November 29, 2006

என்னெஸ்கே நினைவுகள்


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். 49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். 150 படங்களுக்கு மேல் நடித்து சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். "பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்; பாலில்லாமல் சிசு பதறுவதைப் பார்" போன்ற கருத்துக்களைக் கூறியவர். அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது நினைவாக சில அரிய புகைப்படங்களும் "சகுந்தலை" படத்தில் செம்படவர்களாக நடிக்கும் கிருஷ்ணனும், டி. எஸ். துரைராஜும் பாடும் பாடல் வரிகளும் உங்கள் பார்வைக்கு:



வெகு தூரங் கடல் தாண்டி போவோமே
மீன் பிடிப்போமே
கட்டு மரம் கட்டிக்கடல் எட்டு மட்டும்
நெட்டித் தள்ளிப்போய்
சுழற் காற்றடித்தாலும் கருமேகம்
கூடி மழை யோடிடித்தாலும்
மிக நஞ்செனவே மிஞ்சி இருள்
தானிருந்தாலும்
அதில் கொஞ்சமுமே நெஞ்சினிலே
அஞ்சிட மாட்டோம்

எனதண்ணன்மாரே இனிவேகமுடன்
கூடி வலை வீசிடுவோமே
நல்ல தூண்டில் முள்ளோடு பல
கயிறோடே தூக்கியெறிந்தே இழுத்தோடும்
நல்ல குறா சுறா உள்ளான் முதல் கெளுத்தி மீனோடு
கடு விரலால் இரால் வாளை எல்லாம் வளைத்திழுத்தோடி
இப்போ கொண்டு வந்தே விலை
கூறி விற்றே காலமதை நாம் கழிப்போமே.