September 26, 2025

வி. கனகசபைப் பிள்ளை

 

வி. கனகசபைப் பிள்ளை

(1955 - 1906)

(அ. மு. பரமசிவானந்தம்)

தோன்றிய நாள் தொட்டுத் தெய்வத் தமிழ் மொழியைப் பல்லாற்றானும் ஓம்பி வளர்க்கும் பெரியவர்கள் அவ்வப்போது தோன்றி, வாழ்ந்து, தமிழின் வளம் பெருக்கி அதன் சீரிளமைத் திறங் குன்றா வகையில் தொண்டு செய்து வந்துள்ளனர். எத்தனையோ அறிஞர்தம் பெயர்கள் நம்மிடை தற்போது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமின்றித் தமிழ் வழங்கும் - இலங்கை, மலேயா போன்ற பிற நாடுகளிலும் அன்றும் இன்றும் தமிழ்ப் பயிர் ஓம்பும் புலவர்களும் புரவலர்களும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுள் சிறப்பாக நம் பாராட்டுதலுக் குரியவர்கள் யாழ்ப்பாணத் தமிழ் மக்களாவர்.

தமிழன் தன்னைப் பற்றியே பேசிப் பெருமை கொள்ள நினையாதவன். தன்னைத்தான் தாழ்த்திக் கொள்ளும் பண்பாட்டில் தலை சிறந்தவன். எனவே அவனது பெருமை வாய்ந்த முற்கால வரலாறுகளை யெல்லாம் அவன் எழுதிவைக்க விரும்பவில்லை. அந்தக் காரணத்தால் ஒருவேளை தமிழனது சென்ற காலச் சிறப்பு மங்குமோ என்று அஞ்சக்கூடிய நிலை ஏற்பட்டது. பிற நாடுகளெல்லாம் தம் பண்டைப் பெருமையைக் கூட்டியும் சேர்த்தும் ஏற்றமுற்படும் அதே வேளையில், தமிழன் தனக்கு இயற்கையாக உள்ள பெருமையை எண்ண மறந்தான். அந்த மறப்பைப்பற்றி உன் சென்ற காலச் சிறப்பு இது - என்று எடுத்துக்காட்ட முன்வந்த பெருமை இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாழ்ப்பாணப் புலவர் கனகசபைப்பிள்ளை அவர்களுக்கே உண்டு.

கனகசபைப்பிள்ளை அவர்கள் தமிழாசிரியர் அல்லர். தமிழ்த்துறையில் பணியாற்றியவருமல்லர். அவர் பணி அஞ்சலகத்தில் நடைபெற்றது. எனினும் தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற தூய எண்ணமே அவரை – “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்” - என்ற வரலாற்று நூலை எழுத வைத்தது. ஆம், அவர் மறைந்து இன்றைக்கு 45 ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுதிய அந்தப் பெருநூலே அவர்தம் பெருமையை வாழவைக்கின்றது. அவருடைய வாழ்க்கை வரலாற்றைக்கண்டு பின்நூல் வழிச்சென்று அவர் தொண்டின் சிறப்பை அறியலாம்.

ஏறக்குறைய இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன் கனகசபைப் பிள்ளையின் தந்தையார் விசுவநாதப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மல்லாகம் என்னும் ஊரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆங்கிலத் தமிழ்ப் பேரகராதி தொகுத்த மேலைநாட்டுச் செல்வர் வின்ஸ்லோ பாதிரியார் அவர்கள் விசுவநாதரை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததாகக் கூறுகின்றனர். பெர்சிவல் பாதிரியாருடன் வந்ததாகவும் கூறுவர்.

விசுவநாதர் ஆங்கிலத் தமிழ் அறிவு பெற்றவர். எனவே அவருக்கு சென்னைக் கல்வித்துறைத் தலைவர் அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது. வின்ஸ்லோ அவர்தம் ஆங்கிலத் தமிழ்ப் பேரகராதி வெளிவருவதற்கு அவர் பெரிதும் உதவினார். அத்துடன் விசுவநாதர் தாமே பள்ளிப்பிள்ளைகளுக்கென சில தமிழ் நூல்களை எழுதிப் புகழ் பெற்றார். சிறந்த தமிழ்ப் பற்றும் மொழித் தொண்டும் புரிந்த இவ் விசுவநாதரின் அருமை மைந்தரே கனகசபைப் பிள்ளை அவர்கள்.

25-5-1855-ல் சென்னை கோமளீசுவரன் பேட்டையில் கனகசபைப் பிள்ளை அவர்கள் பிறந்தார். இளமையிலேயே பிள்ளையவர்கள் மதிநலம் வாய்ந்தவராக இருந்தனர். இளைஞராய் இருக்கும்போதே இவர் பட்டம் பெற்றமையின் இவரைப் “பட்டதாரிப் பையன்” என அழைத்தனர். இவருடன் ஆனரபிள் ராமநாதன், சர் பொன்னம்பலம் முதலியார் சென்னை அரசாங்கக் கல்லூரியில் கல்வி பயின்றதாகக் கூறுவர். ஆங்கிலக் கல்லூரியில் பயிலும் நாளிலேயே பிள்ளை அவர்களுக்குத் தமிழ் மொழியில் தளராக் காதல் உண்டாயிற்று. அன்னைத் தமிழை தந்தையார் மூலம் நன்கு பயின்றார்.

பி.ஏ. பட்டம் பெற்றபின் வழக்கறிஞர் பயிற்சிப் படிப்பைத் தொடர்ந்து படித்து முடித்தார். அவ்வேளையில் அவருக்கு மணம் ஏற்பாடாயிற்று. அவர் தம் அம்மானாகிய டாக்டர் பொன்னையா பிள்ளை தம் மகள் செல்லம்மாளை அவருக்குக் கொடுக்க இசைந்தார். அவர் மதுரையில் பணியாற்றி வந்தார். 1876ல் பிள்ளை அவர்கள் மணவாழ்வில் புகுந்தார். மணவாழ்வை மேற்கொண்ட பிள்ளையவர்கள் தம் மாமனார் வீடாகிய மதுரைக்கே சென்றார். அங்கே சிலகாலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தே வழக்கறிஞர் பணியில் தொண்டாற்றினார். சிறிது காலம்தான் அங்கே பணியாற்றியிருந்திருப்பார் போலும். விரைவில் அவர் சென்னையை அடைந்து அஞ்சல் அலுவலகத்தே தம் பணியினை மேற்கொண்டார். சென்னை மாநில அஞ்சலகத் தலைவர் அலுவலகத்தே (Post Master General's Office, Madras) அஞ்சல் நிலைய மேற்பார்வையாளராக அவர் பணி செய்யத் தொடங்கினார். அவர் தம் ஊக்கமும் உழைப்பும் அவரை மேன்மேல் உயர்த்தி உயர்நிலை மேற்பார்வையாளர் - Supdt. of Post Offices - பதவிக்கு உரியவராக்கின. அவர்தம் பணிகள் அவரது தமிழ்த் துறைத் தொண்டுக்குத் துணை செய்தன. தமிழ் நாட்டு ஊர் தோறும் சென்று பலப்பல அலுவலகங்களைப் பார்வையிடும் பொறுப்பு பிள்ளை அவர்களுக்கு இருந்தது. அலுவலகங்களைப் பார்வையிட்டதோடு அமையாது, அவ்வவ்வூர்களில் என்னென்ன நூல்கள் ஏட்டுப் பிரதிகளில் உள்ளன என்று ஆராய்வார் பிள்ளை அவர்கள். டாக்டர் உ.வே. சாமிநாத ஜயர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளை அச்சேற்றியகாலம் அது. பிள்ளை அவர்கள் சேகரித்த பலபிரதிகளை அவருக்குக் கொடுத்து உதவினர். இன்னும் பிள்ளை அவர்கள் செல்லுமிடமெல்லாம் உள்ள கல்வெட்டுகளையும் பிறவற்றையும் ஆராயும் தொண்டையும் மேற்கொண்டிருந்தனர். அவர் மேலும் சிலகாலம் வாழ்ந்து, அலுவலகப் பணியிலும் ஓய்வு பெற்று இருந்திருப்பாரானால், பல அரிய ஆராய்ச்சி நூல்கள் மூலம் தமிழ் நாட்டு ஒளியை மங்கா வகையில் தூண்டி விளக்கமுறச் செய்திருப்பார்.

தன் அலுவலகப் பணியில் சிறிதும் வழுவினாரல்லர் பிள்ளை அவர்கள். அவர்தம் ஆற்றலும் அமைவும் கருதி அத்துறைத் தலைவர்கள் அவர்தம் தொண்டைப் போற்றினர். தம் இறுதிநாள் வரையில் பிள்ளை அவர்கள் - அப்பணியிலேயே கருத்திருத்தி வந்தனர். கடைசியாக அவர்கள் காஞ்சிபுர அஞ்சல் நிலையத்தை மேற்பார்க்கச் சென்றபோது அங்கேயே 21-2-1906 நாளாகிய சிவராத்திரி நாளிலே மறைந்தார். அவர் தம் துய சிவ நெறியும், கடமை உணர்ச்சியும், அமைதி உள்ளமும் அவரைக் கற்றார் வாழ் காஞ்சியிலே சிவராத்திரி நாளிலே ஏகம்பன் இணையடிக்கு உரிமையாக்கின என்றார்கள் அறிஞர்கள்.

கனகசபைப் பிள்ளை அவர்கள் அறிவைப் போற்றி வளர்த்ததோடமையாது - உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - என்ற மொழிக் கிணங்க நல்ல முறையில் உடம்பைப் பேணி வளர்த்தார்கள். இளமையிலேயே நல்ல தேகப்பயிற்சி செய்து திண்ணிய உடலைப் பெற்றவராகி விளங்கினார்கள். சில ஆண்டுகள் இவர் வலங்கிமான் சோதிடர் உபதேசத்தால் யோகப் பயிற்சி செய்தார் என்றும் கூறுவர். இவரது உடற்பொலிவைப் - பரந்த நெற்றி, அகன்ற உருண்டை முகம், குவிந்த கண், பெரிய தலைப்பாகை, கருத்தமீசை, எடுத்த தோற்றம் ஆகிய இவை, பார்த்தவுடனேயே இவர் ஒரு நல்ல தமிழர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன - என்று தமிழர் போற்றத் தவறவில்லை. இத்தகைய திண்ணிய உடலும் நுண்ணிய அறிவும் பெற்ற இவரை, இவரது தந்தையாரோடு யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தமிழ்ப்பணி புரிந்த சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் போற்றும் முறை நோக்கத்தக்கது.

யாழ்ப்பாணத்து மல்லாகம் விசுவநாதப் பிள்ளை அவர்கள் புத்திரரும் தமிழ்க்கலை விநோதம் தமக்குப் பொழுது போக்காக உடையவருமான ஸ்ரீ கனகசபைப்பிள்ளை” - என்று தாமோதரம் பிள்ளை அவர்கள் இவரைப் போற்றித் தம் கலித்தொகை முகவுரையில் 1897-ம் ஆண்டு கூறியிருப்பது அறிந்து இன்புறத் தக்க தொன்றாகும்.

மேலும் இவரது – “ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் தமிழர்” - என்ற நூலைப் பயின்றவராகிய டாக்டர் வி. ஏ. ஸ்மித் என்னும் வரலாற்று ஆங்கிலப் பேராசிரியர் இந்நூலைப் பயின்ற காரணத்தால்தான் போலும் – “இந்திய சரித்திரம் தென்னிந்தியாவிலிருந்து தொடங்கி எழுதப் பெறாத வரையில், அது முற்றுப் பெற்றதாகாது” - என்று கூறிச் சென்றனர்.

இவர் இளமையிலிருந்தே தமிழ்த்துறையில் ஊக்கங்காட்டி உழைத்து வந்தபோதிலும் பிற்றைநாளில் பெரூக்கங்கொண்டமைக்கு அறிஞர் ஒரு காரணம் காட்டுவர். இவர் தமது 29-வது வயதில் - 1884ல் தம் தந்தையையும் அடுத்த ஆண்டிலேயே தம் தாயையும் இழந்தார். அத்துடன் அடுத்தடுத்துத் தம் இரண்டு குழந்தைகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இப்படிப் பெற்றோரையும் பெற்றாரையும் ஒரு சேரத் தொடர்ந்து சில்லாண்டுகளில் இழக்க நேர்ந்த கொடுமையே அவர் உள்ளத்தை அழியாத் தமிழன்னையின் வளர்ச்சித்துறைக்கு செலுத்தியது என்பர். எப்படி யாயினும் அவர் அலுவலுக்கிடையில் அன்னைத் தமிழுக்கு என்றென்றும் போற்றக்கூடிய வகையில் அவர் ஆற்றிய பணியினை தமிழ்நாடு உள்ளவரை - ஏன் உலகம் உள்ளவரை - தமிழரால் வரலாற்று ஆசிரியர்களால் மறக்க முடியாது. இவரது அறிவாற்றலை அன்றைய தமிழகம் போற்றிற்று. கல்வித்துறையில் இல்லாவிட்டாலும் இவரை அத்துறைக்கு ஈர்த்து பல்கலைக்கழகத்தார் பி .ஏ .எம் .ஏ பட்டங்களில் தேர்வாளராக்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் இவரது ஈடும் பெருமையும் கருதி - 1905-ம் ஆண்டில் அச்சங்க ஆண்டு விழாவிற்கு தலைவராய் வரவேற்றது.

பிள்ளையவர்கள் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினர். தமிழில் பல கட்டுரைகள் எழுதியது போன்றே ஆங்கிலத்திலும் எழுதினார்கள். இருமொழிகளிலும் உள்ள பயன்படுவனவற்றை மாற்றி மொழிபெயர்த்தனர். இவரது ஆங்கில எழுத்தின் சிறப்பு எட்வர்ட் இளவரசர் இந்திய நாட்டுக்கு வந்தபோது இவர் ஆங்கிலத்தில் பாடிய வரவேற்புக் கவிகளால் நன்கு விளங்குமென்பர்.

இவ்வளவு அரும் பேறாற்றல் பெற்ற பெரியார் பிரிந்து இன்றைக்கு 45 ஆண்டுகள் ஆகின்றன. எனினும் அவர் புகழ் மங்காமல் உள்ளது. ஏன்? அவர் எழுதிய "1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்' என்ற நூலே அவரை என்றும் வாழவைக்கின்றது. ஆம், இனி அந்நூல் வழி அவர் பெருமையைக் காண்போம்.

தமிழர் தம் பண்டை வரலாறுகளை அறியச் சாதனமாக இருப்பன அக்காலத்து எழுதப்பட்ட இலக்கியங்களே ஆகும். கடைச்சங்கக் காலமென்று பேசப்படும் இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த இலக்கியங்களை, பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்று பாகுபடுத்தினர். அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய இலக்கியங்களும் எழுந்தன. இவற்றை வெறும் எழுத்தோவியம் என்று மட்டும் எண்ணிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் கனகசபைப் பிள்ளை அவர்கள் வெறும் எழுத்தோவியங்கள் எனக் கொள்ளாது தமிழர் தம் பண்டைப் பெருமையை விளக்கும் வரலாற்று ஓவியங்களாகக் கொண்டனர். இந்த இலக்கியங்களின் உறுதுணை கொண்டு அன்றைய தமிழ்நாட்டு வரலாற்றை முதன் முதன் வெளியிட்ட பெருமை இவருக்கே உண்டு.

தம் ஆராய்ச்சியிற் கண்ட முடிபுகளை அவ்வப்போது 1895க்கும் 1901க்கும் இடையில் - மதராஸ் ரெவியூ - என்ற ஆங்கில இதழில் வெளியிடலானார் பிள்ளையவர்கள். அவற்றுள் முதற் கட்டுரை வெளியான உடனேயே அதைப்படித்து, அதன் ஏற்றத்தைப் புகழ்ந்தவர் பலராவர். அவருள், அக்காலத்துச் சென்னை உயர்நீதி மன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த சர் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் சிறந்தவர். அவர் பிள்ளை அவர்களை ஊக்கி மேலும் அது போன்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வர வேண்டினர். அவ்வாறே பிள்ளை அவர்கள் ஆறு ஆண்டுகளிலும் தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியிட்டனர். கட்டுரைகள் பல வெளிவந்தபின், அவை வெறும் இதழ்களில் சிதறிய கட்டுரைகளாக இருப்பதினும், தொகுக்கப் பெற்றுச் சிறந்த நூலாகப்பெறின் சிறந்த பயன் நாட்டுக்கும் உலகுக்கும் உண்டு என்றனர் நண்பர். அவர் தம் விழைவையெல்லாம் நிறைவேற்றவும், தமிழரின் பண்டைப் புகழ் பாரில் ஓங்கவும் திரு.பிள்ளை அவர்கள் 16-1-1904ல் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் - என்ற நூலை வெளிக் கொணர்ந்தனர். இந்நூலைத் தன்னை இத் துறையில் தளராவகையில் ஊக்கிய உயர்நீதி மன்றத் தலைவர் சர் சுப்பிரமணிய ஐயர் அவர்களுக்கே உரிமையாக்கினார்கள். தமிழர் மட்டுமின்றி எந்நாட்டவரும் இந்நாட்டியல்பை அறிந்து போற்றும்படி ஆங்கிலத்தில் பிள்ளை அவர்கள் இந்நூலை எழுதித் தந்தது ஒரு பெரும் பேறென்று கொள்ளல் வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நிற்கின்ற நமக்கு நம்நாட்டு வரலாற்றை ஆராய்வது அவ்வளவு கடினமாகத் தோன்றாது. பலர் அத்துறையில் வழிகாட்டியுள்ளனர். வரலாற்று மூலங்கள் பலப்பலவாகப் பல்கிப் பெருகியுள்ளன. ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே தமிழர் தம் பண்டை வரலாறு இன்னதென ஆராயவேண்டும் என்ற எண்ணமே தோன்றா. அற்றை நாளிலே தாமே முன்னின்று முயன்று முதன்முதலாக இத் தமிழ் நாட்டு வரலாற்று நூலைக் கொண்டுவந்த கனகசபைப்பிள் ளையைத் தமிழகம் தலைமேற்கொண்டு போற்றக் கடமைப்பட்டுள்ளது. இதுவரை தமிழக ஆராய்ச்சியிற் புகுகின்ற யாரும் அந்நூலைப் பற்றிக் கூறாது செல்ல வில்லை. தக்க சான்றுகளும் மூலங்களும் கிடைக்காத அந்த முன்னைய நாளிலே அவர்கண்ட முடிபுகளில் ஒரு சில தற்போது முரண்பட்டதாகக் காணப்படினும், பெரும்பாலான கருத்துக்கள் அன்றும் இன்றும் ஒப்பவே ஏற்றுக் கொள்ளப்பட்டனவாக அமைவது அவர்தம் ஆழ்ந்த ஆராய்ச்சி நிலையினைப் புலப்படுத்துவதாகும்.

பிள்ளையவர்கள் தம் நூலைப் பதினாறு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றுள் தமிழக நிலப் பிரிவுகளையும், தமிழகத்தைச் சுற்றியுள்ள நாடுகளையும், அன்றைத் தமிழர் அந்நிய நாட்டாரோடு கொண்ட வாணிய வளனையும், அன்று தமிழ் நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களின் நிலையும் எடுத்துக்காட்டியுள்ளார்கள். அவற்றுடன் தமிழ்நாட்டை ஆண்ட முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியரைப் பற்றியும், அவரை அண்டியும், தனித்தும் வாழ்ந்த சிற்றரசர்களைப் பற்றியும் குறித்துள்ளனர். மேலும் அக்காலத்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், பிற பண்பாடுகளையும், பிள்ளை அவர்கள் தெள்ளத் தெளியக் காட்டியுள்ளனர். நூலின் பிற்பகுதியில் அன்று தோன்றிய குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற வாழ்விலக்கியங்களைப் பற்றியும், அவை பாடிய புலவர்களைப் பற்றியும், பிற புலவர்களைப் பற்றியும், நன்கு ஆராய்ந்துள்ளனர். இறுதியாக அன்றைய தமிழ்நாட்டுச் சமய நிலைப் பற்றியும் அது வாழ்வோடு பிணைக்கப்பட்ட விதத்தையும் கூற மறக்கவில்லை பிள்ளை அவர்கள். இவ்வாறு எல்லாப் பொருள்களையும் ஒரு சேரத் தொகுத்த ஒரு பெரு வரலாற்று நூலைத் தமிழ் இலக்கியங்களையும், அக்காலத்துத் தமிழ் நாட்டுக்கு வந்து சென்ற பிற நாட்டு அறிஞர்தம் குறிப்புகளையும் கொண்டு முடித்து, இறுதியில் தமிழன் தற்போதுள்ள நிலையையும், இனியும் தமிழ்நாடு தன் பண்டைப் பெருமையில் தளராதோங்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறி முடிக்கின்றார்கள்.

சிதறுண்ட தமிழகத்தைச் செம்மைப் படுத்த எண்ணிய கனகசபை பிள்ளை அவர்களின் - தமிழர் 1800 ஆண்டுகளுக்கு முன் - என்ற நூலின் இறுதி வாக்கியங்கள் இவை.

"தமிழர்கள் இன்னும் தங்கள் பழைய மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, அஞ்சாத தற்கெல்லாம் அஞ்சி, அனைத்தும் பொய் என்று வேதாந்த மனப்பான்மை கொண்டு, வாழ்வை வெறுத்து வருங்கால வளத்தை கனவு கண்டுகொண்டு மட்டும் இருப்பார்களானால் அவர்கள் நிச்சயமாக, உலகவாழ்வுப் பாதையில் எங்கோ பின்தங்கி காட்டுமிராண்டிகளாகத்தான் இருப்பார்கள்.'

ஆனால் அவர்கள் மேலை நாடும் கீழைநாடும் இணைந்ததால் உண்டான புது நாகரிகத்தைப் பின்பற்றி, பேராசையின்றி, சாதிமத வேறுபாடுகளைக் களைந்து, ஆண்களோடு பெண்களையும் கல்வித் துறையில் முன்னேற்றி அவர்களை நல்ல வாழ்வாசிகளாகவும் தாயர்களாகவும் ஆக்கி, அறிவுத்துறையால் அறிவியல் துறையைச் சீராக்கி, கைத்தொழிற் கல்லூரிகளை ஓம்பி வளர்த்து குறுகிய மனப்பான்மை கொண்ட சமயத் துறையிலுள்ள மாசுகளைப் போக்கி செம்மைப்படுத்தி, இந்துசமயமே கடவுளைக் காட்டும் மெய்ச் சமயம் என்பதை நிலைபெறச் செய்து தலைநிமிர்ந்து வாழத் தொடங்குவார்களானால் அத் தமிழர்கள் உலகில் முன்னேறும் பல பெருஞ் சமூகங்களிடைத் தாமும் முன்னேறி ஏற்றமுறுவர்.

அறிவிலும், முன்னேற்றத்திலும் மேலோங்கும் அத்தமிழர் தம் தலைவர்கள் சீர்திருத்தங்களுக்குக் காலம் வரும் என்று காத்திராது, தாங்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக நின்று, புத்தம்புதிய வாழ்வுக்கு வேண்டிய வளம் பெருக்கும் நல்ல கருத்துக்களைத் தம்தம் வீடுகளிலும், சுற்றிலுமுள்ள சுற்றத்தார் வீடுகளிலும், ஊர்களிலும் மெள்ள மெள்ள, வெறும் ஆவேச உணர்ச்சி வகையிலல்லாது செயல் துறையில் புகுத்தி நாடுவாழ நல்வழி காட்டுவார்களானால் அவர்தம் அரும் பெயர்கள் தமிழர் தம் வருங் காலத்தில் அவர்தம் இனம் உள்ளவரையில் வழி வழியாக நிலை பெற்றிருக்கும் என்பது உறுதி.''

இவையே கனகசபைப் பிள்ளை அவர்களின் இறுதிமொழிகள். இவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்றிருப்பினும், இன்றைக்கும் தமிழர்களுக்கு ஏற்ற உரையாக அமைகின்றன. தமிழர்கள் - சிறப்பாகத் தலைவர்கள் - அவர்தம் வாய்மொழியைப் போற்றி நடந்து நாட்டை வாழ்விப்பார்களாக.

 -    அ. மு.பரமசிவானந்தம்

-    நூல்: இலங்கைப் புலவர்கள்

-    வெளியீடு: ஒற்றுமை நிலையம், 8 வியாசராவ் தெரு, தியாகராய நகர், சென்னை

-    ஆண்டு: 1952

March 23, 2025

அரசகேசரி

அரசகேசரி

தென்கோவை, ச. கந்தையபிள்ளை -

செந்தமிழ், தொகுதி XII, பகுதி 3, சனவரி-பெப்ரவரி 1914

வர் இற்றைக்கு முந்நூற்றைம்பது வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்த ஓர் அரசிளங்குமரரும், புலவர் பெருந்தகையுமாவர். முன்னாள் முச்சங்கங்கொண்டு தமிழைவளர்த்த பாண்டியர்கள்போல, நெடுங்காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து தமிழை வளர்த்த ஆரியச் சக்கிரவர்த்திகளது மரபில் உதித்தவர். வடமொழி தென் மொழிகளில் வல்ல வித்வன்மணிகளாகிய பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் மன்னர் பெருந்தகைகளுக்கு மருகர். 

இவ்வரசிளங்குமரர், வடமொழி தென்மொழிகளிலே தக்கபாண்டித்திய முடையரும், காவியசாத்திரவிநோதருமாயிருந்தமையால், இராச்சிய பரிபாலனசிரமமின்றிப் பிறிதொருமாளிகையின் கண்ணே தனித் துறைவாராயினர். இவர் வாசஞ்செய்த இடம் இப்பொழுது அரசகேசரிவளவு என்னும் பெயரால் வழங்கப்படுகின்றது. இது நல்லூரின்கண் உள்ளது. இவ்வாரியச்சக்கிரவர்த்திகள் நல்லூர் என்னும் இடத்தையே இராசதானியாக்கி அரசுபுரிந்தனர். இவர்களுடைய இராசமாளிகைகளும், பிறவும் இருந்த இடம் இப்பொழுது "சங்கிலிதோப்பு" என்னும் பெயரால் வழங்கப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும். இவ்வம்சத்துக்கடைசியரசன் பரராசசேகரனது காமக்கிழத்தி மகனாகிய சங்கிலி என்பவனாதலின் இவ்விடம் அவன்பெயரால் வழங்கப்படுவதாயிற்று. இங்கே பழைய அரண்மனை வாயிற்கோபுரமும், கிலமடைந்த பழையமாளிகைகளது சுவர்களும், “யமுனா ஏரி" என்னும் முப்புடைக் கூபமும், பிறவும் காணப்படும். இவ்வரசர் வரலாறுகளும், இவர்கள் விரும்பியவாறு தொண்டைமண்டல முதலிய இடங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் வந்துவசித்த வேளாளப்பிரபுக்களது வரலாறுகளும், பிறவும் "கைலாசமாலை", "யாழ்ப்பாணவைபவமாலை", ‘வையாபாடல்" முதலிய பழைய சரித்திர நூல்களிலே காணப்படும்.

பரராசசேகரன், செகராசசேகரன் என்பார், செந்தமிழ்ச்சங்கமொன்று தாபித்து, தமது முன்னோர்போல, யாழ்ப்பாணத்திலே தமிழ்க்கல்வியை விருத்தி செய்தனர். இவர் காலத்திலே யாழ்ப்பாணம் செந்தமிழணங்கிற்குத் திருவரங்காயிற்று என்பர். இவ்விருவரும் அக்காலத்திருந்த சங்கப் புலவர்களைக்கொண்டு பலநூல்களை இயற்றுவித்ததோடு, தாமும் "பரராசசேகரம்,' ''செகராசசேகரம்" என்று தத்தம் பெயரால் ஒவ்வொருநூல் இயற்றினர். பரராசசேகரம்" மிகச்சிறந்த வைத்திய நூல். இதிற் சிற்சில பாகங்களே யாழ்ப்பாணத்துள்ள சிற்சில பரம்பரை வைத்தியர்களிடம் காணப்படுகின்றன. மற்றைய "செகராசசேகரம்" சோதிடநூல். இஃது அச்சிடப்பட்டுப் பலராலும் படிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய சங்கப்புலவர் இயற்றிய நூல்களும், முன்னிருந்த சம்ஸ்தான வித்வான்கள் இயற்றிய நூல்களும், யாழ்ப்பாணம் போர்த்துக்கேய மன்னர் கைப்பட்ட பிற்றைநாட்களில் அன்னவர் கொடுங்கோன்மையாற் சிதைந்துபோயின. இக்கொடுங்கோன் மன்னர் யாழ்ப்பாணத்துச் சைவாலயங்களுக்கும், சமயாசாரத்துக்கும் விளைத்த தீமைகள் அளவிடற்கரியன. இவ்வாரியச்சக்கிரவர்த்திகளுக்கு அமைச்சராயினாரெல்லாம் தமிழ்ப்புலமையினும் மிகச் சிறந்தோராவர். இவர்களுள் ஒருவர் பாடிய சில வெண்பாக்கள் "யாழ்ப்பாணவைபவமாலை" என்னும் நூலிற் காணப்படும்அடி யார்க்குநல்லாரும் இவ்வமைச்சருள் ஒருவர் என்பர். இவர், செந்தமிழ்ப்பரிபாலனத்திலும், தமிழ்ப்புலமையிலும் சிறந்த குணபூஷண சிங்கையாரியச்சக்கிரவர்த்திக்கு அமைச்சராயிருந்தவர். இத்துணைப் பெருஞ்சிறப்பினையுடைய இவ்வாரியச்சக்கிரவர்த்திகளதுமரபில் உதித்த அரசகேசரியார், தமது மாதுலராகிய பரராசசேகரமகாராசாவுடைய அநுமதப்படி, வடமொழியிலே காளிதாசமகாகவி இயற்றிய இரகுவம்சம் என்னுங்காவியத்தைத் தமிழிலே பாடினர். அது பின்வரும் செய்யுட்களால் அறியப்படும்.

வன்றிசைக்காளிதாசன்வடமொழி

தென்றிசைத்தமிழானனிசெப்புகேன்

நன்றிசைக்குமுறைவழின்னெடுங்

குன்றிசைப்பதுபோலுங்குறிப்பரோ,

 

இன்னகாதையியன்றவிரும்பொருட்

டுன்னுசெஞ்சொற்றுகடபுதூய நூல்

பன்னுசெஞ்சொற்பரராசசேகர

மன்னனின்பமனங்கொளவாய்ந்ததே. (இரகுவம்.பாயிரம் - அ;கூ)


இவர், இராசமாளிகைக்குச் சமீபத்திலே உள்ள ஒரு செந்தாமரை வாவியினருகே புதிதாக அமைக்கப்பட்ட ஒரு வைசித்திரியமான மாளிகையின் மேன்மாடத்து வீற்றிருந்து இந்நூலைப் பாடினார் என்பர். இத்தாமரைப்படுகர் "நாயன்மார்கட்டு" என்னும் இடத்திலுள்ளது. இவ்விடம், முன் அடியார்க்குநல்லார் என்னும் புலவர் திலகரால் அறுபான்மும்மை நாயன்மாருக்குத் திருமடம் அமைத்து மாகேசுரபூசை செய்விக்கப்பட்டு வந்தமையால், பிற்றைநாளில் "நாயன்மார்கட்டு" என வழங்கப்படுவதாயிற்று. இந்நூலின்கண் இடையிடையே காணப்படுகின்ற கற்பனாலங்காரமமைந்த சில செய்யுட்களும், இவர், செந்தாமரைப்படுகரின் பாங்கரிலிருந்து பாடிய உண்மையை ஒருவாறு புலப்படுத்துவனவாகும்.

இட்டமெத்தியவெய்யவரிடுக்கண்வந்திறுத்தால் முட்டவத்தலைப்பகைவராகுவரெனமுன்னோர் பட்டுரைத்தனகாட்டுமாபானுவாற்பரியுங் கட்டகட்டலைக்கொட்டைவான்சரோருகக்களையே.

பச்சடைப்பதுமத்தாதிபாங்குறப்பாய்காற்பாணி

நிச்சயமருத்துச்செய்ய நீலங்கணெக்குநோக்க

அச்சிலதேரை வாய்விட்டரற்றமெல்லணையினாய

கச்சபவெரின் மீதேறிக்கம்புசூல் கழிக்குமன்னோ. (நாட்டுப்ப - 25 - 46)

இந்நூல், சொல்லணி பொருளணிகள் நிரம்பி, அரிதினுணர் தற்பாலனவாகிய சொற்றொடர்களும், சொற்களும் மலியப்பெற்று விளங்குகின்றது. இந்நூலிற்காணப்படும் பிரயோகங்களும், பிறவும் நூலாசிரியர் வடநூல்களிலும், தொல்காப்பியம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய தமிழ்நூல்களிலும் மிக்க பரிசயமுடையார் என்பதை நன்கு புலப்படுத்தும். பாயிரச்செய்யுட்கள் கம்பராமாயணப் பாயிரச்செய்யுட்களது போக்கும் நோக்கும் உடையன. ஆற்றுப்படலச்செய்யுட்களும், நாட்டுப்படல நகரப்படலச் செய்யுட்களும், விநோதம் பயப்பனவாக அமைக்கப்பட்டுச், சிலேடை முதலிய பலபொருளணிகளுக்கு இடனாய், ஆன்றபொருள் தந்து பொலிகின்றன. நாட்டுப்படலத்திலே, திணைமயக்கம், மற்றைய காவியப்புலவர்களிலும் மிகவிநோதமாகப் பாடப்பட்டுள்ள தென்பது அச்செய்யுட்களை நுண்ணிதின் ஆராயுமிடத்துப் புலப்படும். திக்குவிசயப்படலத்திலுள்ள அநேக செய்யுட்கள், கற்பனாலங்காரங்களை யெல்லாம் நன்றிசைக்குமுரைவழி நன்னெடுங் குன்றிசைப்பதுபோல முதனூலில் இருந்தவாறே நன்கு தெரித்து நிற்பன. சீதைவனம்புகு படலத்திலுள்ள செவ்விய மதுரஞ் சேர்ந்த சீரிய செய்யுட்களும், அதற்குப் பின்னுள்ள மற்றைய படலச் செய்யுட்களும் கம்பராமாயணத்துக் கூறப்படாது விடப்பட்ட அரிய விஷயங்களையெல்லாம் எடுத்துக்கூறுவனவாகும். அது,

 'கற்றார்கலியின் பெரிதாந் தமிழ்க் கம்பநாட

னுற்றாங் குரைத்தா னுரையாதனவோது கிற்பாம்''

என்பதனானு மறியப்படும் - (இரகு. திருவவ. ருசு)

 

இந்நூல் யாழ்ப்பாணத்திலே பண்டைக்காலந்தொட்டு, ஆசிரிய மாணாக்க பரம்பரையாகக் கற்கப்பட்டு வருகின்றது. இற்றைக்கு நூறு வருடங்களுக்குமுன் இருந்த இருபாலை நெல்லைநாத பண்டிதர், மாதகல் சிற்றம்பலப்புலவர் முதலிய காவியப்புலமைவாய்ந்த பண்டிதர்கள் இந்நூலின்கண்ணே மிக்க பரிசயமுடையராய், இதனை அநேக மாணவர்களுக்குக் கற்பித்து வந்தார்கள் என்பது கர்னபரம்பரை. நெல்லைநாத பண்டிதர் குமாரராகிய மஹாவித்வான் சேனாதிராய முதலியாரிடத்திலே இந்நூலைக் கிரமமாகக் கேட்டுணர்ந்த நல்லூர் வித்வான் சரவணமுத்து முதலியார் என்பார், இதற்கு ஒரு பொழிப்புரை எழுதிவந்தனர் என்றும், இடையிலே அவர் சிவபதமடைந்து விட்டமையின் அது பூர்த்தியாகவில்லை என்றும், அவ்வுரையிற் பெரும்பாகம் அவரது மாணவர் சிலர்க்குப் பயன்படுவதாயிற்று என்றும் இப்பொழுதைப் புலவர் சிலர் கூறுவர். இந்நூலிலே, "திக்குவிசயப்படலத்திலுள்ள கற்பனாலங்காரங்களமைந்த செய்யுட்களுள்ளே சிலவற்றை, வடமொழி தென்மொழிகளில் வல்லார் படித்து மகிழுமாறு, அம்முதனூற் சுலோகங்களோடு எழுதுகின்றாம்.

கனைகழல்வீரனுங்காவலான்றரு

புனைமணிமுடியொடும்பொலிந்துதோன்றினான்

தினகரன்றிவாந்தகாலத்திற்சேர்த்திய இனவொளியொடுகனலிலங்கிற்றென்னவே.    (திக்குவி.க.)

 

நிமிர்தருமிசையினான்றன்னைநேர்ந்துமுன்

இமிர்தருபுகைக்கனலென்றுநோக்கிய

அமரிடுமதிபலவரசர்பின்னர்தந்

தமரொடுமடுஞ்சிகைத்தழலினோக்கினார்.          (திக்குவி. .)

 

இச்சையாங்கட்புலப்படாளென்றெண்ணினும்

நிச்சமாமன்னவனிறைந்ததேசெனுங்

கைச்சரோருகத்திடைவிளங்குங்கஞ்சமென்

பிச்சமேகொடுதிருப்பெரிதுபேணினாள்.           (திக்குவி. .)

 

குருதிநாறொளிறுவேன்மன்னன்கொற்றமே

கருதிநாவலர்தநாவுறைந்துகாமரு

பரிதிநாண்மலர்ப்பொகுட்டுறையும்பார்தரு சுருதிநாயகன்மயிறுதிப்பதாயினாள்.                (திக்குவி. .)


ஒறாமனுமுதலியமன்னரொண்புய மறாதடைந்திடினுமொர்காலுமன்றலைப்

பெறாளெனப்புதுமணம்பெற்றபெற்றியின்

நறாமலர்ப்புயம்புவிமங்கைநண்ணினாள்.      (திக்குவி. ரு)

 

விறன்மிகும்படைதொடர்ந்திடக்கீட்டிசைவேலை

திறனினோக்குபுசென்றிடுந்திங்கள்வெண்குடையோன்

பெறலருந்தவப்பெற்றியின்வரநதிபின்னர்

உறநடந்திடும்பகீரதன்றன்னையுமொத்தான்.    (திக்குவி.ருசு)

 

வீறுபட்டுடையதானைவேந்தனால்வீயாவீயும்

ஊறுபட்டுடைந்துமீளவுய்ந்துளமன்னரெல்லாம்

சேறுபட்டைம்பூகல்குஞ்செய்யிடைப்பறித்துமீள

நாறுபட்டனபைங்கூழினன்பலநல்கினாரே.     (திக்குவி. சுஅ )

 

சுலோகத்துள்ள சிலேடைப்பொருளமைந்தபாகங்களெல்லாம் இச்செய்யுளில் நன்குவிளக்கப்பட்டமை காண்க.

 

அத்தலையரசர்கோமானதோரணரடக்குவான்செங் கைத்தலத்தெடுத்தவள்வாயங்குசங்கந்துசீறும் பித்திவர்மத்தமாவின்மத்தகம்பிறங்கிற்றென்ன

வைத்தனன்விசயச்சின்னமயேந் திரத்துச்சிமாதோ. (திக்கு.எக)

 

மாவீரவெழி என்பது யானை விசேடம்.. அது பாகன்சொல்லைப் பொருட்படுத்தாத இயல்புடையது. இரத்தம் ஒழுகும்படி தோலைப்புண்படுத்தியவிடத்தும் நிலைதளம்பாது நிற்பது. அதன் மத்தகத்திலே அங்குசத்தை நாட்டுதல் மிக அரியசெயலாயிருத்தல் போல், இரகுவும் வலியமகேந்திரத்துச்சியில் தன்பிரதாபத்தை நாட்டியது மிக' அரியசெயல் என்பது கருத்து. இச்செய்யுளிலே "கந்து சீறும் பித்திவர்மதமா" என்பதனால் மாவீரவெழி என்பது விளக்கப்பட்டது.

 

மிடறொகாவுயர் பரிவெள்ளத்தின்குரம்

இடறவேலஞ்சிதைந்தெழுந்த நுண்பொடி

அடறவாமதமண மடங்கவானையின்

கொடிறுவார்கரடமதடைத்தல் கூடுமே.  (திக்குவி. கஉo)

 

அடல் ஈண்டுத் துல்லியகந்தமுடைமையை உணர்த்திநின்றது.

 

ஆங்கொளிச்சரளத்திற்பிணித்தவானையின்

பூங்கதிர்ச்சங்கிலியதனிற்போகிய

ஓங்கெரிமரத்தடஞ்சுடர்களோவற

வீங்கிருளிரவிற்கே விளக்கமாகுமே.      (திக்குவி. உருஎ)

 

அன்னவர்விழவையச்சமரினோடழித்து

உன்னியவிழவிலராக்கியொண்புகழ்

கின்னரர்பாடவுண்மகிழ்ந்துகேட்டனன்

ன்னிகரிலாவடற்றானைவீரனே.       (திக்குவி. உகக)

 

இமயமலைவாசிகள் கவலை சிறிதுமின்றி என்றும் மகிழ்ச்சியேயுடையராதலின் உத்சவசங்கேதர் எனப்பட்டார் என்பர். இதற்கு முந்திய செய்யுளிலே 'உத்சவசங்கேதர்" என்பது கூறப்பட்டமையால் இங்கே "அன்னவர்" எனச் சுட்டியொழிந்தார்.

 

சீற்றமிற்றன்னவர்திறைசொரிந்தனர்

சாற்றருமன்னற்குஞ்சயிலநாதற்கும்

மாற்றரும்பெருந்தனவளர்வும் வெஞ்சமர்

ஆற்றலுந்தனித்தனியறியப்பட்டவே.   (திக்குவி. உகூஉ)

 

வித்தகவம்மலைநின்றுவெம்முடி

பத்துளனாலெடுபட்டவெள்ளிவெண் அத்திரிதனிற்புகாததற்குநாணினை

வைத்திடுவான்புகழ் வாய்ப்ப மீள்வுறா.       (திக்குவி. உகூகூ)


இன்னும் இவைபோல முழுவதும் மொழிபெயர்ப்பாக அமைந்தனவும், முதனூற்சுலோகங்களின் சிற்சிலபாகங்களே மொழிபெயர்த்துப் பாடப்பட்டனவுமாக இடையிடையே காணப்படுஞ் செய்யுட்களும் பல. அவையெல்லாம் அவ்விருநூல்களையும் ஒருங்குவைத்து இலைப்புரைகிளைப்பார்க்கு எளிதிற் புலப்படுவனவாகும். குசன் அயோத்திசெல்படலம், குலமுறைப்படலம் என்பவற்றிலுள்ள செய்யுட்களுள்ளே மடக்கு என்னும் சொல்லலங்காரவகைகள் அமைத்துப் பாடப்பட்டனவும் பல. அவற்றையும், மாலையீட்டுப்படலம், கடிமணப்படலம் என்பவற்றிலுள்ள கற்பனாலங்காரங்கள் மலிந்த மற்றைய செய்யுட்களையும் படித்து மகிழ்தல் வடமொழி தென்மொழிகளில் வல்ல பண்டிதர்கள் கடன். ஈண்டுவிரிப்பிற் பெருகும். குலமுறைப் படலத்துக்குப் பின்னுள்ள வரலாறுகளும் இவராற் பாடப்பட்டுள்ளன என்பது கர்னபரம்பரை. அவைகளும் மற்றையநூல்கள் போலப் பிற்றைநாளிற் சிதைந்தனபோலும். பின்வரும் குலமுறைப் படலத்திறுதிச் செய்யுளும் அங்ஙனம் பாடப்பட்ட உண்மையை நன்குபுலப்படுத்தும்.

கலைப்படாநின் றவிக்குவாகு வின்மரபின்காட்சித்

தலைப்படாநின்றவேந்தர் தம்பெருந்தகையநீதி வலைப்படானாகிநல்லோரறிவெனும் வாய்மைதன்னுள் நிலைப்படாவிவன்றன் வெய்யநீர்மையைநிகழ்த்துகிற்பாம்.

 

இந்நூல் இப்பொழுதும் யாழ்ப்பாணத்திலே, வடமொழி தென் மொழிகளில் வல்லபண்டிதரும், பரோபகாரப்பண்பினருமாகிய சுன்னாகம் ஸ்ரீ அ. குமாரசுவாமிப்புலவராலும், பிறராலும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. புலவரவர்கள் 'இரகுவம்மிசக்கருப்பொருள்' என்னும் பெயரோடு, இந்நூலிலுள்ள சில அருஞ் செய்யுள்களுக்கும், அருந்தொடர்களுக்கும் பொருளெழுதி வெளியிட்டுமுள்ளார்கள்.

இதுகாறுங்கூறியவாற்றால், அரசகேசரி யென்னும் புலவர் பெருந்தகையினது வமிசவரலாறும், அவர் பரம்பரையினராகிய ஆரியச்சக்கிரவர்த்திகளது செந்தமிழ்ப்பரிபாலனச் செயல்களும், அவர் இபற்றிய இரகுவம்மிசம் என்னும் பெருங்காப்பியத்தினது சிறப்புக்களும், அவரது வடமொழி தென்மொழிவன்மையும், பிறவும் சிற்றறிவிற்கெட்டியவளவில் ஒருவாறு விளக்கப்பட்டன.

இங்ஙனம்,

தென்கோவை, ச. கந்தையபிள்ளை

கொழும்பு.

மூலம்: செந்தமிழ், தொகுதி XII, பகுதி 3, சனவரி-பெப்ரவரி 1914