December 08, 2008

நாவலர் வீதி உருவான கதை

இன்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களை நாம் நீள நினைப்பதற்கு நம்மிடையே நிலவுகின்ற நினைவுச் சின்னங்கள், எச்சங்கள் பலவாகும். அவை பாடசாலைகள், படிப்பகங்கள், பண்ணைகள், நூல்கள், எனப் பலவாகும்.

இவற்றுள் நாவலர் அவர்களை நாம் நீள நினைப்பதற்கு ஏதுவாயுள்ளது நீளமான ஒரு வீதியாகும். அது கிழக்கில் அரியாலை மாம்பழச் சந்தியில் இருந்து மேற்கில் நாவாந்துறை வரை நீண்டதாகும்.


இன்றைய நாவலர் வீதி அன்று நாவாந்துறை வீதி என்றே பெயர் பெற்று நிலவியது. இதனூடாகப் போகும் புகைவண்டிப் வீதியோரமாக அமைந்த ஒரு தரிப்பு நிலையமும் நாவாந்துறைத் தரிப்பு என்றே பெயர் பெற்றிருந்தது.

இவ்வாறாக நாவலர் பாடசாலையில் 1932, 1933 ஆம் ஆண்டுகளில் ஆறாம், ஏழாம் வகுப்புகளில் பயின்று வந்த சரவணமுத்து முதலான மாணவர்களில் சிலர் குறும்புத்தனம் உள்ளவர்களாய் மூன்று சதத்து அஞ்சலட்டையும் ஆறு சதத்து முத்திரையும் வாங்கி தங்களுக்குள்ளேயே தபால்கள் எழுதி நாவலர் வீதி என விலாசமிட்டு, கீழே நாவாந்துறை வீதி என அடைப்புக்குறிக்குள் எழுதி அனுப்பி வந்தார்கள். நாளடைவில் இவர்களின் அபிமானத்தைக் கேட்டறிந்த நகர மாவட்ட சபைத் தலைவர் இ. சிவகுருநாதர் என்பார் இவ்விளைஞர்களைப் பாராட்டி அவ்வீதிக்கு நாவலர் வீதி எனப் பொதுமக்கள் அறியப் பெயரிட்டார்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேர்ந்தது.

நன்றி: மில்க்வைற் செய்தி, ஆனி 1990, கௌரவ ஆசிரியர்: க. சி. குலரத்தினம்.