December 18, 2017

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர் (திசம்பர் 18, 1822 - திசம்பர் 5, 1879) அவர்களின் 194-வது பிறந்தநாள் இன்று 2017 திசம்பர் 18.

தமிழகத்தில் இருந்து வெளியான 1939 ஆம் ஆண்டின் "சக்தி" இதழில் இக்கட்டுரை வெளிவந்தது.
 
 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
1822-1878

(ஸ்ரீ ஸி. எஸ். ஜகதீசசுந்தரம் பிள்ளை)


ழநாட்டின்கண் செம்மை நிறைந்த, புலமை மலிந்த, சைவம் பழுத்த, தமிழ் வளர்த்த சைவப் பெரியார் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரே. தமிழர்கள் மாண்பினையும், நிலையினையும், வாழ்க்கையினயும் உயர்த்திச் சமயப் பற்றுள்ளவர்களாக்கின உத்தமத் தமிழ்நாவலர் இவரே. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற மூதுரையைத் தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு நம் தமிழ் நாட்டிற்காக உழைத்த மகான், நாவலர் பெருமான் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

உரைநடை நூல்கள் மிகக் குறைவாயிருந்த அக்காலத்தில் - எடுத்த தெல்லாம் செய்யுள் வடிவிலேயே அமைந்து கிடந்த அக்காலத்தில், சிறுவர் வகுப்புக்குப் புத்தகங்களெழுதிச் சிறுவர்களையும், சொல்வன்மை பொருள் வன்மை மிகுந்த நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் முதலிய புராணங்களைக் கத்திய ரூபமாக்கிப் பெரியோர்களையும் மகிழச் செய்து தமிழை வளர்த்துவந்தார். இம்மட்டோ இறந்துபட்டொழியவிருந்த ஏட்டுப் பிர திகளிலுள்ள அநேக நூல்களைப் பரிசோதித்து வெளியிட்டார். அன்றியும் அநேக நூல்களுக்கு எளிதிற் பொருள் விளங்கப் புத்துரை செய்தும் சைவ மதத்தை வளர்த்தற்கு ஆவசியகமான நூல்களைத் தாமே இயற்றியும் வெளிப்படுத்தினார்.

ஆங்கில பாஷையிலே காணப்படுகிற கமா, ஸெமிகோலன், கோலன், டாஷ், புல்ஸ்டாப் முதலிய, வாக்கிய லக்ஷணத்திற்கு மிகவும் இன்றியமையாத, குறியீடுகளை முதன்முதலில் தமிழ் வசன நடையில் நன்கு உபயோகப் படுத்தினவர் இப் பேரறிஞரே. நாவலர் காலத்துக்கு முன்னர் குறியீட்டிலக்கணங்கள் தமிழ் வசனங்களிலே செவ்வனே இடம் பெறாதிருந்தன. வி. கோ. குரியநாராயண சாஸ்திரியாரும் தமது 'தமிழ் மொழி வரலாறு' என்னும் நூலின் கண்ணே,

''ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசனமுற்றதாகக் காணப்படுகிற குறியீட்டிலக்கணம் தமிழின்கண் முழுதுந் தழுவிக் கொள்ளப்படுதல் வேண்டும். அதனால் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியு முண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின்கண் ஆர்வமுண்டாகின்றது. இக் குறியீட்டிலக்கண மெல்லாம் வசனநடை கைவந்த வள்ளலாராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களாலே முன்னரே மேற்கொண்டு வழங் கப்பட்டுள்ளன'' என்று நாவலரவர்கள் வசனச் சிறப்பினைச் சிறப்பித்துப் போந்தார்.

நம் நாவலர் இயல்பான ஆற்றொழுக்காகச் செல்லும் உரைநடை கைவரப் பெற்றவர். அவர் உரை நடை புல்லறிவாளரும் எளிதில் வாசித்து உணர்ந்து கொள்ளும்பொருட்டுச் சந்தி விகார மின்றிச் சொற்கள் பிரிக்கப்பட்டிருக்கும். அவருடைய தீஞ்சுவைத் தமிழ்நடையை என்னென்பது!

சந்தானகுரவர் நால்வரும் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபஃது, சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சைவசித்தாந்த சாத்திரங்களை அருளிச் செய்து, எல்லாச் சமயங்களையும் கடந்து நின்றது சித்தாந்த சைவ சமயமென்று சாதித்தார்கள்.
அதன் பின்னர், நமச்சிவாய தேசிகர், சிவஞான முனிவர், மாசிலாமணித் தேசிகர், ஞானப்பிரகாச முனிவர், குமரகுருபர சுவாமிகள் முதலிய மகான்கள் பஞ்ச கிருத்தியங்களையுஞ் செய்யும் கர்த்தாவாகிய சிவபெருமானே சர்வலோக நாயகரென்றும், அவரை வழிபடு மார்க்கமே முத்திமார்க்க மென்றும் அவரை வழிபடும் அடியார்களே மெய்யடியார்களென்றும் தெளிந்து, அவருடைய பெருமையைத் தங்கள் நூல்களாலும் உரைகளாலும் உணர்த்தி அடியார்களுக்குப் போதித்துச் சென்றனர்.

நாவலர் காலத்தில் சைவ சமயிகளுட் சிலர் பரமத நூல்களைக் கற்றுத் தங்கள் வாணாட்களை வீணாட்களாகக் கழித்து ‘கண்டதே காட்சி கொண்டதே கோலமாக’ இருந்து வந்தனர். இதனைக் கண்ட நாவலர் பெருமான் மனம் பொறாது அவர்களுக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த வெண்ணி, பரசமயிகளோடு சமய வாதங்கள் செய்து வென்றார். பரசமயத்திலே புகுந்தவர்களுக்கும், புகவெண்ணியவர்களுக்கும் உண்மைச் சமயமாகிய சைவ சமயத்தைப் போதித்து அவர்களைத் திருத்தினார். இதுவுமன்றி, பற்பல விடங்களுக்குச் சென்று பல்லோர் நிறைந்த அவைக் களத்தின்கண், சபைக்குப் பணிவுடைமையும் கம்பீரமும் முகத்திற் றோன்ற, இனிய ஓசையுடன் சொற்சுவையும் பொருட்சுவையும் தொடை நயமும் அமைய, எதுகை, மோனை, மடக்கு முதலிய செய்யுளி லிலக்கணங்களை இடையிடையே செறித்து, அமிர்ததாரை வர்ஷித்தது போலச் சைவசித்தாந்த உண்மைகளைப் பிரசங்கித்தார்; தேவாலயந் தோறும் புராணப் பிரசங்கமுஞ் செய்தார். இவருடைய முதல் பிரசங்கம் பிலவங்க வருடம் மார்கழி 18உ (ஜனவரி 1848) சுக்கிரவாரத்தில் வண்ணார்பண்ணையிலுள்ள சிவாலயத்திலே நடந்தது. அன்று முதல் ஒவ்வொரு சுக்கிரவாரமும் நியமமாகச் சைவப் பிரசங்கஞ் செய்து வந்தார்.

கேட்டார் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

என்ற பொய்யாமொழியை பொய்யாமொழியாகச் செய்துள்ளார்.

நாவலர் காலத்தில் தென்னிந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களெல்லாம் ஒவ்வொரு உபாத்தியாயரால் தெருத் திண்ணைகளிலும் கொட்டில்களிலும் வைத்துப் பிள்ளைகளின் சம்பளம் பெற்றுக்கொண்டு படிப்பிக்கு மிடங்களாயிருந்தன. படிப்பிக்கப்படும் நூல்களோ ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி முதலிய நூல்களும் சேந்தன் திவாகரம், எண்சுவடி முதலிய கருவி நூல்களுமேயாம். கற்பிக்கும் ஆசிரியர்களோ உபாத்தியாயரின் பிரதிநிதிகளாகிய சட்டாம்பிள்ளைகளே யாவர். சைவசமய வொழுக்க நூல்கள் அங்கே கற்பிக்கப் படவில்லை. சைவ சமயிகள் சைவ நூல்களைக் கற்பதில்லை. கற்றறிந்த சிலர், யாவரும் எளிதில் அறிந்து கொள்ளும்படி சமயாசாரங்களைப் பிறருக்கு இலகுவில் கற்பிப்பதில்லை. சிறுவராயிருக்கும் போது இவைகளை யெல்லாம் அனுபவித்துணர்ந்த இப்பெருந்தகையாளர், தமிழ் நாடெங்கும் பாடசாலைகளைத் தாபித்து, பிள்ளைகளுக்குச் சமய நூல்களையும், அவைகளுக்கு வேண்டும் உப நூல்களையும், லைகீக நூல்களையும் கற்பித்தல் அவசியமென்றெண்ணி, கற்றறிந்த பெரியோர்களை உபாத்தியாயராக நியமித்து, யாழ்ப்பாணத்திலே வண்ணார்பண்ணையில் இலவச வித்தியாசாலை யொன்றைத் தாபித்தார். அது சைவப் பிரகாச வித்தியாசாலை யென்னும் பெயருடன் விளங்குவதாயிற்று. அச்சமயத்தில் வர்த்தகசாலை யொன்று விற்பனைக்கு வந்தது. அதனைத் தம்முடைய வித்தியாசாலையின் அபிவிருத்திக்காக வாங்க விரும்பினார். கையில் போதிய பணம் இல்லை. அதனால் மனம் வருந்திப் பூசையிலே தமது உடையவரை நோக்கி யழுது,

"மணிகொண்ட கடல்புடைகொ ளிந்நாட்டி
      லுன்சமய வர்த்தன மிலாமை நோக்கி
மகிமை பெறு நின்புகழ் விளங்குவான் கருதியிம்
      மைப்பொருட் பேறோழித்தே
கணிகொண்ட வித்தியா சாலைதா பித்திவ்வூர்க்
      கயவர்செயு மிடர்கள் கண்டுங்
கல்லூரி யதைநடாத் தப்பொருட் டுணைசெயக்
      கருதுவோ ரின்மை கண்டும்
அணிகொண்ட சாலைய தொழிப்பினஃ
      துனையிகழு மந்நிய மதத்தர்சாலை
யாமென நினைந்தெனெஞ் சற்பகற்
      றுயருற லறிந்து மொரு சிறிதுமருளாத்
திணிகொண்ட நெஞ்சவினி நின்முன்றா
      னுயிர்விடுத றிண்ணநீ யறியாததோ
சிறியேன தன்பிலர்ச் சனைகொளழ
      கியதிருச் சிற்றம் பலத்தெந் தையே."

என்றொரு செய்யுளைச் சொன்னார், என்ன ஆச்சரியம் பாருங்கள்! அவர் அழுது புலம்பின அன்றே உதாரகுணம் படைத்த பிரபுவாகிய நன்னித்தம்பி முதலியார் என்பவர் இவ் வித்தியாசாலைக்காக அனுப்பியிருந்த நானூறு ரூபாயும் வந்து சேர்ந்தது. அப் பணத்தைக் கொண்டு வர்த்தகசாலையை விலக்கு வாங்கினார், பின்னும் யாழ்ப்பாணத்தார் உதவிய பொருள் கொண்டு சிதம்பரத்திலும் ஒரு சைவப் பிரகாச வித்தியாசாலை ஏற்படுத்தினர். இவருடைய பெரு முயற்சியினாலே யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத் துறை, கந்த மடம், பருத்தித் துறை, மாதகல், இணுவில் முதலிய விடங்களில் வித்தியாசாலைகள் ஏற்படுத்தப் பட்டன. தமிழ் மக்களுக்கு இவரால் ஏற்பட்ட நன்மைகள் அளவில. சைவ சமயத்தின் உண்மைகளைப் போதித்தும், பிரசுரித்தும், பிரசாரஞ் செய்தும், மற்றும் பலவாறு தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்மக்கள் முன்னேற்றத்திற்குமாக இப்பெருந்தகையார் ஆற்றியுள்ள தொண்டுகள் கணக்கில்லாதனவாகும். இங்கனம் இப் பெருமகனார் தமிழுக்காக ஆற்றின தொண்டினை நினைக்குந்தோறும், தமிழன்னையின் தவப்புதல்வர் என்றும், சமயத்துக்காக உழைத்த உழைப்பினை உன்னுந் தோறும் சமய குரு என்றும் கொண்டாடுதல் கூடும்.

புலவர் கூற்று

நாவலரும் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் ஒரே காலத்தினர்; நட்புரிமையும் பூண்டவர்கள். ஒரு சமயம் நாவலர் தம் ஆர்வலராகிய பிள்ளையவர்களுடன் காவேரியில் ஸ்நானஞ் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது பொழுதோ அதிகாலை; காலமோ பனிக்காலம். பலருடைய தேகமும் குளிரினாலே விடவிட வென்று நடுங்கிற்று. நடுக்குறுதலைக் கண்ட பிள்ளையவர்கள் 'பனிக் காலம் கொடிது' என்று நாவலரைப் பார்த்து நவின்றனர். உடனே கலாவிநோதராகிய நாவலர் 'பனிக்காலம் நன்று' என்று விடையிறுத்தனர். இவருடைய வாக்கு நயத்தையும் விசேஷத்தையுமுணராத உடனிருந்த மாணவர்கள் இரு பிரிவினராகி, 'பனிக்காலம் கொடிது, ஜலகோஷத்தை உண்டாக்கும்' என்றனர் ஒரு சாரார். 'பனிக்காலம் நன்று, தேகத்தைக் குளிரச் செய்யும்; உஷ்ணத்தைத் தணிக்கும்’ என்றனர் மற்ருெரு சாரார். இங்ஙனம் அவர்கள் தத்தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களைக் கூறி வாதிப்பதைக் கண்ட நாவலர் என்னென்று வினவ, மாணவர் தம் ஏதுக்களைக் கூறினர்கள். நாவலர், 'நானும் பிள்ளையவர்கள் கூற்றையே வலியுறுத்திக் கூறினேனன்றிப் பிறிதொன்று மில்லையென்று தாம் கூறிய பதத்தை, பனிக்கு-ஆலம்-நன்று” என்று பதம் பிரித்துக் கூறினர்.

பனிக்கு ஆலம் நன்று பனியை விட விஷம் நல்லது. நாவலர் பெருமான் ஹாசியமாகவும் கருத்தொத்தும் உடனுக்குடனே பதிலுரைப்பதில் வல்லுநர் என்பது இதனால் வியக்தமாகிறது.

1939 'சக்தி' இதழில் வெளிவந்தது.

மூலம்: பசுபதிவுகள்

எனது ஆறுமுக நாவலர் வலைப்பக்கம்