பம். 2008 ஆம் ஆண்டு, தமிழ் ஈழக் காவல்துறைத் தலைவர் நடேசன் என்னை அழைத்துக் கொண்டு, தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தலைவரிடம் அனுமதி பெற்றுச் சென்றேன். அங்கே ஒரு வாரம் இருந்துவிட்டு இங்கே வந்தவன், திருச்சியிலேயே இருக்கிறேன். இலங்கைக்குப் போனால் என்னைக் கைது செய்யக் கூடும். ஒரு தலைமறைவு வாழ்க்கை போலத்தான் இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.

இங்கே உங்களுக்கு எந்தச் சிரமங்களும் இல்லை. அங்கே நாங்கள் கஷ்டப்பட்டுப் போராடிக் கொண்டுதான் இருந்தோம். இடைப்பட்ட காலங்களில் ஏழெட்டு முறை தமிழகத்துக்கு வந்து சென்ற நான், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்கேயே இருக்கின்றேன். தமிழ்நாடுதான் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். நாங்கள் தமிழகத்தில் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்? வெறுமனே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அவ்வளவுதான்.

அருணகிரி:கிளிநொச்சிக்கு நீங்கள் கொண்டு சென்ற ஆவணங்கள் எல்லாம் என்னவாயிற்று?

கனகரெட்ணம்: அது ஒரு பெரிய கேள்வி. அவற்றையெல்லாம் அங்கே வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. 1839 ஆம் ஆண்டு முதலான ஆவணங்களை நான் சேகரித்து வைத்து இருந்தேன். அவற்றையெல்லாம் கிளிநொச்சியில் ஒரு கண்காட்சியாக வைத்தேன். நடேசன்தான் திறந்து வைத்தார். இராணுவம் நெருங்கி வந்தபொழுது, இயக்க ஆவணங்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. எனவே, வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வேறு இடங்களுக்குக் கொண்டு போனார்கள். அப்போது அதற்குப் பொறுப்பாக இருந்தவரும், அதை எடுத்துக் கொண்டு போனவரும் போராளிகள்தாம். அவர்களால் தொடர்ந்து வைத்து இருக்க முடியாமல் எரித்து விட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். இதில் பெரிய மனக்கஷ்டம் என்னவென்றால், இலங்கையில் தமிழில் வெளிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளின் ஒரு படியை நான் சேகரித்து வைத்து இருந்தேன். அது மட்டும் அல்ல. 1980 ஆம் ஆண்டு பண்பாட்டு இயக்க மாநாட்டுக்காக, மொரீஷியஸ் தீவுகளுக்குச் சென்று இருந்தேன். அப்போது, அந்த நாட்டில் வெளிவந்த தமிழ் சஞ்சிகைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தேன்.

உலகில் தமிழர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்றால், எல்லோருடைய கண்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர், கூடுதலாகச் சொன்னால் பர்மா என்றுதான் தெரிகிறது. ஆனால், குவாட்லோப் தீவிலும், கரீபியன் தீவுகளிலும் தமிழர்கள் இருக்கின்றார்கள். இங்கிருந்து ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள். கடற்கரையில் அவர்கள் வந்து இறங்கிய இடத்தில் ஒரு நினைவுத்தூணை  நிறுவி இருக்கின்றார்கள். அந்தப் படமெல்லாம் தமிழகத்தில் எந்த ஏட்டிலும் அச்சிடப்பட்டது இல்லை. நான் இணையத்தில் தேடி எடுத்தேன். இதை இந்தக் குரும்பசிட்டி கணகரெட்ணம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. உங்களாலும் செய்ய முடியும், ஈடுபாடு இருந்தால்!

ஃபிஜியில் அப்பா பிள்ளை இருந்தார். அங்கே, ‘சங்கம்’ என்று ஒரு பத்திரிகை. அதையும் எரித்து விட்டார்கள். அந்தத் தீவுகளில் உள்ள வட இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘நாம் எல்லோருமே இந்தியர்கள்தானே? நாம் ஒரே அமைப்பாக இருப்போம். நீங்கள் ஏன், தனியாக அமைப்பு வைத்துக் கொள்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். இப்படியாகத் தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.

அருணகிரி: ஃபிஜி தீவுகளுக்குச் சென்று வந்த சிலர் எழுதிய தமிழ் நூல்களை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் படித்தேன். கோவை ம.ரா.பொ. குருசாமி அவர்களுடைய மூத்த சகோதரர், ஃபிஜி தீவுகளில் இந்து சங்க அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றார்.

கனகரெட்ணம்:  அங்கு மட்டும் அல்ல, வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களின் இப்போதைய தேவை என்னவென்றால், தமிழ் ஆசிரியர்கள்தான். தெற்கு ஆப்பிரிக்காவில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். உலகின் பல நாடுகளில் தமிழர்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அண்மையில், ‘மொரீஷியஸ் தீவுகளுக்கு இந்தியர்கள் வந்து இறங்கிய 150 ஆவது ஆண்டு விழா’ என்று கொண்டாடினார்கள். ஒரு வாரமாகக் கொண்டாட்டங்களை நடத்தினார்கள். ஆனால், நமது பண்பாட்டு இயக்கத்தைச் சேர்ந்த கங்கணமுத்து என்ற தஞ்சாவூர்க்காரர் சொன்னார்; ‘நீங்கள் 150 ஆண்டு விழா கொண்டாடுகிறீர்கள். தமிழர்களாகிய நாங்கள் இந்த மொரீஷியஸ் தீவுகளுக்கு வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன’ என்பதைச் சொல்லி, அதற்கான ஆவணங்களையும் கொடுத்தார்.  அதற்குப் பிறகு அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். நான் அவரைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவரது படத்தையும் வைத்து இருக்கின்றேன்.

நான் இப்போது இலங்கைத் தமிழன் என்ற முறையில் பேசிக்கொண்டு இருக்கவில்லை. உலகத் தமிழனாகத்தான் கருதிக் கொண்டு பேசுகிறேன். அப்படிப்பட்ட குட்டி நாடுகளில் இருக்கின்ற தமிழர்களுக்கு, தமிழகத்தில் இருந்து உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும், இரண்டு கார்கள் நின்றுகொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது. ‘தையல்நாயகி’ என்ற பெயரை ‘தாய்நாய்’ என்று அழைக்கின்றார்கள். அப்படித்தான் அங்கே தமிழ் பிழைத்து இருக்கின்றது.

குவாட்லோப் தீவுகளுக்குத் தந்தை தனிநாயகம் அடிகளார் சென்று பார்த்து, அவர்கள் தமிழ் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் பழங்காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். நளன் தமயந்தி, இராமாயணம், இரண்ய வதம் என அப்படிப்பட்ட நாடகங்கள் நடித்து, பாடிக் காட்டி இருக்கின்றார்கள். கோலாட்டம், கும்மியாட்டம் எல்லாம் ஆடிக்காட்டி இருக்கின்றார்கள். கரீபியன் தீவுகளில், மெட்னிக் தீவு என்று ஒரு தீவு இருக்கின்றது.  அங்கே, இன்றைக்கும், ‘வள்ளியம்மை பஸ் கம்பெனி’ என்று ஒரு கம்பெனி இருக்கின்றது. ஆனால், அவர்களுக்கும் தமிழ் தெரியாது. பிரெஞ்சு நாட்டில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். பெண்கள்தாம் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றார்கள். அந்த முறையில், பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த அந்தத் தீவுகளில் உள்ள தமிழர்கள் அந்தப் பெயரை வைத்து இருக்கின்றார்கள்.

தமிழர்கள் எங்கே சென்றாலும், அங்கெல்லாம் வட இந்தியர்களின் நெருக்குதல் இருக்கின்றது. அந்தமானிலும் அப்படித்தான். அங்கே, சுப.கரிகாலன், ‘அந்தமான் முரசு’ என்ற தமிழ் நாளேட்டை நடத்திக் கொண்டு இருக்கின்றார். அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தும் வடநாட்டவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்திக்குத்தான் முதல் இடம். அவர்களையெல்லாம் பாதுகாக்கக் கூடிய தலைநாடாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும். உலகத் தமிழர் நலனுக்காகத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஏராளமான திட்டங்கள் உண்டு. இப்போது தமிழர்கள் குடியேறி உள்ள நாடுகளில் கூட, தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்க அவர் திட்டமிட்டு இருந்தார்.

அருணகிரி:போலத்தான் தமிழகத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பவர், தமிழில் வெளியான திரைப்படங்கள் குறித்த தகவல்கள், செய்திக் குறிப்புகள், துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் படங்களைத் தொகுத்து வைத்து இருந்தார். அதை நூலாக அச்சிடுவதற்குத் தமிழக அரசு ரூ 5 இலட்சம் நிதி உதவியும் வழங்கியது. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து அறிய விழைவோருக்கு அந்த நூல் ஒரு அருமையான கையேடு. விலை ரூ.500. அதுபோல, உங்கள் சேகரிப்புகளில் நீங்கள் எந்தவிதமான ஆவணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருக்கின்றீர்கள்?

கனகரெட்ணம்:  அரசியல் செய்திகளுக்குத்தான் முதல் இடம். முழுக்கமுழுக்க, தமிழர், கலை, பண்பாடு குறித்த செய்திகள், அயல்நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களது பிரச்சினைகள் குறித்த தகவல்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளேன்.

அருணகிரி:உங்களைப் போல வேறு யாரேனும் ஈழத்தில் இதுபோன்ற ஆவண சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனரா?

கனகரெட்ணம்:  நான் பல பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று, ‘உங்கள் பத்திரிகைகள் அனைத்தையும் மைக்ரோபிலிம் செய்யுங்கள்; வருங்காலத் தலைமுறையினர் நமது வரலாறைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்’ என்று சொன்னேன். ஒருவருக்கும் அதில் அக்கறை இல்லை. இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு உணர்வு வேண்டும். நாமாக யாரையும் செய் என்று திணிக்க முடியாது. நீங்கள் இப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்து என்னைப் பேட்டி எடுப்பது போல, உங்கள் மகனோ, மகளோ செய்வார்களா?  உறுதியாகச் சொல்ல முடியாது.

அருணகிரி: ‘ஈரோட்டுப் பெரியாருக்கு வாரிசு, காஞ்சிபுரத்து அண்ணாதுரை என்பார்கள். அதுபோல, உங்களது ஆவண சேகரிப்புக்கு வாரிசு, வேறு எங்கிருந்தோதான் வருவார்.’

கனகரெட்ணம்:  நான் இந்தப் பணியில் மிகவும் துன்பப்பட்டு உள்ளேன். பணத்தைச் செலவழித்து உள்ளேன். அரசாங்க வேலையில் இல்லாததால்தான் என்னால் இந்த ஆவண சேகரிப்பு பணியைச் செய்ய முடிந்தது. இவற்றைக் கிளிநொச்சிக்குக் கொண்டு போனதற்கு இன்னொரு காரணம், கண்டியில், கிழமைக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு இரண்டு முறை, பத்துப் பதினைந்து போலீசார் என் வீட்டுக்கு வருவார்கள். உள்ளே நுழைந்து, என்ன ஏது தேடிப் பார்ப்பார்கள். ஒருமுறை ஆவணங்கள் அனைத்தையும் காவல்நிலையத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஒரு வாரம் வைத்து இருந்து சோதித்துப் பார்த்தார்கள். இதற்காகவென்றே கொழும்பில் இருந்து ஒரு சிங்கள அதிகாரி வந்தார். அவரும் பார்த்தார்.

அவர் சொன்னார்: ‘நான் ஒரு அரசாங்க அதிகாரி என்ற முறையில் அல்லாமல், தனிப்பட்ட முறையில் சொல்லுகிறேன்: நீங்கள் செய்வது ஒரு சிறந்த பணி. இதை விடாமல் செய்யுங்கள். எங்களைப் போன்றவர்கள் வந்து தொந்தரவு கொடுப்பார்கள். அதையெல்லாம் சட்டை செய்யாதீர்கள்’ என்றார். அப்படிப்பட்ட பாராட்டுகளும் வந்தன.

இதற்கு இடையில், என்னை ஒரு வாரம் ரிமாண்ட் கைதியாக வைத்து இருந்தார்கள். காரணம், என் வீட்டில் நான் வைத்து இருந்த ஒருபோட்டோ ஆல்பத்தில், எனக்கு நடைபெற்ற ஒரு பாராட்டு விழா படத்தை வைத்து இருந்தேன். அந்தப் படத்தில் தமிழ்ச்செல்வனும் இருந்தார். அந்த விழாவுக்கு அவரை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அந்த நேரத்தில் அவர் எங்களுக்குக் கடவுள் மாதிரி. இந்தப் படத்தைப் பார்த்த உடனே, ‘நீ எல்.டி.டி.ஈ. ஆள்தான்’ என்று என்னை முத்திரை குத்தி உள்ளே தள்ளி விட்டார்கள். மேலும் நான் தமிழர் வரலாறு குறித்த ஆவணங்களைச் சேகரிக்கிறேன் என்றால், அது சிங்களவர்களுக்கு எதிரான செயல் என்றே அவர்கள் கருதினார்கள்.  மனித உரிமைகள் அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் என் மனைவி வேண்டுகோள் விடுத்ததன் பேரில் அவர்கள் வந்தார்கள். ‘கனகரெட்ணம் ஒன்றும் குற்றவாளி அல்ல. அவர் மீது கை வைக்காதீர்கள்’ என்றார்கள். சிறைக்குள் இருந்த  ஒரு வாரமும், சிமெண்ட் தரையில்தான் படுத்துக் கிடந்தேன். அந்தச் சிறிய அறைக்கு உள்ளேயே கழிப்பு அறை. சித்திரவதைதான். இலங்கையில், தமிழன் என்று சொன்னாலே சிறை, சித்திரவதை, அடி, உதை  இதுதான் நிலைமை.

அருணகிரி: நீங்கள் சேகரித்து வைத்து இருக்கின்ற ஒரு ஆவணத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு என்ற செய்தியையும் வைத்து இருக்கின்றீர்கள். இலங்கை அணியிலும் அப்படித்தானே?

கனகரெட்ணம்:  ஆமாம், அப்படித்தான். ஆனால், முத்தையா முரளிதரனை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. அவர் கண்டிக்காரர். அவரது தந்தையார், ‘லக்கி லேண்ட்’ என்ற பிஸ்கெட் கம்பெனி நடத்துகிறார். அவர் மலைநாட்டு சமூகத்தவர். வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் பிரச்சினையில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. 

காணாமல் போனவர்களின் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம் பெற நான் விரும்பவில்லை. ஆனபடியால், சில செய்திகளைச் சொல்ல முடியவில்லை.

நான் சிறுகக் சிறுகப் பணத்தைச் சேகரித்து ஒரு வீட்டைக் கட்டினேன். அங்கே இப்போது ஆடு, மாடுகள் மேய்கின்றன. எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், கனடாவின் டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் (மெடிசன்) பணி ஆற்றுகிறார். இரண்டாவது மகள், நோர்வே நாட்டில் வசிக்கிறார். ஒரு பொறியாளரைத் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.  ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர்.

கனடா, நோர்வே, சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், ரீ யூனியன் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்து உள்ளேன். மற்றபடி, ஆவணங்கள் சேகரிப்பிற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன்.  நாட்டு அபிமானம் வேறு; உலகத் தமிழர் மீதான அபிமானம் வேறு. அவையெல்லாம் இருப்பினும், நான் என்னுடைய சொந்த கிராமத்தின் மீது கொண்ட அபிமானத்தால்தான், என்னுடைய பெயரில் என் ஊரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு இருக்கின்றேன்.

அருணகிரி:அதில் தவறு இல்லை. வைகோ அடிக்கடி மேடைகளில் குறிப்பிடுவார். ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று சொன்ன பூங்குன்றன்கூட, அவரது சொந்த ஊரின் கணியன் என்பதையும், தனது பெயரோடு சேர்த்துக் கொண்டார் என்று. அதுபோல, உங்களது நிலைப்பாடு சரிதான்.

கனகரெட்ணம்:  ஆமாம். சொந்த கிராமத்தின் மீதே பற்று இல்லாதவனுக்கு, நாட்டுப் பற்று எப்படி வரும்?

இந்தப் படங்களைப் பாருங்கள். குரும்பசிட்டியில் நாங்கள் கைவிட்டு விட்டு வந்த வீட்டில், இப்போது உள்ளுக்குள்ளேயே மரங்கள் வளர்ந்து விட்டன. இந்த வீட்டைக் கட்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்? கண்டியில் வேலை செய்து கொண்டு இருந்த நான், ஒவ்வொரு வார இறுதியிலும், யாழ்ப்பாணத்துக்குப் போவேன். கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் 300, 350 மைல். சனிக்கிழமை அரை நாள் வேலை என்பதால், அன்றைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை இரவே அங்கிருந்து புறப்பட்டு அதிகாலையில் யாழ்ப்பாணத்துக்கு வந்து விடுவேன். மூன்று மூடை, நான்கு மூடை சிமெண்ட் வாங்கிக் கொண்டு போய், அதற்கு ஏற்ற வகையில் இரண்டு நாள்களும் நானே கட்டுவேன். பிறகு, திங்கள் கிழமை காலையில், கண்டியில் வேலைக்கு நிற்க வேணும். அப்படி, பல ஆண்டுகளாக, சொல்லப் போனால் பத்து ஆண்டுகளாக நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த வீட்டை, ஒரே குண்டு போட்டு நொறுக்கி விட்டானய்யா. கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, பனங்காடுகள் வழியாக ஓடி உயிர் தப்பி ஓடி வந்தேன்.

குரும்பசிட்டி கிராமம் என்பது, பலாலி விமான தளத்துக்கு அருகாமையில் உள்ளது. எனவே, அதை விரிவாக்குவதற்காகத் திட்டமிட்டு, அங்கிருந்த மக்களை, இப்படிக் குண்டு போட்டு அச்சுறுத்தி விரட்டி அடித்தார்கள். ஒருகாலத்தில் அந்த விமான தளத்தில் இருந்து, திருச்சிக்கு விமானங்கள் வந்து சென்றன. அப்போது கட்டணமும் குறைவுதான். தமிழகத்துக்கு வந்து போவது சாதாரணமாக இருந்தது.

அருணகிரி: ஆமாம். எழுத்தாளர் யாழூர் துரை இதுபற்றிச் சொன்னார். திருச்சி-யாழ்ப்பாணம் விமானக் கட்டணம் 105 ரூபாய் என்றும், அப்படிப் பலமுறை அங்கிருந்து வந்து, டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி. ஸ்ரீ நிவாஸ், பி. சுசீலா உள்ளிட்ட பல திரைப்படக் கலைஞர்களை  பேட்டி எடுத்ததையும் பற்றி என்னிடம் சொன்னார்.

கனகரெட்ணம்: எங்கள் கிராமத்தில் முழுக்க முழுக்கத் தமிழர்கள்தான். ஒரு சிங்களவர் கூடக் கிடையாது. எப்போதாவது, பான் விற்பதற்காக ஒன்றிரண்டு சிங்களவர்கள் வீதிகள் வழியாகப் போவார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு அங்கேயும் சிங்கள ஆள்களைக் கொண்டு வந்து குடி அமர்த்துகிறார்கள். இப்போது வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தமிழ் ஆள்களுடைய வீடுகளைக் குறிவைத்துக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள். அங்கே கொண்டு வந்து சிங்களவர்களைக் குடி வைக்கின்றார்கள். அது, மாவை சேனாதிராசாவினுடைய தொகுதி. அவரும் எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். ஆனால், அவர்கள் எப்படியும் தமிழர்களின் நிலங்கள் வீடுகளைப் பிடுங்கி விட வேண்டும்; சிங்கள ஆள்களைக் கொண்டு வந்து திணித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள்.

அந்தக் காணியை வைத்துப் பாதுகாக்க முடியாது. எனவே, என் மனைவி அந்தக் காணியை விற்றுவிடலாம் என்கிறார். என்னால் முடிவு எடுக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போது நான் விற்றால், சிங்கள ஆள்கள் கூட வந்து வாங்குவார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால், அப்படியே வைத்துக் கொண்டு இருக்கின்றேன். இதையெல்லாம் சொல்வதால் எனக்குப் பிரச்சினைகள் வரலாம்.

அருணகிரி: கடைசியாக நாட்டை விட்டு எப்போது வெளியே வந்தீர்கள்?

கனகரெட்ணம்: 90 ஆம் ஆண்டிலேயே எங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அகதிகளாக, இரண்டு மூன்று கிராமங்களில், குண்டு வீச்சுகள் இல்லாத பகுதிகளுக்குப் போய் இருந்தோம். அங்கிருந்து கண்டிக்குப் போய், அங்கே என்னுடைய வீட்டில் இருந்தோம். பிறகு கிளிநொச்சிக்குச் சென்றேன். 2008 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தேசியத்தலைவரைச் சந்தித்தேன். அவரிடம் விடைபெற்றுக் கொண்டுதான், தெற்கு ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இங்கே வந்தேன்.

அருணகிரி:திருச்சிக்கு எப்படி வந்தீர்கள்? இங்கே உறவினர்கள் இருக்கின்றார்களா?

கனகரெட்ணம்: இங்கே எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால், இது எங்கள் ஊரைப் போல, என் மாமன் ஊரைப் போல. இந்த வீட்டுக்கு மாத வாடகை 5000 கொடுக்கின்றோம். சென்னையில் என்றால் 15000 கொடுக்க வேண்டியதிருக்கும். எனவே, இந்த ஊரைத் தேர்ந்து எடுத்து இங்கே வந்தேன்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் பெரும்பாலானவர்கள், இந்தத் திருச்சி வழியாகத்தான் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். இன்னமும் நிறையப் பேர் திருச்சியில் வசிக்கின்றார்கள். எங்களுடைய பிள்ளைகள் அனுப்புகின்ற தொகையை வைத்துத்தான், இங்கே வாழ்க்கையைக் கடத்திக் கொண்டு இருக்கின்றோம். கனடாவுக்குப் போய்விடலாமா என்றும் ஒரு யோசனை இருக்கின்றது. இப்போது என்னிடம் மிச்சம் மீதி இருக்கின்ற ஆவணங்களை அங்கே கொண்டு போய்ப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் நினைக்கின்றேன். அல்லது மேலே இருந்து அழைப்பு வந்தால், மேலே போக வேண்டியதுதான். வயதாகி விட்டது இல்லையா?

அருணகிரி: ஐயா, நீங்கள் திரும்பவும் ஈழத்துக்குச் செல்ல விரும்புகின்றீர்களா?

கனகரெட்ணம்: அங்கே போனால் பிரச்சினைகள் வரக்கூடும் எனக் கருதித்தான் இங்கே இருந்து கொண்டு இருக்கின்றேன். இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று அழித்துவிட்ட அந்த நாட்டில் நான் போய் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? (விம்முகிறார்) இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? என்று காசி ஆனந்தனிடம் கேட்டேன். அவர் சொன்னார்: ‘நம்பிக்கையோடு இருப்போம்; நமக்கும் ஒரு விடிவு வரும்’ என்றார்.

 நேர்காணல்: எழுத்தாளர் அருணகிரி

விக்கிப்பீடியாவில் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்.