அன்றாட வாழ்க்கையில் திருக்குறளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு விளையாட்டு. இது சிட்னியில் 1992 இல் நடந்த 5வது தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் இ.வி.சிங்கன் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. நீங்களும் விளையாடிப் பார்க்கலாமே.
தம்பி: அக்கா! உனக்குத் திருக்குறள் விளையாட்டு தெரியுமா?
அக்கா: குறள் விளையாட்டா?
தம்பி: தெரியுமா அக்கா! விளையாடுவோமா?
அக்கா: நான் தயார். ஆனால் உனக்குத் திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங்களின் தலைப்புகளும் மனப்பாடமாகத் தெரியுமா?
தம்பி: எனக்கு அறத்துப்பாலில் இருக்கும் 38 அதிகாரத் தலைப்புகள் தெரியும்.
அக்கா: அந்த அதிகாரத் தலைப்புகளை வைத்தும் விளையாடலாம். ஆனால் பொருட்பாலும் இன்பத்துப்பாலும் தெரிந்தால் விளையாடுவது இன்னும் இன்பமாக இருக்கும்.
தம்பி: அவைகளைப் படிக்க வேண்டும். மிகவும் கடினமாக இருக்கிறதே!
அக்கா: அப்படிச் சொல்லாதே. படிப்பது கடினம் என்று சொன்னால், படிப்பது இன்னும் கடினமாகப் போய்விடும். படிக்க வேண்டும். படிப்பதைக் கவனமாகப் படிக்க வேண்டும். மனதை விட்டுப் போகாது. நான் ஒரு வழி சொல்கிறேன். அதைப் பின்பற்றிப் பார்.
தம்பி: சரி அக்கா! வழியைச் சொல் கேட்கிறேன்.
அக்கா: திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. இந்த 133 தலைப்புக்களையும் மனப்பாடம் செய்துகொள். 14 நாட்கள் போதும். நாளொன்றுக்குப் 10. அதைப் பாடம் பண்ணுவதற்கு, நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது.
தம்பி: நாள் 1-க்கு 10 நிமிடமென்றால் 14 நாட்களில் திருக்குறள் தலைப்புகள் அத்தனையும் மனப்பாடமாகி விடும் என்று சொல்கிறாயா?
அக்கா: அப்படித்தான்!
தம்பி: அக்கா, விளையாட்டைக் கொஞ்சம் சொல்லு பார்ப்போம்.
அக்கா: தலைப்புகள்: மனைவி, மக்கள், அன்பு, இன்சொல், அறிவு, அமைச்சு, நட்பு, குடி, சூது, பெரியாரைத் துணைக்கோடல், என்றெல்லாம் இருக்கிறது.
தம்பி: ஆமாம், இவைகள் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள தலைப்புகள்.
அக்கா: இப்போது உன் படிப்பைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால்
மூத்தவர்: தம்பி நாற்பதில் எப்படி? (40இல் எப்படி என்றால் தம்பி படிக்கிறானா? என்று பொருள். 40ஆம் அதிகாரம் கல்வி)
இளையவர்: 40 அவனுக்கு உண்டு. நாற்பத்தியொன்று மாதிரித் தெரிகிறானே (41 கல்லாமை அதிகாரம்)
மூத்தவர்: அதுவா, அவனுக்கு 42 இல்லை. அதனாலேயே 41 மாதிரித் தெரிகிறது. (அதாவது, படித்திருக்கிறானா, ஞானமில்லை. அதனாலேயே படிக்காதது மாதிரித் தெரிகிறான்)
தம்பி: ஆமாம் அக்கா. நல்ல சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. 133 தலைப்புகளையும் அறிந்து கொண்டால் உலகத்திலே உள்ள எல்லா சங்கதிகளையும் அதில் வைத்துக் கொண்டே பேசி விடலாம் என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். நாம் இதை நன்றாகப் படித்துவிட்டு இந்த விளையாட்டை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஓர் இயக்கம் அமைத்துப் பரப்ப வேண்டும்.
அக்கா: நல்ல யோசனைதான். அதை நடைமுறையில் செய். முதலில் நீ 133 அதிகாரங்களையும் மனப்பாடம் செய்.
தம்பி: ஆகட்டும் அக்கா, தங்கள் சித்தம் என் பாக்கியம்.
படித்ததில் பிடித்தது.
March 05, 2006
Subscribe to:
Posts (Atom)
